Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

சோழ மண்டல சதகம்
ஆசிரியர் வேளூர் ஆத்ம நாத தேசிகர்

cOza maNTala catakam of
vELUr AtmanAta tEcikar
In tamil script, unicode/utf-8 format




    Acknowledgements:
    Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned image
    version of this work for the etext preparation. This work has been prepared using the
    Google Online OCR tool to generate the machine-readable text and subsequent proof-reading.
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2017.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are
    http://www.projectmadurai.org/

சோழ மண்டல சதகம்
ஆசிரியர் வேளூர் ஆத்ம நாத தேசிகர்

    Source:
    சோழமண்டல சதகம்
    இராசு, செ
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
    முதற் பதிப்பு (1994)

    வேளூர் ஆத்ம நாத தேசிகர் இயற்றிய சோழ மண்டல சதகம் 1995 இல் தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டையொட்டி உரையுடன் வெளியிடப்பட்டது. ஏனைய மண்டல சதகம்போல் கட்டளைக்கலித்துறையில் பாடாமல் எளிய அறுசீர் விருத்தத்தால் பாடப்பட்டுள்ளது. சோழ நாட்டுச்சிறப்பு, மன்னர்கள், வள்ளல்கள், அடியார்கள், புலவர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளனர். கரிகாலன் காவிரிக்குக் கரை கட்டினார் என்றே கூறப்பட்டுள்ளது. பொதுவாக இந்நூல் சோழிய வேளாளர் சிறப்புக்களையே விரித்துப், பெருக்கிக் கூறுகிறது.
    ---------

    அணிந்துரை
    ஒளவை நடராசன்,
    துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்


    சிற்றிலக்கியங்களில் சதகம் என்பது தனிப்பெருமை வாய்ந்ததாகும். ஒருநூறு பாக்களைக் கொண்டு சதகம் பாடும் மரபு மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் திருச்சதகம் எனும் பகுதியில் காணப்படுகிறது. நூல்களுக்கு எண்களால் பெயரிடும் மரபு பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. வரலாற்றுக் கருத்துக்களைச் செய்யுளில் பெய்து கலித்துறை, அறுசீர் விருத்தம், பிற பாவினங்களாகவும் பாடுவது மண்டல சதகங்களின் மரபு. தொண்டை மண்டல சதகம் புகழ் வாய்ந்த வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்வதை அறிஞர்கள் நன்கறிவர். அவ்வகையில் பழந்தமிழ் இலக்கியமான சோழமண்டல சதகத்தைப் பேராசிரியர் புலவர் செ.இராசு அவர்கள் புதையலைக் கண்டெடுத்தவர் போலக் கொண்டு வந்து என்னிடம் காட்டி மகிழ்ந்தார்கள். சோழ நாட்டின் பல்வேறு வரலாற்றுச் செய்திகளைச் செறிவாகக் கொண்டு விளங்கும் சோழமண்டல சதகத்தின் மறுபதிப்பை தமிழ்ப் பல்கலைக்கழகம் இப்போது மகிழ்ச்சியோடு வெளியிடுகிறது.

    ஆலஞ்சேரி மயிந்தன், வேளூர் கிழான், சேந்தன், புத்தூர்வேள் முதலிய பெருமக்களைச் சோழ வள்ளல்களாகக் குறிப்பிடும் செய்தி இந்நூலில் இடம் பெறுகிறது. மயிந்தன் என்ற ஆண்பாற் பெயர் மயிந்தி-மந்தி எனப் பெண்பாற் பெயராக மருவி வழங்குவதை நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் என் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டேன்.

    அந்த வகையில் நுண்ணிய பல செய்திகளை அறுசீர் விருத்தத்தில் வழங்கியுள்ள சோழமண்டல சதகம் வேளூர் ஆத்மநாத தேசிகர் என்ற புலவர் பெருமகனாரால் எழுதப்பட்டதாகும். இந்நூல் சோழ நாட்டுச் சித்தாமூரில் 18 ஆம் நூற்றாண்டில் அரங்கேறியது. இத்தகைய அரிய நூலினைச் சோழமண்டலத்தில் நடைபெறும் எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது வெளியிடுவதில் தமிழ்ப் பல்கலைக்கழகம் பெருமிதம் அடைகிறது. இந்நூலைச் சிறந்தமுறையில் பதிப்பித்த கல்வெட்டுத் துறைப் பேராசிரியர் கல்லெழுத்துக் கலைஞர் புலவர் செ. இராசு அவர்களுக்கு என் மனங்கனிந்த பாராட்டுக்கள்.

    இந்த அரிய நூலைப் பாதுகாத்து வைத்திருந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிப்பிற்காக வழங்கிய இராசிபுரம் கவிஞர் கந்தசாமி அவர்களைப் பாராட்டி மகிழ்கிறேன்.

    18-12-1994 ஒளவை நடராசன்
    ----------

    பதிப்புரை


    தமிழ் இலக்கியச் செல்வங்கள் எண்ணற்றவை. அவை பேரிலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் எனப் பகுக்கப்படும். சிற்றிலக்கியங்களைப் ‘பிரபந்தங்கள்’ என்றும் அழைப்பர். பிரபந்தங்களை 96 வகை எனப் பாட்டியல் நூல்கள் கூறும்.

    96 வகைப் பிரபந்தங்களில் ‘சதகம்’ என்பது ஒருவகை. ‘சதம்’ என்பது 100ஐக் குறிக்கும். சதம் செய்யுள்கள் கொண்ட நூல் சதகம் ஆயிற்று. சதகம் என்றால் நூறு பாடல்களால் இயன்ற ஓர் இலக்கியம் என்பது பொருள். சில சதக நூல்களில் பாயிரம், அவையடக்கம், காப்பு, வாழ்த்துச் செய்யுள்கள் போன்றவை நூற்றுக்குப் புறம்பாக அமைவதும் உண்டு. இச் சோழ மண்டல சதகத்தில் 105 செய்யுள்கள் உள்ளன.

    இச் சொல்லை சத் + அகம் எனப் பிரித்து உண்மைப் பொருளைக் கூறும் இலக்கியம் என்பர் சிலர். சதம் என்பதற்கு நிலைத்திருப்பது, இறுதியானது என்றும் பொருள் கூறுவர்.

    பழந்தமிழ் இலக்கியங்களிற் பல செய்யுள்களின் எண்ணிக்கையால் பெயர் பெற்றுள்ளன. ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு, கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது என அவை அழைக்கப்படும். நாலடியாரை நாலடிநானூறு எனவும், பழமொழியைப் பழமொழிநானூறு எனவும் அழைக்கும் வழக்கமும் உண்டு.

    பஞ்சகம், அட்டகம், நவமணிமாலை, பத்து, பதிகம் என்பன முறையே 5, 8, 9, 10 செய்யுள்களைக் கொண்ட இலக்கியங்கள் ஆகும். இருபா இருபஃது, முனிமொழி முப்பது, ஏரெழுபது, முத்தொள்ளாயிரம், நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்பனவும் எண் குறித்த பெயர்களையுடைய நூல்களே.

    நூறு செய்யுள்களைக் கொண்ட நூல் ஒன்று சதமணி மாலை எனக் குறிக்கப்படுகிறது. நூறு என்ற எண்ணிக்கையை விதந்து கூறாமலும் மிகப் பல நூல்கள் நூறு பாடல்களுடன் உள்ளன.

    சதக இலக்கியங்கள் வடமொழியிலும், ஏனைய திராவிட மொழிகளிலும் நிறைய உள்ளன.

    சதக இலக்கியங்கள் பற்றிப் பல பாட்டியல் இலக்கண நூல்கள் வரையறை செய்து விதிகள் கூறியுள்ளன.

      சயமாம் மிகுபொருள் ஒன்றிள்
      பாநூறு சதகமதே (நவநீதப்பாட்டியல் 10)

      நூறான வெண்பாக் கலித்துறையின்
      ஆதல் சதகம் (பிரபந்த மரபியல் 16)

      விழையும் ஒருபொள்மேல் ஒருநூறு
      தழைய உரைத்தல் சதகம் என்ப (இலக்கண விளக்கம் 847)

      சதகம் என்பதுவே சதச்செய்யு ளாலே
      அகப்பொருள் புறப்பொருள் இரண்டில் ஒன்று அறைதலே (பிரபந்த தீபம் 81)

      அகப்பொருள் ஒன்றன் மேலாதல் புறப்பொருள்
      ஒன்றன் தேலாதல் கற்பித்து ஒருநூறு
      செய்யுள் உரைப்பது சதகமாம் என்ப (முத்து வீரியம் 56)

      பயிலும் ஓர் பாட்டால் நூறு உரைப்பது சதகம் (சுவாமிநாதம் 168)

    என்பன அவை,

    சதக இலக்கியம் ஒரு பொருள் கருதி வருதல் வேண்டும். வெண்பா அல்லது கலித்துறைச் செய்யுளால் இயற்றப் பெறல் வேண்டும். அகப்பொருள், புறப்பொருள் பற்றி அவை அமைய வேண்டும். நூல் முழுவதும் ஒரே செய்யுள் வகையால் பாடப்பெறல் வேண்டும் என்பன சதக இலக்கண விதிகளாகக் கூறப்பட்டுள்ளன.

    பிற்காலத்தில் இவை அனைத்தும் புலவர்களால் மீறப்பட்டுள்ளன என்பது சதக நூல்களிலிருந்து தெரியவருகின்றன. அவை புதியன புகுதல் என்ற விதிப்படி அமைந்தனவாம். இச் சதக நூல்கள் பக்தி, வாழ்வியல் என்ற பொருள்களைப் பற்றியே பெரும்பாலும் எழுந்தன. பக்திச் சதகங்கள் தெய்வீகம் அல்லது தெய்வீகத் தலங்கள் பற்றி அமைந்தன. வாழ்வியல் சதகங்கள் பெரும்பாலும் நீதிச் சதகங்களாக ஏற்பட்டன. நூற்றுக் கணக்கில் சதக நூல்கள் தமிழில் பெருகின.

    சங்க இலக்கியங்களுள் ஒன்றான பதிற்றுப்பத்தைத் தமிழில் நமக்குத் தெரிந்த முதல் சதகம் எனலாம். மாணிக்கவாசகரின் ‘திருச் சதகம்’ தொன்மையான சதக இலக்கியம். அந்நூல் கட்டளைக் கலித்துறை, தரவு கொச்சகக் கலிப்பா, எண்சீர் விருத்தம், எழுசீர் விருத்தம், அறுசீர் விருத்தம், கலிவிருத்தம், கலிநிலைத்துறை ஆகிய செய்யுள்களால் பாடப்பட்டுள்ளன. அந்நூல் அந்தாதி யாப்பில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். பிற்காலத்தில் அகப்பொருள், புறப்பொருள்கள் அல்லாமல் பக்தி, வாழ்வியல், நீதிச் சதகங்களே பெருகின. நாட்டின் வரலாற்றைக் கூறும் மண்டல சதகங்களும் பல தோன்றின.

    கல்வெட்டுக்களில் ‘சோழ நாடு’ என்ற தொடரே முதலில் பயின்று வருகிறது. ‘சோழநாட்டுக் காவிரித் தென்கரை திருவாரூர்க் கூற்றத்துப் பிரமதேயமான அடியப்பியச் சதுர்வேதமங்கலம்’ ‘சோணாட்டும் சோணாட்டுப்படும் புற நாடுகளிலும்’ [S.I.I. 17-617; 3 - 9] என்ற தொடர்களைக் காணுகின்றோம்.

    மாமன்னன் இராசராசன் காலம் முதல் [கி.பி. 985 - 1014] ஒரு நாட்டை மண்டலம் என்று கூறும் முறை பெரிதும் வழக்கத்தில் வந்தது.

    சோழமண்டலம்

    சோழமண்டலத்து அருமொழிதேவ வளநாட்டு
    மங்கள நாட்டுப் புதுக்குடி [ARE 22 of 1922]
    சோழமண்டலச் சீர்மை தஞ்சாவூர் உசாவடி கம்பூர்

    என்ற தொடர்களைக் கல்வெட்டில் காணுகிறோம். இராசராசன் காலத்தில் 1009 ஆம் ஆண்டு ‘மண்டலம்’ என்ற சொல் முதலாவதாகப் பயின்று வந்துள்ளது.

    மண்டலத் தலைவர்கள் ‘மண்டல முதலிகள்’ எனப்பட்டனர். இராமநாதபுரம் சேதுபதிகள் ‘அதிபதியான மண்டலாதிபதி’ என அழைக்கப்பட்டனர். ‘மண்டலிகர்’ ‘மண்டில மாக்கள்’ என உயர் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். விசயநகர ஆட்சிக்குப் பின் அரசர்களையும், உயர் அதிகாரிகளையும் குறிக்க ‘மகாமண்டலே சுவரன்’ என்ற தொடர் பயன்படுத்தப்பட்டது.

    நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பிய உரையில் சோழநாட்டுப் பிடவூர், அழுந்தூர், நாங்கூர், நாவூர், ஆலஞ்சேரி, பெருஞ்சிக்கல், வல்லம், கிழார் முதலிய ஊர்களில் வேள், அரசு என்ற பட்டம் பெற்று வாழ்ந்த தலைவர்களை ‘மண்டல மாக்களும் தண்டத் தலைவரும்’ ஆவர் என்று கூறுகிறார்.

    சோழர்கள் நாளில்

      பாண்டி நாடு
              - இராசராச மண்டலம்
      கொங்கு நாடு
              - அதிராசராச மண்டலம், சோழகேரள மண்டலம்
      தொண்டை நாடு
              - ஜெயங்கொண்ட சோழ மண்டலம்
      ஈழநாடு
              - மும்முடிச் சோழ மண்டலம்
      நுளம்பாடி
              - நிகரிலி சோழ மண்டலம்
      கீழ்க் கங்கநாடு
              - முடிகொண்ட சோழ மண்டலம்
      மேல் கங்கநாடு
              - கங்கைகொண்ட சோழ மண்டலம்
      தடிகைபாடி
              - விக்கிரம சோழ மண்டலம்

    என அழைக்கப்பட்டன.

    ஒரு நாட்டின் - மண்டலத்தின் பன்முக வரலாற்றுச் சிறப்புக்களையெல்லாம் தொகுத்துக் கூறும் சதக இலக்கியங்கள் மண்டல சதகங்கள் எனப்பட்டன. தமிழில் பல மண்டல சதகங்கள் பிற்காலத்தில் தோன்றின. அவை யாவும் அந்தந்த மண்டலத்தில் பல்விதப் பெருமைகளை விளக்குவதாக அமைந்தன.

    ஈழமண்டல சதகம், கார்மண்டல சதகம், கானாட்டுச் சதகம், கொங்குமண்டல சதகம், தொண்டைமண்டல சதகம், நந்தமண்டல சதகம், பாண்டிமண்டல சதகம், மிழலைச் சதகம் என்பன மண்டல வரலாறு கூறும் வரலாற்றுச் சதகங்களாக அமைந்துள்ளன.

    சோழநாட்டின் பல்வேறு பெருமைகளைச் சிறப்பித்துப் பாடப்பட்ட நூல் சோழமண்டல சதகமாகும். சோழநாடு, சோழ அரசர், அவர்தம் வீரம், ஆட்சிச் சிறப்பு, சோழ நாட்டு எல்லை, நிலவளம், நீர்வளம், காவிரி, வேளாண்மை, நெல்விளைச்சல், உழவர்கள், தலங்கள், திருப்பணி மக்கள், தலைவர்கள், வள்ளல்கள், கொடைச்சிறப்பு, வீரர்கள், சமயப்பெருமை, அடியார்கள், நாயன்மார்கள், சமயத் தலைவர்கள், இலக்கியங்கள், புலவர்கள், பிறசிறப்புச் செய்திகள் பற்றிய பற்பல அரிய செய்திகளை இந்நூல் தொகுத்துக் கூறுகிறது.

    கி.பி. 1723 ஆம் ஆண்டு சோழநாட்டு வேளூர் ஆத்மநாத தேசிகர் என்னும் புலவர் பெருமானால் இந்நூல் பாடப்பட்டது. மராட்டிய மன்னர் சகசி இராமப்பர் என்ற வள்ளல், சித்தாமூர்ச் சோழியர் மரபைச் சேர்ந்த நள்ளாறு வைத்தியலிங்கம் என்பார் மகன் அருணாசலம் ஆகியோரால் ஆதரிக்கப்பட்டவர் என்று தெரிகிறது. இவர் காலம் கி.பி. 1650 முதல் 1728 வரை என்று முனைவர் எ. சுப்பராயலு அவர்கள் கருதுகிறார்கள். (Political Geography of the Chola Country P.I.)

    சோழிய வேளாளர்கட்குக் குருத்துவத் தன்மை வாய்ந்த சைவ ஆச்சார்ய தேசிகர் மரபைச் சேர்ந்தவர். தேசிகர் மரபில் நந்சிகேசுவர கோத்திரத்தைச் சேர்ந்தவர். நன்கு தமிழ் பயின்றவர். இவைகளைத் தவிர ஆசிரியரைப் பற்றிய வேறு விபரங்கள் தெரியவில்லை.

    இந்நூல் சித்தாமூர் பொன்வைத்தநாத சுவாமி திருச்சன்னதியில் அரங்கேற்றப்பட்டது.

    சோழநாட்டு உழுகுடிகளான சோழிய வேளாளர் புகழ் மிகுத்துக் கூறப்பட்டுள்ளது. ஏனைய மண்டல சதகங்களிலும் பெரும்பாலும் வேளாளரே பாடப்பட்டுள்ளனர்.

    அநேகமாக எல்லா மண்டல சதக நூல்களும் கட்டளைக் கலித்துறைப் பாவால் இயன்றவை. ஆனால் இச் சோழமண்டல சதகம் மட்டும் அறுசீர் விருத்தத்தில் பாடப்பட்டுள்ளது. மண்டல சதக நூலில் இது ஒரு புதுமையாகும். பாடுதற்கு எளிய பா மரபை இவர் தேர்ந்தெடுத்துப் பாடியதால் பல பாடல்கள் எளிமையாகப் பொருள் விளங்கும் வண்ணம் உள்ளன.

    சென்ற நூற்றாண்டின் இறுதியில் சித்தாமூர் இராமநாதபிள்ளை மகன் சபாபதி பிள்ளை அவர்கள் சோழமண்டல சதகத்தைப் பதிப்பிக்கும் முயற்சியை மேற்கொண்டார். அவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் நூல் பதிப்புக் குறித்துச் சில அறிவுரைகள் பெற்றுள்ளார். பின் என்ன காரணத்தினாலோ சித்தாமூர் சபாபதி பிள்ளை அவர்களால் இந்நூல் பதிப்பிக்க முடியாமல் போயிற்று.

    1906ஆம் ஆண்டு கும்பகோணத்தில் தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய மகாவித்துவான் ஒருவரிடம் சித்தாமூர் சிதம்பரம்பிள்ளை அவர்கள் சோழமண்டல சதகத்தைப் பதிப்பிக்கும் பணியைத் தந்தார். கும்பகோணம் மகாவித்துவான் பதிப்பிப்பதாகக் கூறிக் காலங்கழித்தார்; பின் அவர் இந்நூலைப் பதிப்பிக்கவே இல்லை.

    பின்னர் குடவாசல் வித்துவான் ஒருவர் சோழமண்டல சதகம் பதிப்பிப்பதாகக் கூறி ஏடுகளை வாங்கிச் சென்றார். அவரும் பதிப்பிக்கவில்லை.

    பின்னர் பலரும் வேண்டிக் கொள்ளவே திருவாரூர் இலக்கண விளக்கப் பரம்பரை சோமசுந்தர தேசிகர் அவர்கள் இந்நூலைப் பதிப்பிக்க முன்வந்தார். சித்தாமூரில் அவருக்குத் தேவையான ஓலைச் சுவடிகளும், காகிதப் பிரதிகளும் கிடைத்தன.

    தஞ்சைக் கலியாணசுந்தரம் உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் எல்.உலகநாத பிள்ளை அவர்களும், திருவாரூர் ‘கமலாஸனி’ பத்திராதிபர் தியாகராச ஞானியாரும் தம்மிடம் இருந்த சோழமண்டல சதகச் சுவடிகளை அன்புடன் சோமசுந்தர தேசிகரிடம் வழங்கினர்.

    சோழமண்டல சதகப் பதிப்புப்பணி நடைபெறும் பொழுது தருமை யாதீனத் தலைவர் தவத்திரு சொக்கலிங்கத் தம்பிரான் அவர்களும், தரங்கம்பாடி தர்மசம்வர்த்தனி விலாசத்தைச் சேர்ந்தவரும், சோழிய வேளாளரில் நாங்கூர் கிழான் மரபைச் சேர்ந்தவருமாகிய ப.அ.முத்துத்தாண்டவராய பிள்ளை அவர்களும், ஐ.சுவாமிநாத பிள்ளை அவர்களும் தக்க அறிவுரைகள் பலவற்றைச் சோமசுந்தர தேசிகருக்கு வழங்கினர்.

    சோமசுந்தர தேசிகர் பதிப்பில் வரலாற்று விளக்கங்கள், பாடப்பட்டோர் வரலாறு என நூலின் தொடக்கத்தில் அளிக்கப்பட்டுள்ளன. மேற்கோள் பாடல்கள் இடையில் தரப்பட்டுள்ளன. சதகப் பாடல்கள் தமிழ் எண்களுடன் உடுக்குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

    இந்நூலில் 105 செய்யுள்கள் உள்ளன [சதகம் 100, சிறப்புப் பாயிரம் 1, காப்பு 1, அவையடக்கம் 1, வாழ்த்து 2].

    இந்நூலின் முதல் பதிப்பு 1916ஆம் ஆண்டு மாயூரம் கமலா பிரஸ் என்னும் அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

    சோழமண்டலத்தின் கலைக்களஞ்சியமாகத் திகழும் இச் சோழ மண்டல சதகம் இன்று கிடைப்பது எங்கும் அரிதாகிவிட்டது. எனவே தஞ்சாவூரில் நடைபெறும் எட்டாம் மாநாட்டின் நினைவாக இந்நூல் தமிழ்ப் பல்கலைக்கழக வாயிலாக வெளியிடப்படுகிறது.

    இப்பதிப்புப் பாடல்கள் பொருள் விளங்கும்வண்ணம் எளியமுறையில் சந்திபிரித்து அச்சிடப்பட்டுள்ளன. செய்யுளுக்குரிய விளக்கங்கள் செய்யுளின் கீழ்த் தரப்பட்டுள்ளன. செய்யுள் கருத்துக்களுக்கு ஏற்பத் தலைப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்ற இடங்களில் மேற்கொள் செய்யுள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. பொருளடக்கமும், செய்யுள் முதற்குறிப்பு அகராதியும் தரப்பட்டுள்ளன. இந்நூலின் பாடல் எண் 30 இல் சுருதிமான் என்பதை நத்தமான் என திருத்தி வாசித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இராசிபுரம் ஊமையாம்பட்டிக் கவிஞரும், தேசியப் போராட்ட வீரரும், தமிழ் இலக்கிய ஏடுகளின் காவலருமாகிய திரு கவிஞர் ந. கந்தசாமி அவர்கள் தாம் அரிதாகப் பேணிப் பாதுகாத்து வைத்திருந்த சோழமண்டல சதக நூலை அன்புடன் வழங்கினார்கள். வேறு சில மண்டல சதகங்களோடு ஒன்றாகக் கட்டம் செய்யப்பட்டிருந்த சோழமண்டல சதகத்தை அறுத்துப் பிரித்துக் கட்டி அளித்த பெருந்தன்மை என் உள்ளத்தை நெகிழ்வித்தது. அவருக்கு என் மனமார்ந்த நன்றி பல்கலைக் கழகத்தின் சார்பில் உரியதாகுக. நூலுக்கு அணிந்துரை நல்கிய தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ஒளவை நடராசன் அவர்கட்கு என் மனமார்ந்த நன்றி உரியதாகுக.

    தமிழ்ப் பல்கலைக்கழகம் ஓலைச்சுவடித் துறையைச் சேர்ந்த ஆய்வாளர் புலவர் ப.வெ. நாகராசன், முதுநிலை விரிவுரையாளர் முனைவர் கே.இரா. மாதவன் ஆகியோர் அரிய அறிவுரைகள் பலவற்றை வழங்கினர். சோழமண்டலத்தின் வரைபடத்தைத் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் துறை முதுநிலை விரிவுரையாளர் முனைவர் கா. இராசன் அவர்கள் வரைந்து உதவினார்கள். இவர்கள் அனைவருக்கும் என் நன்றி உரியதாகுக.

    சோழநாடு தொடர்பான சில செய்திகளைத் திருவாளர்கள் தஞ்சை வழக்கறிஞர்கள் வி.எஸ். இராமலிங்கம், டி.என். இராமச்சந்திரன், சுந்தரப்பெருமாள் கோயில் மா. சிவகுருநாத பிள்ளை, பேராசிரியர் சிவ. திருச்சிற்றம்பலம் ஆகியோர் அளித்தனர். அவர்கட்கு என் மனமார்ந்த நன்றி உரியதாகுக. பதிப்புப் பணிகளில் உதவிய திரு சி. இலட்சுமணன் அவர்கட்கு என் நன்றி உரியதாகுக.

    இந்நூலை நல்லமுறையில் அச்சிட்டு விரைவில் வெளிவருவதற்கு உறுதுணையாக இருந்த காந்தி அச்சகத்தாருக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இதனைப் பல்கலைக்கழக வெளியீடாக வெளியிட அனுமதி அளித்த துணைவேந்தர் அவர்கட்கு நன்றி உரியதாகுக.

    தஞ்சாவூர்,
    25-12-1994

    இங்ஙனம்,
    செ. இராசு
    ---------

    சோழமண்டல சதகம்

    1. சிறப்புப் பாயிரம்

      கொண்டலங் கரத்தின் வேளாண்
              குலத்தில்வந்து உதித்த கோமான்
      கண்டலம் பொழில்சூழ் சிந்தைக்
              கனஅரு ணாச லேந்த்ரன்
      அண்டலர் பரவும் காளை
              ஆத்மநா தன்செய் சோழ
      மண்டல சதகம் கொண்டு
              வண்புகழ் நிறுத்தி னானே.

    மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் ஈகைசெய்யும் வேளாளர் குலத்தில் தோன்றிய சித்தாய்மூர் அருணாசலம் அவர்கள் வேளூர் ஆத்மநாத தேசிகரைக் கொண்டு சோழமண்டல சதகம் பாடுவித்துப் புகழ்கொண்டார்.
    -------------

    2. காப்பு

      திருவளர் வேளாண் செல்வச்
              செழுங்குடி மிகுந்து நாளும்
      வருவளம் தழைத்த சோழ
              மண்டல சதகம் பாடத்
      தருகரம் ஐந்தும் ஐந்தும்
              தாழ்மதம் மூன்றும் மூன்றும்
      உருவளர் முக்கண் நால்வாய்
              ஓங்கலை உன்னி வாழ்வாம்.

    வேளாண்குலச் செல்வர் குடிகள் மிகுதியாக வாழ்ந்து வளம் பெருக்கும் சோழ மண்டல வரலாறு கூறும் இச் சதகத்தைப் பாட விநாயகர் அருள் செய்வாராக.
    -------------

    3. அவையடக்கம்

      ஓர்ஊரைப் பாடுதல்அவ் வூருடைய கோமான்
              ஒருவனைப்பா டுதல்புலவோர்க்கு உரிமையது அல்லால்
      பாரூரும் பலவாய்அவ் வூருடைய பலரும்
              பல்கியஓர் மண்டலத்தைப் பாடுவதும் எளிதோ?
      நேரூரும் பழையனவாய் இருந்தசெய்யுள் வழக்கு
              நிகழ்உலக வழக்கநிலை நின்றதுறை வழியே
      சீரூரும் சோழமண் டலசதகம் தனைநான்
              செப்புகின்றேன் விழுப்பொருளாய்ச் செய்வர்பெரி யோரே.

    ஓர் ஊரைப் பற்றியோ அல்லது அவ்வூரில் வாழும் தலைவர் ஒருவரைப் பற்றியோ பாடுவது என்பது புலவர்க்கு உரிய தொழிலாகும்.

    பல ஊர்களும், அவ்வூர்களில் தலைமைப் பெருமக்கள் பலராகவும் உள்ள ஒரு பெரிய மண்டலத்தைப் புகழ்ந்து பாடுவது எளிதான செயல் அல்ல.

    பழமையான பல ஊர்கள், அவ்வூர்களின் செய்யுள் வழக்கு உலக வழக்கு ஆகிய பல்வேறு துறைகளில் சிறப்பான செய்திகளைத் தொகுத்து இச் சோழமண்டல சதகத்தை நான் பாடுகிறேன். பெரியோர்கள் இந் நூலைச் சிறப்பான நூலாகக் கொள்வார்களாக.
    -------

    நூல்

    4. காவிரியாறு

      பொன்பூத் தமலர்க் கொன்றைமுடிப்
              பொழிமும் மதத்துப் பொலிமருப்பு
      மின்பூத் தகரா சலமுகத்து
              மேலோன் சோழ விநாயகனே
      தென்பூத் தருள்கா விரிபெருகச்
              செய்து நாளும் செழிப்பேற
      வன்பூத் தழைந்து வளர்வதன்றோ
              வளம்சேர் சோழ மண்டலமே.

    சூரபன்மனால் விரட்டப்பட்ட இந்திரன் சீர்காழியில் நந்தவனம் அமைத்துச் சிவபெருமானைப் போற்றி வழிபட்டு வந்தான். ஒருமுறை மழையின்றி நந்தவனம் வாடியது. நாரதர் உபதேசப்படி இந்திரன் விநாயகரை வேண்ட அவர் அகத்தியர் கமண்டலத்தில் உள்ள காவிரிப் பாவையைக் கவிழ்த்தார். அதிலிருந்து காவிரி ஆறு பெருகி சோழ நாட்டில் ஓடி வந்தது. இந்திரன் நந்தவனங்கள் செழித்தன. அவ்வாறு வந்த காவிரியால் சோழநாடு நாளும் வளம் பெற்றது.

    காவிரி வளத்தால் சோழநாடு ‘நீர் நாடு’, ‘புனல் நாடு’ எனப்பட்டது. சோழநாடும் சோறுடைய நாடாகப் புகழப்பட்டது. சோழரை ‘காவிரி புரக்கும் நாடுகிழவர்’ என்று சங்க இலக்கியம் பாராட்டும், சோழர் காவிரியின் தந்தையர் என்றும், காவிரிப் பாவையின் புதல்வர் என்றும், காவிரியின் கணவர் என்றும் புலவர்கள் பாடி மகிழ்ந்தனர்.

    கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
    தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை

    என்று மணிமேகலை காவிரியைப் புகழும் (பதிகம் 24-25).
    --------------

    5. சுவாமிமலை

      வெள்ளி வரையில் ஓர்சிகரம்
              விளங்கும் திருஏ ரகமலையாய்த்
      தெள்ளு தமிழ்க்கீ ரனும்புகழச்
              சிறந்தாய் இடையே சிவன்தெளிய
      உள்ள படியே மெய்ப்பொருளை
              உணர்த்தும் குரவன் உயர்சாமி
      வள்ளல் மகிழும் திருஇருப்பு
              வளம்சேர் சோழ மண்டலமே.

    வெள்ளி மலையில் சிகரம் ஒன்று சோழ நாட்டின் விழுந்து ஏரகம் என்னும் மலையாயிற்று. அறுபடை வீட்டில் ஒன்றாகிய திருவேரக முருகன் சிவபெருமானுக்குப் பிரணவ மந்திரத்தின் பொருளை விளக்கினார். அதனால் ஏரக முருகன் சுவாமிநாதன் எனப்பட்டார். அதனால் ஏரகம் குருகிரி, குருமலை, குருவெற்பு எனப்பட்டது.

    ஏறக்குறைய 20 மீட்டர் உயரமுள்ள செய்குன்றே ஏரகம். 60 படிகள் உள்ளன. இவற்றைத் தமிழ் வருடங்கள் அறுபதினோடு ஒப்பிடுவர். இங்கு முருகனுக்கு யானை வாகனம் உள்ளது. ‘பிணிமுக ஊர்தி ஒண் செய்யோன்’ என்று புறநானூறு (46) கூறும். பூமகளே இங்கு தலவிருட்சமாக (நெல்லிமரம்) உள்ளாள்.

    ஏரகம் என்பது சேலம் மாவட்டத்துத் திருச்செங்கோடு என்றும், நாஞ்சில் நாட்டு வேழிமலை என்றும், குடகில் உள்ள சுப்பிரமணியத்தலம் என்றும் வேறு கருத்துகளும் உள்ளன. அருணகிரிநாதர் சோழ நாட்டுச் சுவாமி மலையையே ஏரகம் எனக்கொண்டு,

    நதியில் காவிரி ஆற்றுக் குள்ளே
    பயில்வளமைச் சோழ நன்னாட்டுக்குள்
    ஏரக நகர்

    காவேரி வடகரைச் சாமி மலையுறை தம்பிரானே
    என்று பாடியுள்ளார்.
    -------

    6. சிதம்பரம்

      எல்லா உயிர்க்கும் சிவகலைக்கும்
              எய்தும் ஒடுக்கம் சிதம்பரமே
      அல்லாது இல்லை அத்தலமே
              அவனி தாங்கும் அருட்புருடன்
      சொல்லார் இதய கமலம்எனத்
              தோன்ற இருந்த தொன்மையினால்
      வல்லார் பணியத் தக்கதன்றோ
              வளம்சேர் சோழ மண்டலமே.

    உலகில் உள்ள எல்லா உயிர்களும், சக்தியும் சென்று அடையத்தக்க ஓரிடம் சிதம்பரம் ஆகும். சிதம்பரம் உலகத்தைத் தாங்கும் அருட்புருடன், நடுநாயகமானது. மிகவும் தொன்மையானது. தில்லை வனத்தில் நடராசப் பெருமான் உறைவதால் ஊரும் தில்லை ஆயிற்று. திருச்சிற்றம்பலம் - சிற்றம்பலம் என்ற பெயரே சிதம்பரம் ஆயிற்று என்பர். அங்கு கனகசபையில் நடராசப் பெருமான் ஆனந்தநடனம் புரிகிறார். இறைவி சிவகாமியம்மை, பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதரும் வழிபட்ட இடம்.

    சிதம்பரம் நடராசர் சோழருக்குக் குலதெய்வம் ஆவார். சோழர்களிற் சிலர் அங்கு பொன் வேய்ந்துள்ளனர். திருமுறை காக்கப்பட்ட இடம்.

    மாணிக்கவாசகர் தம் திருமேனியோடு வெளியில் கலந்த புனிதத்தலம், நந்தனார் முக்தியடைந்த திருத்தலம். திருநீலகண்ட நாயனார் உமாபதி சிவாச்சாரியார் முதலியோரும் இங்கு வீடு பெற்றனர்.
    ------------

    7. திருவாரூர்

      அந்நாள் தமிழ்க்குத் தூதுசென்ற
              ஆதிக் கடவுள் அணிஆரூர்
      பொன்நாட் டினுக்கும் அதிகம்என்று
              போந்தார் இதன்மேல் புகழும்உண்டோ?
      எந்நாட் டினுக்கும் அதிகம்என்றும்
              இதற்கார் உளர்ஏற் றம்என்று
      மன்னாட் டியசீர் பெற்றதன்றோ
              வளம்சேர் சோழ மண்டலமே.

    ஒருமுறை சிவபெருமான் தம் உருவைக் கண்ணாடியில் பார்த்தார். கண்ணாடியில் பார்த்த அழகு உருவைக் கண்டு சுந்தரனே வா என்றார். சுந்தரர் தோன்றினார். தேவ- அசுரர்கள் அமிர்தம் கடையும்போது விடம் தோன்றியது. தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட அவ்விடத்தை எடுத்து வருமாறு சுந்தரரை வேண்டினார். ஆலத்தை -விடத்தை எடுத்து வந்த சுந்தரர் ஆலாலசுந்தரர் ஆயினார்.

    சிவபெருமானின் அணுக்கத் தொண்டராகிய ஆலாலசுந்தரர் அங்கு நந்தவனத்தில் பூக்கொய்ய வந்த கமலினி, அநிந்திதை ஆகியோரைக் கண்டு காமுற்றார்.

    சிவபெருமான் அருளால் ஆலாலசுந்தரர் தம்பிரான் தோழர், ஆரூரர் என்று பெயர் பெற்றுத் திருவாரூரில் வாழ்ந்தார். கமலினியார் பரவையார் என்னும் பெயரில் அங்கு வாழ அவரை மணந்து இல்வாழ்க்கை நடத்திய சுந்தரர் பின்னர் ஒற்றியூரில் வாழ்ந்த அநிந்திதையாரான சங்கிலியாரையும் மணந்தார். அதனால் ஏற்பட்ட ஊடலில் பரவையார் கோபித்துக் கதவடைத்தார். சுந்தரரின் தமிழ்ப் பாடலால் கட்டுண்ட சிவபெருமான் சுந்தரர் பொருட்டுப் பரவையாரிடம் தூது சென்றார். கல்வெட்டில் திருவாரூர் வீதி ஒன்று ‘திருவடிப் போது நாறிய திருவீதி’ என்று கூறப்படுகிறது.

    தேவர்களை வருத்திய அசுரர்களை வென்று முசுகுந்தச் சோழனுக்குத் தேவேந்திரன் தான் திருமாலிடம் பெற்ற தியாகராசப் பெருமானை அளித்தார். முசுகுந்தன் அம்மூர்த்தியைத் திருவாரூரில் பிரதிட்டை செய்தான். இளமுருகு உடன்உறை அம்மை அப்பன் வடிவே தியாகராசர் உருவம். தியாகராச மூர்த்தத்தை உடைய தலங்கள் ஏழு.

      சீரார் திருவாரூர் தென்நாகை நள்ளாறு
      காரால் மறைக்காடு காராயில் - பேரான
      ஒத்த திருவாய்மூர் உவந்ததிருக் கோளிலி
      சத்த விடங்கத் தலம்.

    என்பது பழம்பாடல்.

    திருவாரூர் அரநெறி, திருவாரூர்ப் பூங்கோயில், திருவாரூர்ப் பரவையுண்மண்டளி என்ற தேவாரத் தலங்களை உடைய ஊர். நமிநந்தியடிகள் சமணர் பொருட்டாக நீரில் விளக்கெரித்த ஊர். விறன்மிண்டார் திருப்பணி செய்த தலம். கழற்சிங்க நாயனார் முத்தி பெற்ற தலம்.
    -------------

    8. திருவரங்கம்

      கரங்கள் நாபிச் செழுங்கமலம்
              காட்ட வடிவம் கார்காட்ட
      அரங்க நகர்வாய் நம்பெருமான்
              அமர்ந்தார் என்பது அறியாரோ
      தரங்க வேலை இலங்கையர்கோன்
              தனக்கும் புவியோர் தங்கட்கும்
      வரங்கள் தரும்வை குந்தம்அன்றோ
              வளம்சேர் சோழ மண்டலமே.

    ஒருகால் பிரமன் திருமாலை நோக்கித் தவமிருந்தான். அவர் கூர்மாவதாரமாகத் தோன்றிப் பிரணவத்தையும், அட்டாக்கரத்தையும் உச்சரிக்க அருளினார். பிரமன் அவ்வாறு செய்யக் கார்வண்ணன் கோயில் தோன்றியது. சென்று வணங்கிய பிரமன் மீண்டும் படைப்புத் தொழிலில் ஈடுபட்டான்.

    இட்சுவாகு தேவலோகம் சென்று மணிவண்ணனைக் கொணர்ந்து அயோத்தியில் தாபித்தான்.

    தர்மப்பிரபு என்னும் சோழன் அம் மணிவண்ணப் பெருமானைச் சோழநாட்டில் தாபிக்கத் தவமிருந்தான். இராவண சம்மாரத்திற்குப் பின் இராமன் அயோத்தியில் அசுவமேத யாகம் செய்கையில் சென்று வந்த சோழன் தர்மப்பிரபு சோணாடு வந்து திருவரங்க நகரை எழிலுறச் செய்தான்.

    வீடணன் அயோத்தியிலிருந்து அரங்கநாதப் பெருமாளை ஆன்மார்த்த மூர்த்தியாகப் பெற்று இலங்கை கொண்டு செல்கையில் திருவரங்கம் சந்திர புட்கரணிக் கரையில் வைத்துப் பூசித்தான். சோழ மன்னன் அப்போது ஒன்பதுநாள் விழாக் கொண்டாடினான். பின்னர் வீடணன் இலங்கை செல்லும் போது எடுக்க முயன்றும் அரங்கநாதப் பெருமானை எடுக்க முடியவில்லை. அங்கேயே அவர் குடிகொண்டார் என்பது வரலாறு. ஒன்பது தீர்த்தங்கள் உள்ள புனிதத்தலம். அரங்கம் என்பது ஆற்றுடைக்குறை. காவிரி, கொள்ளிடத்திற்கு இடைப்பட்ட தலம்.
    --------

    9. நல்லடியார்

      பூமாது இருக்கும் பசும்துளவப்
              புயமால் உந்தி பூத்தமறைக்
      கோமான் திருத்தாள் மலர்உதித்த
              குணத்தோர் சற்சூத் திரகுலத்தோர்
      ஆமாறு உலகில் பல்லுயிர்க்கும்
              அனைய கொழுமீ தியின்அளிக்கும்
      மாமாது உறைசோ ழியர்வாழ்வு
              வளஞ்சேர் சோழ மண்டலமே.

    திருமாலின் உந்தியில் உதித்த பிரமனின் கால்களில் தோன்றிய நல்லடியார் வேளாளர்கள். அச் சோழிய வேளாளர்கள் உழவால் உலகம் காக்கின்றனர். (வேளாளர்கள் சற்சூத்திரர் என்று இங்கு குறிக்கப்பட்டுள்ளனர்).
    ---------------

    10. வேளாளர், காவிரி

      நீதி தழைத்த மன்னவரின்
              நெடிய சோழன் நிறைந்தகொழு
      மீதி தழைத்த மனைவாழ்க்கை
              வேளாண் குடியார் சோழியரே
      பூதி தழைத்த பலநதியில்
              பொன்னி நதியே பூமியில்பூ
      மாது தழைத்த மண்டலத்தில்
              வளஞ்சேர் சோழ மண்டலமே.

    உலக மன்னரில் நீதியில் சிறந்தவர்கள் சோழமன்னர். அவர் நாட்டு உழுகுடிகளாம் வேளாளர்கள் மிகச் சிறந்த வாழ்வுடையவர்கள். அவர்கள் நல்வாழ்வுக்குக் காரணமாய் அமைந்து பல நதிகளுட் சிறந்த காவிரியாறு.

    பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்
    இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
    உழவிடை விளைப்போர்

    என்று சோழநாட்டு வேளாளரை இளங்கோவடிகள் பாராட்டுவார் (10 : 148 - 150)

      கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
      விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
      கால்பொரு நிவப்பில் கடுங்குரல் ஏற்றொடும்
      சூல்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்பக்
      குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
      கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
      காவிரிப் புதுநீர்.

    எனக் காவிரியை இளங்கோவடிகள் சிறப்பித்து (10:102 - 109) இது ‘தெய்வக் காவிரியின் தீதுதீர் சிறப்பு’ (10 : கட்டுரை 8) என்பார்.

    உழவர் ஓதை மதகுஓதை உடைநீர்ஓதை தண்பதம்கொள்
    விழவர்ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய்வாழி காவேரி

    என்று காவிரி உழவர்க்குப் பயன்படுவதை இளங்கோவடிகள் குறிப்பார் (7:2:4)
    ------

    11. காவிரி, சோழர் நாடு

      எந்த நதியைப் புகழ்ந்தாலும்
              இதுகா வேரிக்கு இணையென்பார்
      எந்த அரசைப் புகழ்ந்தாலும்
              இவனே சோழற்கு இணையென்பார்
      எந்த நாட்டைப் புகழ்ந்தாலும்
              இதுவே சோணாடு எனஇயம்ப
      வந்த விசிட்டம் ஓங்கியது
              வளம்சேர் சோழ மண்டலமே.

    எல்லா ஆறுகளைக் காட்டிலும் காவேரி சிறந்தது. எல்லா அரசரினும் சோழர் சிறந்தவர். எல்லா நாடுகளிலும் சோழநாடு சிறந்தது.

    தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
    மண்ணாவ தும்சோழ மண்டலமே

    என்று கம்பர் பாடியதாகக் கூறப்படும் தமிழ்நாவலர் சரிதைப் பாடல் கூறும் (25).

    முரசு முழங்கு தானை மூவ ருள்ளும்
    அரசுஎனப் படுவது நினதே பெரும

    என்று சோழனைப் புறப்பாடல் பாராட்டுகிறது (35).

    சங்க இலக்கியத்துள் ‘தண்சோழ நாடு’ (புற. 382), ‘சோழ நல்நாடு’ (புற. 67) ‘நெடுஞ்சோழ நாடு’ (பட். 28) என்று சோழ நாடும், ‘வளம்கெழு சோழர்’ (குறு. 116), ‘மறம் கெழு சோழர்’ (நற். 400), ‘கொற்றச் சோழர்’ (நற். 10) என்று சோழரும் பாராட்டப் பெற்றுள்ளனர். சோழநாட்டை காவிரி நாடு என்றும், சோழனைக் காவிரி நாடன் என்றும் சிலம்பு பாராட்டும். (சிலப் 1 : 5).
    ------

    12. காவிரி

      அங்கார் பொழிய வரும்செழுநீர்
              அநந்த கோடி நதிகளுக்குள்
      இங்கார் நதிகள் ஓரேழும்
              இசைக்கில் அதிகம் ஏழினுக்கும்
      கங்கா நதியே அதிகம்அதன்
              கன்மம் தொலைக்கும் காவிரியே
      மங்கா அதிகம் எனும்நாடு
              வளம்சேர் சோழ மண்டலமே.

    பல ஆறுகள் இருப்பினும் அவற்றுள் ஏழு ஆறுகளே சிறப்பானவை. அவற்றுள் கங்கை தலைமையானது. சிறந்த கங்கையும் தன் பாவம் தீரக் காவிரியில் மூழ்கியது என்று கூறும் காவிரி மான்மியம்.

    திருவையாற்றில் காவிரியில் எறிந்த எலும்பு மலர்கள் ஆயின என்றும், திருமுல்லைவாயிலில் காவிரியில் எறிந்த எலும்பு இரத்தினங்கள் ஆயின என்றும் அவ்வத் தலபுராணங்கள் கூறும்.

    கங்கையிற் புனிதமாய காவிரி

    என்பது தொண்டரடிப்பொடியாழ்வார் வாக்கு (திருமாலை. 23), ‘கங்கையாருழைச் சென்று காவிரியாரை வாங்கி’ என்பார் நச்சினார்க்கினியர் (தொல். பாயிர உரை). காவிரிநீர் கங்கை நீரே என்பார் அடியார்க்கு நல்லார் (சிலப். 10 : 148 - 155 உரை).
    ---

    13. எல்லைகள்

      செல்லும் குணபால் திரைவேலை
              தென்பால் செழித்த வெள்ளாறு
      வெல்லும் கோட்டைக் கரைவிளங்கும்
              மேல்பால் வடபால் வெள்ளாறே
      எல்லை ஒருநான் கினும்காதம்
              இருபா னான்கும் இடம்பெரிதாம்
      மல்லல் வாழ்வு தழைத்தோங்கும்
              வளம்சேர் சோழ மண்டலமே.

    கிழக்கே கடல், தெற்கே வெள்ளாறு, மேற்கே கோட்டைக்கரை (மதிள்கரை - மதுக்கரை), வடக்கே வடவெள்ளாறு ஆகியவை சோழநாட்டு எல்லைகளாம். இதனைக் கீழ்வரும் கம்பர் பாடல் விளக்கும் (சோழமண்டல சதகம். 10 மேற்கோள்). இதனை ஒளவையார் பாடல் என்றும் கூறுவர்.

      கடல்கிழக்குத் தெற்குக் கரைபுரள் வெள்ளாறு
      குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
      ஏனாட்டு வெள்ளாறு இருபத்து நாற்காதம்
      சோணாட்டுக்கு எல்லைஎனச் சொல்

    ‘ஏணாட்டு வெள்ளாறு’ என்ற தொடருக்கு ‘ஏணாட்டுப் பெண்ணை’ என்ற பாடபேதமும் உண்டு (சோழன் பூர்வ பட்டயம் ப. 228). பெண்ணைக்குப் ‘பண்ணை’ என்று மு. இராகவையங்கார் பாடம் கொள்வார் (பெருந்தொகை 2093). ‘காதம் இருபத்துநான்கு’ என்பது தனிப்பாடல் பகுதி.

    26-1-1518-ஆம் ஆண்டைச் சேர்ந்த கிருஷண்தேவராயனின் தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் சேந்தமங்கலம் கல்வெட்டில் நடுவில்மண்டலம் உட்படச் சோழநாட்டின் எல்லை கூறப்படுகிறது. ‘கெடில ஆற்றுக்குத் தெக்கு ஸமுத்திரத்துக்கு மேக்கு தெர்க்கு வெள்ளாற்றுக்கு வடக்கு கோட்டைக்கரை மதுக்கரைக்குக் கிழக்கு’ என்று கூறப்படுகிறது. (SII VIII - 352).
    ----------

    14. தேவாரத் தலங்கள்

      தொண்டை நாட்டில் ஆறைந்து
              தொடர்ந்த பாண்டி பதினான்கு
      கொண்டல் ஈழம் தனில்இரண்டு
              கொங்கில் ஏழு துளுஒன்றே
      தண்து ழாயின் பசும்தொடையார்
              தவள விடையார் தலம்பலவும்
      மண்டு பாதி நெடுங்கோயில்
              மருவும் சோழ மண்டலமே.

    தொண்டை நாட்டுச் சிவத் தலங்கள் முப்பது. பாண்டி நாட்டுச் சிவத்தலங்கள் பதினான்கு. ஈழநாட்டுச் சிவத்தலங்கள் இரண்டு. கொங்கு நாட்டுச் சிவத்தலங்கள் ஏழு. துளு நாட்டுச் சிவத்தலம் ஒன்று. ஏனைய சிவத்தலங்கள் அனைத்தும் சோழமண்டலத்தைச் சேர்ந்தனவே. சோழநாட்டில் 190 பாடல் பெற்ற தலங்கள் உள்ளன. இவைகளைப் பிற்சேர்க்கையில் காணலாம். தொண்டைநாட்டில் 32 தலங்கள் உள்ளன. நடுநாட்டுத் தலங்கள் 22; மலைநாட்டுத் தலம் ஒன்று.

    ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்வியதேசங்களில் 40 தலங்கள் சோழநாட்டில் உள்ளன.
    -----

    15. அடியார்கள்

      பொறையார் தில்லை வாழ்முனிவர்
              புகலிப் பெருமான் சண்டீசர்
      நிறையார் கலையார் பூசலையார்
              நீல நக்கன் புகழ்ச்சோழன்
      முறையார் ஞானத் திருஅகவல்
              மொழிந்த கபிலர் முதலாய
      மறையோர் எவரும் இமையோராய்
              வாழும் சோழ மண்டலமே.

    தில்லை நடராசருக்குப் பணிவிடை புரியும் தில்லை மூவாயிரவர், புகலிப் பெருமானான திருஞானசம்பந்தர், சண்டிகேசுவரர், பூசலார் நாயனார், நீலநக்க நாயனார், சோமாசி மாற நாயனார், ஞானத் திருஅகவல் பாடிய கபிலர் முதலிய வேதம் வல்ல அடியாரான மறையோர் பலர் சோழநாட்டில் வாழ்ந்தனர். இங்கு அந்தணர் மரபைச் சேர்ந்த சிலர் கூறப்பட்டுள்ளனர். பூசலார் தொண்டை நாட்டினர்.
    ---

    16. திருமடங்கள்

      சேணார் பரியே றும்பெரியோர்
              தெய்வப் படிமப் பதம்வைத்தோர்
      கோணா நிலைமை மாணிக்கக்
              கூத்தர் காளைக் குருராயர்
      பூணார் சைவ ராயருள்ளார்
              பொன்னங் கிரியில் புரிமடமும்
      மாணாக் கரும்சூழ் திருஇருப்பு
              வளம்சேர் சோழ மண்டலமே.

    கரிகால் பெருவளத்தான் வடநாடு யாத்திரை சென்று திரும்பிய காலத்துஐந்து மடாதிபதிகளை அழைத்து வந்தார் என்பர். அவர்கள்,

    பரியேறும் பெரியோர்
    தெய்வப் படிமப் பதம் வைத்தோர்
    மாணிக்கக் கூத்தர்
    காளைக் குருராயர்
    சைவராயர்

    எனப்படுவர். இவர்கள் மாணாக்கர்கள் சூழ இருப்பர். இவர்கள் ‘ஐந்து கொத்தார்’ எனப்பட்டனர். இவர்கள் தலைமைத் தலம் திருவிடைமருதூர் ஆகலாம். திருவிடைமருதூர் மருதவாணர் மாணிக்கவாசகற்குத் திருவடி தீட்சை அளித்தார். இதனை,

    இடைமருது அதனில் ஈண்ட இருந்து
    படிமப் பாதம் வைத்தஅப் பரிசும்

    என்ற அவர் வாக்கால் அறியலாம் (2:75-76). இம்மடாதிபதிகளின் வாரிசுதாரர்களுட் சிலர் இன்றும் திருவிடைமருதூரில் உள்ளனர் என்பர்.
    -----------

    17. சிவனுக்குக் கொடை

      எந்தக் குலத்தில் பிறந்தோரும்
              இரப்போர் கரத்தில் ஈவதல்லால்
      அந்தக் கடவுள் மானேந்தும்
              அங்கை ஏற்ப அளித்ததுண்டோ?
      சிந்தைக்கு இனிய சோழியரே
              சிவன்பால் அளித்த சீர்த்தியினால்
      வந்தித் திடும்பேர் பெறுந்தேசம்
              வளம்சேர் சோழ மண்டலமே.

    எக் குலத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் இரவலர் கையில் ஈவதே உலக மரபு. மானை ஏந்தியுள்ள சிவபெருமான் திருக்கரங்களிலேயே கொடை அளித்த பெருமை சோழநாட்டு வேளாளரையே சாரும்.
    ---

    18. மானக்கஞ்சாறர்

      அஞ்சாது அடிகள் பஞ்சவடிக்கு
              ஆம்என்று உரைப்ப அடிவணங்கி
      நஞ்சார் விழிப்பெண் புதுமணத்தில்
              நன்னாள் முடித்த நறுங்கூந்தல்
      நெஞ்சார் மகிழ்ச்சி யுடன்அரிந்து
              நீட்டி உலகில் நீண்டகொடை
      மஞ்சார் மானக் கஞ்சாறன்
              வாழ்வாம் சோழ மண்டலமே.

    கஞ்சாறு என்னும் ஊரில் மானக்கஞ்சாறர் என்பவர் வாழ்ந்து வந்தார். நெடுநாள் மகப்பேறின்றி இறையருளால் பெண் மகவொன்றைப் பெற்றார். அவளைச் சிறப்புடன் வளர்த்துவந்தார். அப்பெண்ணை ஏயர்கோன் கலிக்காமருக்கு மணம் பேசினர்.

    திருமணத்திற்கு முதல்நாள் அடியார் வடிவில் வந்த சிவபெருமான் மானக்கஞ்சாறர் மகளின் கார்மென் கூந்தலைக் கண்டு தன் பஞ்சவடி என்ற பூணூலுக்கு ஆகும் எனக் கேட்டார். தன் உடைவாளால் மகள் கூந்தலை அரிந்து நீட்டினார். அப்போது அடியார் மறைந்தார். சிவபெருமான் மழவிடைமேல் காட்சி தந்தார்.
    -------------

    19. இளையான்குடிமாறர்

      இளையான் இளையான் குடிமாறன்
              இரவில் தெறிந்த முளைவாரி
      முளையா அமுதின் அமுதளிப்ப
              முக்கண் பெருமான் பசிதீர்ந்தே
      கிளையா விடைமேல் தோன்றுதலும்
              கேடி லாத பதம்சேர்ந்தோன்
      வளையா மகிமை படைத்ததன்றோ
              வளம்சேர் சோழ மண்டலமே.

    இளையான்குடி என்னும் தலத்தில் தோன்றிய மாறன் என்பார் சிவபக்தி மிக்குடையவராகத் தம் செல்வத்தையெல்லாம் சிவ தன்மத்திலேயே செலவழித்து ஏழையானார்.

    ஒருநாள் சிவபெருமான் மழைபொழியச் செய்து அடியார் வடிவில் மாறன் இல்லம் வந்தார். அவரை வரவேற்று இருக்கச்செய்து தன் துணைவியாரை வினவினார். மனையாட்டி அன்று விதைத்த நெல்முனையை நினைவுபடுத்தினார்.

    இறைகூடை கொண்டு நள்ளிருளில் காலினால் வழிதடவிச் சென்று நெல்முளை வாரிக் கொணர்ந்து மனைவியிடம் கொடுத்தார். அம்மையார் அதனை வாங்கி சேறு நீக்கி வறுத்து அரிசியாக்கிச் சமைத்து அடியவர்க்குப் படைக்க எண்ணி எழுப்பினர். அங்கு சோதி தோன்றியது. சிவபெருமான் மடிவிடைபோல் காட்சி தந்தார். இளையான்குடி பாண்டி நட்டுத் தலம் என்றும் கூறுவர்.
    ----

    20. அரிவாட்டாயர்

      கூலிக்கு அறுத்த நெல்லரிசி
              குழந்தைக் கீரை மாவடுவும்
      சாலக் கமரின் இடைக்கவிழ்த்த
              தாயன் ஊட்டி தனையரிவாள்
      மேலிட்டு அறுப்ப மாவடுவின்
              விடேல் விடேலென்று ஒலிமுழங்க
      மாலுக்கு அரிய பதம்சேர்ந்தோன்
              வளம்சேர் சோழ மண்டலமே.

    கணமங்கலம் என்னும் ஊரில் வாழ்ந்த தாயர் என்பார் செந்நெல்லில் நல்லவற்றை அமுதாக்கி முற்றாத கீரையையும், மாவடுவையும் சேர்த்து அமுதாக்கி இறைவனுக்குப் படைத்து வந்தார். அவர் செல்வம் எல்லாம் அழிந்தது. கூலிக்கு நெல் அறுத்து வாழ்ந்தபோதும் மேற்கண்டவாறு இறைவனுக்குப் படைத்து வந்தார். கூலிக்கு வேலை கிடைக்காத போது நீரை மட்டும் உட்கொண்டு படையலை நிறுத்தாமல் செய்து வந்தார்.

    ஒருநாள் கால் இடறி வெடிப்பொன்றில் நிவேதனப் பொருளைச் சிதறவிட்டார். இதனால் வருந்திய தாயர் அரிவாளால் கழுத்தை அறுத்துக் கொள்ள முனைந்தார், அப்போது மாவடு கடிக்கும் ஓசையும் உண்ணும் ஒலியும் எழுந்தது. சிவபெருமான் தோன்றித் தரிசனம் தந்தார்.

    கணமங்கலம் இன்று கண்ணந்தங்குடி என வழங்குகிறது. அங்கு அரிவாள் தாய நாயனாருக்குக் கோயில் உள்ளது.
    ---

    21. ஏயர்கோன் கலிக்காமர்

      ஆயும் நீதிச் சுந்தரனார்
              அடுத்து வரலும் ஆங்குஇறந்த
      தூய உயிரும் படைத்தெழுந்து
              சூலை தவிர்த்து தோழமைசேர்
      ஏயர் கோன்நம் கலிக்காமன்
              இல்வாழ்க் கையினீடு எழில்நாடு
      வாயில் நீடு மணிமாடம்
              வளம்சேர் சோழ மண்டலமே.

    பெருமங்கலம் என்னும் ஊருக்கு உடையாராய்ச் சோழன் படைத் தலைவராய் வாழ்ந்தவர் ஏயர்கோன் கலிக்காமர். சிவபெருமான் சுந்தரர் பொருட்டுத் தூது சென்ற நிகழ்ச்சியைக் கேள்வியுற்ற கலிக்காமர் சுந்தரர் மீது வெறுப்புக் கொண்டு வாழ்ந்தார்.

    சுந்தரர்பால் கலிகாமருக்கு அன்பு உண்டாக்க நினைத்த சிவபெருமான் கலிக்காமருக்குச் சூலை நோயை உண்டாக்கினார். அன்றியும் இந்நோய் சுந்தரராலேயே தீரும் என்றார். இறைவன் சுந்தரருக்குக் கட்டளையிட அவரும் வந்தார்.

    சுந்தரர் வருவதைக் கேள்வியுற்ற கலிக்காமர் வாளால் வயிற்றைக் கிழித்துக் கொண்டு இறந்தார். கலிக்காமரின் மனைவியார் (மானக் கஞ்சாறர் மகள்) அழாமல் சுந்தரரை வரவேற்று உபசரித்தார். நடைபெற்ற நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட சுந்தரர் ஏயற்கோன் கலிக்காமரை உயிர்ப்பித்தார். இருவரும் நெடுங்காலம் நண்பர்களாக வாழ்ந்தனர்.
    --------------

    22. கோட்புலியார்

      துதிக்கும் பரமன் பொருள்கவர்ந்த
              சுற்றம் அனைத்தும் சுடர்வாளால்
      கதிக்கும் படிமேல் அறக்கண்டார்
              கயிலைக் கிரியும் காணிகொண்டார்
      குதிக்கும் புதுநீர் நாட்டியத்தான்
              குடிவே ளாளர் கோட்புலியார்
      மதிக்கும் மரபோர் பெறும்காணி
              வளம்சேர் சோழ மண்டலமே.

    திருநாட்டியத்தான் குடியில் வாழ்ந்த வேளாண்குலச் செல்வரான கோட்புலியார் சோழனது படைத்தலைவராய்த் திகழந்த்ார். ஒருமுறை போர்க்களம் செல்கையில் அவர் தம் நெல்லெல்லாம் சிவபெருமான் அமுதுபடிக்கு ஆகவென நெற்கூட்டில் அடைத்து வைத்து அதனை ஒருவரும் தொடக்கூடாது என்று கூறிச்சென்றார்.

    கோட்புலியார் போர்க்களம் சென்றபின் பஞ்சம் வரவே திருவமுதுபடி நெல்லை இக்காலத்து எடுத்துப் பயன்படுத்திக் கொண்டு பின் திருப்பிக் கொடுத்து விடலாம் எனக் கூறி உடைத்து உறவினர் நெல்லை எடுத்துச் செலவழித்து விட்டனர்.

    திரும்பி வந்த கோட்புலியார் பரிசில் ஈவதாக அனைவரையும் அழைத்து வாளுக்கு இரையாக்கினார். கோட்புலியார் வாளால் இறந்தமையால் அனைவரும் கோட்புலியாரோடு சிவபதம் அடைந்தனர்.
    ----

    23. சிங்கடியார்

      உரைசெய் கோடி கீர்த்தியினும்
              ஒன்றே அமையும் உயர்சீர்த்தி
      தரைசெய் நீதிக் கோட்புலியார்
              தந்த மகளே தன்மகவாய்ப்
      பரசும் ஊரன் தேவாரப்
              பதிகம் தோறும் பதித்தபுகழ்
      வரிசை உடைய சிங்கடியார்
              வளம்சேர் சோழ மண்டலமே.

    சுந்தரர் தலயாத்திரை செய்யவென்று எண்ணித் திருநாட்டியத் தான்குடியை அடைந்த பொழுது கோட்புலியார் அவரை வரவேற்று உபசரித்தார். தாம் அருமையாக வளர்த்துவந்த சிங்கடியார், வளப்பகையார் என்னும் இரு மகளிரையும் சுந்தரர்க்கு மகட்கொடையாக அளித்தார். அவர்களைத் தம் மடிமீது இருத்தித் தம் மகளிராகப் பாவித்தார். சுந்தரர் தம்மை அவ்வூர்ப் பதிகத்தில் ‘சிங்கடியப்பன்’ என்று அழைத்துக் கொண்டார்.
    -----

    24. முனையடுவார்

      வீடார் தொடைக்கும் படைக்கும்இவன்
              மேலோன் என்ன வேந்தருக்குத்
      தேடார் வலியார் எண்ணாரைச்
              செகுத்துப் படைத்த செழும்பொன்எலாம்
      நீடாது அளித்து முனையடுவார்
              நீடூர் அமர்ந்து நெறிசேர்ந்தார்
      வாடாது இருக்கும் அரசிருப்பு
              வளம்சேர் சோழ மண்டலமே.

    நீடுர் என்னும் தலத்தில் அவதரித்த முனையடுவார் என்பார் தம்மை வந்து ஒத்தாசைக்கு அழைப்பவரோடு சென்று பகைவரை வென்று அதனால் கிடைத்த செல்வம் முழுவதையும் ஈசனுக்கும், ஈசன் அடியாருக்குமே செலவழித்துப் பரகதி அடைந்தார்.
    ----------------

    25. செருத்துணையார்

      தஞ்சைப் பதிவாழ் செருத்துணையார்
              தடந்தேர் வளவன் தன்மனையாள்
      கொஞ்சத்து ஒருபூ வந்தெடுப்பக்
              குறைத்தார் நாசிக் குணமன்றே
      மிஞ்சப் படுவாள் ஆண்மையினும்
              வேளாண் மையினும் மேம்பாடு
      மஞ்சில் குலவும் இளஞ்சோலை
              வளஞ்சேர் சோழ மண்டலமே.

    மருகல் நாட்டுத் தஞ்சையில் வாழ்ந்த வேளாண்குலச் செம்மல் செருத்துணையார் திருவாரூர் வந்து திருப்பள்ளித்தாமம் ஆக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். (இத் தஞ்சை தலைநகர் தஞ்சையின் வேறானது)

    ஒருநாள் பல்லவ மன்னன் சிங்கப்பெருமாள் மனைவியார் இறைவனை வணங்க வந்தாள். திருப்பள்ளித்தாம மண்டபத்தின் கீழ்க் கிடந்த ஒரு மலரை எடுத்து முகர்ந்து பார்த்தாள். அதனைக்கண்ட செருத்துணையார் சிவபெருமான் திருமேனிக்கு ஏறும் மலரை முகர்ந்த அவள் மூக்கை அறுத்தார். முதல் அடியில் வளவன் என்பது பல்லவன் என்று இருத்தல் வேண்டும்.

      கடிது முற்றி மற்றவள்தன்
              கருமென் கூந்தல் பிடித்தீர்த்துப்
      படியில் வீழ்த்தி மணிமூக்கைப்
              பற்றிப் பரமர் செய்யசடை
      முடியில் ஏறும் திருப்பூமண்
              டபத்து மலர்மோந் திடுமூக்கைத்
      தடிவன் என்று கருவியினால்
              அரிந்தார் தலைமைத் தனித்தொண்டர்

    (பெரியபுராணம், செருத்துணை நாயனார் - 5)
    ----------

    26. சத்தியார்

      பரிஞ்ச வேடம் திருநீறு
              தரித்தோர்ப் புகழ்ந்து பணியாமல்
      தெரிஞ்ச வாய்மை அடியாரைச்
              சீறி இகழ்ந்த செந்நாவை
      அரிஞ்ச வீர விரதமுற்றும்
              அடலார் சத்தி யார்அமர்ந்த
      வரிஞ்சி யூரும் தழைத்துளது
              வளம்சேர் சோழ மண்டலமே.

    வரிஞ்சியூர் என்னும் ஊரில் சத்தியார் என்னும் ஓர் அடியவர் வாழ்ந்து வந்தார். திருநீறு வேடம் அணிந்தாரைப் பணிவார். சிவபெருமானை இழிவாகக் கூறுவார் நாவைப் பிடித்து இழுத்து அறுக்கும் இயல்பினர். வரிஞ்சியூர் - இரிஞ்சியூர் என்ற பெயருடன் திருவாரூர்க்கு அருகில் உள்ளது.

      அத்தர் ஆகிய அங்கணர் அன்பரை
      இத்த லத்தில் இகழ்ந்துஇயம் பும்முறை
      வைத்த நாவை வரிந்தரி சத்தியார்
      சத்தி யார்எனும் நாமம் தரித்துளார்
    (பெரியபுராணம், சத்திநாயனார் - 3)
    -----------------

    27. ஞானப்பிரகாசர்

      பகர்ந்த கமலைத் தியாகேசர்
              பஞ்சாக் கரத்தின் பயன்அறிந்த
      திகந்த குருவா யிரப்ரபந்தம்
              செய்த குரவன் திருவாரூர்
      உகந்த ஞானப் பிரகாசன்
              உண்மைக் குருவின் உயர்குலத்தோர்
      மகிழ்ந்த வாழ்வு பன்னாளும்
              வளம்சேர் சோழ மண்டலமே.

    திருவாரூரில் சைவ ஆச்சாரியர் பரம்பரையில் சிதம்பரநாத தேசிகர் என்பவருக்கு மகனாகத் தோன்றியவர் ஞானப்பிரகாசர். அவரைக் கமலை ஞானப்பிரகாசர் என்பர். இவருக்குச் சீடர்கள் பலர். அவருள் ஒருவர் மதுரையம்பதி ஞானசம்பந்தர். அவர் சீவில்லிபுத்தூரில் சுப்பிரமணிய பிள்ளை என்ற சிவநேயச் செல்வருக்கும் மீனாட்சியம்மை என்ற மெல்லியலாருக்கும் மகனாகத் தோன்றியவர். அவர் தன்குரு ஞானப்பிரகாசர் மீது ‘ஞானப்பிரகாச மாலை’ என்னும் நூலைப் பாடியுள்ளார். அந்நூல் ‘பண்டாரக் கலித்துறை’ என்றும் கூறப்படும். ஏற்கனவே மதுரைச் ‘சொக்கநாதர்’ கலித்துறை என்னும் நூலைப் பாடியிருந்தார்.

      ஆரார் பகைக்கினும் ஆரார் நகைக்கினும் ஆவதுண்டோ
      சீரார் கமலையுள் ஞானப் பிரகாசன்என் சிந்தையுள்ளே
      பேரா திருந்து சிவானு பவந்தரப் பெற்றதினால்
      வாராது சென்மமும் போகாது பேரின்ப வாரியுமே
      (ஞானப்பிரகாசமாலை - 13)

    என்பது ஞானசம்பந்தர் பாடிய ஞானப்பிரகாச மாலையில் ஒரு பாடலாகும்.

    ஞானப்பிரகாசர் மரபினர் ஆண்டுதோறும் ஐப்பசி மாதக் கிருஷ்ண பட்ச சஷ்டியில் இவருக்குக் குருபூசை விழா நடத்துகின்றனர். சைவ உலகில் பலர் ஞானப் பிரகாசர் என்று பெயர் பூண்டுள்ளனர். கமலை (திருவாரூர்) ஞானப்பிரகாசர் என்னும் இவர் பஞ்சாக்கரத்தின் பயன் அறிந்தவர். பல நூல்களை இயற்றியவர். தியாகராசப் பள்ளு என்பது அவற்றில் ஒன்று (சதகம் 91). இவருடைய உருவச்சிலை திருவாரூர் வடக்கு இராச கோபுர நுழைவாயிலின் கீழ்புறம் உள்ளது.

    கமலை ஞானப்பிரகாசரால் ‘அருள் ஒளி வழங்கும் குருநாதர்’ என்று கூறப்பெற்றுத் திருமயிலாடுதுறைக்குக் கிழக்கே வில்வ வனமாய் விளங்கிய காவிரிக் கரையில் உள்ள தருமபுரத்திற் சென்று அருந்தவம் பெருக்கி வாழ ஞானப்பிரகாசரால் ஞானசம்பந்தர் அனுப்பப்பட்டார். அவர் குருஞானசம்பந்தர் ஆனார். அவரே தருமையாதீன முதல்வர் குருஞானசம்பந்தர் ஆவார்.

    நாகை காயிதேமில்லத் மாவட்டத்துச் சிக்கல் நவநீதேசுவரர் கோயில் கல்வெட்டு மூலம் தருமை முதல்வர் குருஞான சம்பந்தரின் ஆசிரியர் கமலை ஞானப்பிரகாசருக்கு கி.பி. 1560இல் தஞ்சை நாயக்க மன்னர் செவ்வப்ப நாயக்கர் காலத்தில் கிருஷ்ணமாராசையன் என்பார் உத்தரவுப்படி பரதேசி முத்திரையும், கணக்கெழுத்தும் அமைத்துக் கொள்ளும்படி சர்வ மானியம் அளிக்கப்பட்டதை அறிகிறோம் (ARE 104 of 1911).

    இக்கல்வெட்டின்படி சிக்கல், வடகுடி, வோடாச்சேரி முதலிய சில கோயில்கட்கு கமலை ஞானப்பிரகாசர் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார் என்பதை அறிகிறோம். திருவாரூர் ஞானப்பிரகாசர் பண்டாரம் எனக் கல்வெட்டுக் குறிக்கிறது. கல்வெட்டில் விசயநகர மன்னர் சதாசிவதேவமகாராயர் பெயர் குறிக்கப்படுகிறது.

    கமலை ஞானப்பிரகாசர் இயற்றிய திருமழபாடிப் புராண ஏட்டின் மூலம் அந்நூல் கி.பி. 1566இல் பாடப்பட்டதாகத் தெரிகிறது. எனவே கி.பி. 1560 வாக்கில் தருமை ஆதீன முதல்வர் அருளாட்சி தொடங்கினார் என்பது உறுதிப்படுகிறது.

    வாழையடி வாழையென அச் சீர்மிகு மரபில் மகாசந்நிதானமாக எழுந்தரு இன்று அருளாட்சி புரிபவர்கள் தவத்திரு சண்முக தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் ஆவார்கள்.
    ------

    28. கண்ணுடைய வள்ளல்

      பள்ள மலியார் கலியுலகில்
              பரமன் உருவாய்ப் பணிந்தோருக்கு
      உள்ள படியீது எனஉணர்த்தி
              உலவா முத்தி உறக்காட்டிக்
      கள்ள மதவல் இருள்கடிந்து
              காணும் காழிக் கண்ணுடைய
      வள்ளல் கருணை செயும்சூழல்
              வளம்சேர் சோழ மண்டலமே.

    திருஞான சம்பந்தரது திருவருள் பெற்றுச் சீர்காழியில் பெரிய அநுபூதிமானாக வாழ்ந்தவர் கண்ணுடைய வள்ளல். உலகில் இறைவனைப் பணியும் மெய்யன்பருக்கு முத்தியைக் காட்டும் ஞான நோக்காய் இசைந்த கண்ணுடைமை பற்றி இவர் கண்ணுடைய வள்ளல் எனப்பட்டார். இவர் இயற்றிய நூல் ஒழிவிலொடுக்கம் என்பதாகும்.

    இவர் வழிவந்தோரால் ஆளப்பெற்ற அறிவு நூல்கள் வள்ளலார் சாத்திரங்கள் என வழங்கப்படுகின்றன.
    --------

    29. அம்பலவாண தேசிகர்

      ஒருவா மழுமான் இடமொருவி
              ஒருமா னிடமெய் உருத்தாங்கும்
      அருளா கரன்அம் பலவாணற்கு
              அன்பு பெறும்ஆ வடுதுறைவாழ்
      தருவார் கொடைசேர் இராமலிங்க
              சாமி தழைத்த சந்நிதியான்
      மருவார் பணிபூங் கயிலாயம்
              வளம்சேர் சோழ மண்டலமே.

    திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்தில் அருளாட்சி செய்யும் தலைவராக எழுந்தருளியிருந்தவர் அம்பலவாண தேசிகர் சிவபெருமானிடம் அன்புபூண்டு அச்சிவன் மானிட உருவந்தாங்கியது போல் அவர் வாழ்ந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தின் அன்பர் குழாத்துள் இராமலிங்கசுவாமி என்பவர் அங்கு வாழ்ந்து வந்தார்.

    அம்பலவாணர் மூன்றாம் பட்டத்தில் 15-ஆம் நூற்றாண்டில் எழுந்தருளியிருந்தவர். அவரை அடுத்த அம்பலவாணர் இந்நூலாசிரியருக்கும் பிற்காலத்து 1770 - 1789-இல் வாழ்ந்தவர்.
    ----

    30. பெருஞ்செல்வர்கள்

      உடையார் குலத்தில் பலவகையும்
              உயர்வே ளாளர் பலவகையும்
      குடையார் குலத்தில் பலவகையும்
              கோனார் குலத்தில் பலவகையும்
      அடைய வாயில் உடையாராய்&
              அளகே சனைப்போல் அருங்கடலின்
      மடையார் செல்வம் பெரிதாக
              வளம்சேர் சோழ மண்டலமே.

    உடையார், வேளாளர், குடையார், கோனார் ஆகிய பல குடியில் பல வள்ளல்கள் குபேரனைப் போல் பெரும் செல்வம் பெற்றுச் சோழநாட்டில் வாழ்ந்தனர்.

      மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றுஎன்று
      வீட்டளவும் பால்சொரியும் வெண்ணையே நாட்டில்
      அடையா நெடுங்கதவும் அஞ்சல்என்ற சொல்லும்
      உடையான் சரராமன் ஊர்

    என்றார் கம்பர். சரராமன் - சடையப்ப வள்ளல் - உடையார் - பார்க்கவ குலத்தினர். சுருதிமானும், மலையமானும் அவருடன் சேர்ந்தவர் ஆவர்.
    ---------

    31. சோறுடைய நாடு

      வேழம் உடைத்து மலைநாடு
              மிகுமுத்து உடைத்து தென்னாடு;
      தாழ்வில் தொண்டை வளநாடு
              சான்றோர் உடைத்தென்று உரைத்ததல்லால்
      சோழன் புவிசோறு உடைத்தென்னும்
              துதியால் எவர்க்கும் உயிர்கொடுத்து
      வாழும் பெருமைத் திருநாடு
              வளம்சேர் சோழ மண்டலமே.

    மலைநாடாகிய சேரநாடு யானைகளை உடையது. தென்னாடாகிய பாண்டி நாடு முத்து உடையது. தொண்டை நாடு சான்றோர் உடையது. சோழ வளநாடு சோறு உடையது. சோறு உயிர் கொடுப்பதால் எல்லா நாட்டையும் விடச் சோழ நாடே சிறந்தது.

      வேழ முடைத்து மலைநாடு, மேதக்க
      சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
      தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை
      நன்னாடு சான்றோர் உடைத்து

    என்றார் ஒளவையார் (தொண்டை மண்டல சதகம், மேற்கோள் 13) ‘உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே’ (மணிமேகலை) சோறு என்பதை அறிவுவளம் என்றும் கூறுவர்.

    32. சோழயிர் கீர்த்தி

      கண்டன் கரிகா லனுக்குமுடி
              கவித்துக் காணி படைத்தோரும்
      தொண்டை நாட்டின் நற்குடியாய்ச்
              சூழ அமைந்த தூயோரும்
      பண்டை மநுநீ தியைத்தொகுத்துப்
              பயின்று வரும்சோ ழியர்எனவே
      மண்டு கீர்த்தி படைத்தோரும்
              வளம்சேர் சோழ மண்டலமே.

    கரிகாலனுக்கு முடிசூட்டிக் காணி படைத்தவர்களும், தொண்டை நாட்டு நற்குடி என்று கூறப்படுபவர்களும், மநு நீதியைத் தொகுத்துப் பயின்று வருபவர்களும் சோழிய வேளாளர்களே ஆவர்.
    ------

    33. ஆலஞ்சேரி மயிந்தன்

      பயந்த மழைநீர் பெய்யாது
              பன்னீ ராண்டு பஞ்சமெல்லாம்
      வியந்த சங்கத் தமிழோர்க்கு
              வெவ்வே றுதவி விடிந்தவுடன்
      நயந்த காலை யெனும் தமிழை
              நாட்டும் துரைஆ லஞ்சேரி
      மயிந்தன் உயர்பாண் டியன்புகழ
              வந்தோன் சோழ மண்டலமே.

    பன்னீராண்டு மழை பெய்யாது பஞ்சம் வந்த காலத்துத் தமிழ்ப் புலவர்களை ஆதரித்தவன் ஆலஞ்சேரி மயிந்தன் என்பான்.

    ‘வற்கட காலத்தில் நும்மைத் தாங்கியோன் யாவன்’ என்ற பாண்டியற்குச் சங்கத்தார் கூறிய பாடல்

      காலை ஞாயிறு கடுங்கதிர் பரப்பி
      வேலையும் குளனும் வெடிபடச் சுவறித்
      தந்தையர் மக்கள் முகம்பா ராமே
      வெந்த சாதம் வெவ்வேறு அருந்தி
      குணமுள தனையும் கொடுத்து வாழ்ந்து
      கணவனை மகளிர் கண்பா ராமல்
      அறவுரை இன்றி மறவுரை பெருகி
      உரைமறந்து ஒழுகும் ஊழிக் காலத்தில்
      தாயில் லவர்க்குத் தாயே ஆகவும்
      தந்தையில் லவர்க்குத் தந்தையே ஆகவும்
      இந்த ஞாலத்து இடுக்கண் தீர
      வந்து தோன்றினன் மாநிதிக் கிழவன்
      நீலம் சேரும் நெடுமால் போல்பவன்
      ஆலஞ் சேரி மயிந்தன் என்பான்
      ஊருண் கேணி நீரே போல
      தன்குறை சொல்லான் பிறர்பழி உரையான்
      மறந்தும் பொய்யான் வாய்மையும் குன்றான்
      இறந்த போகாது எங்களைக் காத்தான்
      வருந்தல் வேண்டா வழுதி
      இருந்தனம் இருந்தனம் இடர்தீர்ந் தனமே

    என்பதாகும்.

    ‘மயிந்தன்’ என்பதற்கு அயிந்தன் என்ற பாடமும் உண்டு. (பெருந்தொகை 1391). இங்கு கூறப்படும் பாண்டிய நாட்டுப் பஞ்சம் இறையனார் களவியல் கூறும் ‘பன்னீராண்டு வற்கடம்’ ஆகலாம்.

      பன்னீ ராண்டு பாண்டிநன் னாடு
      மன்னுயிர் மடிய மழைவளம் இறந்தது

    என மணிமேகலையும் இப்பஞ்சத்தைக் கூறும் (14:-55-56) ஆலஞ்சேரி இன்று ஆலங்குடிச்சேரி என்று வழங்கப் பெறுகிறது.

    வேளாளர் உழுதுண்போர் உழுவித்துண்போர் என இருவகையினர். அவருள் உழுவித்துண்போர் மண்டல மாக்களும் தண்டத் தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவரும், அழுந்தூரும், நாங்கூரும், நாவூரும் ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமும், கிழாரும், முதலிய பதிகளில், தோன்றி வேள் எனவும் அரசு எனவும் பட்டம் எய்தி ஆண்டு வந்தனர் என்பதால் இவ்வள்ளல் உழுவித்து உண்போர் ஆவர், சோழனுக்கு உறவினர்.

    ‘ஆலஞ்சேரி மயிந்தன், ஊருண்கேணி நீரொப்போன்’ என்ற மேற்கண்ட பாடல் தொடரை நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் மேற்கோள் காட்டியுள்ளார் (அகத். 30).
    -------------

    34. கருப்புடையான்

      தரும்போர் வளவன் பெருந்தாகம்
              தணிப்பான் உழவன் தன்னகத்தில்
      கரும்பார் சாறு கெண்டியினில்
              கலிழும் தாரை காட்டுதலால்
      இரும்பார் புகழ்நீ கருப்புடையான்
              என்று சோழன் முடியசைப்ப
      வரும்பேர் பெறும்உத் தமர்வாழ்வும்
              வளம்சேர் சோழ மண்டலமே.

    சோழன் ஒருவனுக்கு ஏற்பட்ட பெரும் தாகத்தைத் தணிப்பதற்காகக் கரும்புச் சாற்றைச் சோழநாட்டு வள்ளல் ஒருவர் தந்தார். அவர் வேளாளருள் கருப்புடையான் (கரும்பு உடையான்) எனப்பட்டார். சோழநாட்டுச் சோழிய வேளாளருள் கருப்புடையான் என்று ஒரு கோத்திரம் உள்ளது.
    -------

    35. குண்டையூர்க் கிழார்

      அண்டம் ஏறு நெல்மலைகள்
              அனந்த கோடி பொன்மலைபோல்
      குண்டை ஊரன் ஊரனுக்குக்
              கொடுத்த பெருமை குறியாரோ?
      தொண்டர் நீள நினைந்தவென்று
              துதிக்கும் கீர்த்திச் சோழியராய்
      மண்டி வாழும் குடியிருப்பு
              வளம்சேர் சோழ மண்டலமே.

    ஆரூர் விழாவின் பொருட்டுச் சுந்தரர் பரவையாருக்காகக் குண்டையூர்க் கிழாரிடம் நெல் மலைகளைப் பெற்றார். அவைகளை எடுத்துச் செல்ல ஆட்கள் இல்லை. கோளிலிப் பெருமானிடம் சுந்தரர் வேண்ட அவர் பூதகணங்களை அனுப்பி நெல் திருவாரூர்க்கு வர ஏற்பாடு செய்தார்.

      நீள நினைந்தடியேன் உனை
              நித்தலும் கைதொழுவேன்
      வாளன கண்மடவாள் அவள்
              வாடி வருந்தாமே
      கோளிலி எம்பெருமான் குண்டை
              ஊர்சில நெல்லுப்பெற்றேன்
      ஆளிலை எம்பெருமான் அவை
              அட்டித் தரப்பணியே

    என்பது சுந்தரர் தேவாரம் (7 : 20 : 1) பெரியபுராணம் ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் 19 - 20 காண்க. ‘விண்ணினை அளக்கும் நெல்லின் வெற்பு’ என்று சேக்கிழார் கூறுகிறார். ‘சில நெல்’ என்றார் சுந்தரர். சிவபெருமானின் அளப்பரிய ஆற்றல் நோக்கியதாகலாம். திருக்கோளிலியில் (திருக்குவளை) மாசி மகத்தையொட்டி சுந்தரர் நெல்பெற்ற திருவிழா கொண்டாடப்படுகிறது.
    -------------

    36. பரவையார் கொடை

      வீடு தோறும் தெருக்கள்தொறும்
              விரிநீர் எல்லை மேடைதொறும்
      நீடு பூத கணம்சொரிந்த
              நெற்போர் எல்லாம் நேர்ந்தவரே
      கூடி வாரும் எனப்பரவை
              கூற முழங்கும் கொடைமுரசு
      மாடு உயர்வு நிலைமையது
              வளம்சேர் சோழ மண்டலமே.

    திருவாரூரின் வீடுகள், தெருக்கள், மேடைகள் எங்கும் சிவபெருமானின் பூதகணங்கள் நெல்லைக் கொண்டு வந்து சேர்த்தன. ‘அன்பர்கள் அனைவரும் வேண்டிய நெல்லை எடுத்துச் செல்லுக’ என்று முரசறைந்து பரவையார் அறிவித்தார்.

      வன்தொண்டர் தமக்களித்த நெற்கண்டு மகிழ்சிறப்பாய்
      இன்றுஉங்கள் மனைஎல்லை உட்படுநெல் குன்றெல்லாம்
      பொன்தங்கு மாளிகையில் புகப்பெய்து கொள்கஎன
      வென்றிமுரசு அறைவித்தார் மிக்கபுகழ்ப் பரவையார்

    என்பது சேக்கிழார் வாக்கு [ஏயர் கோன் - 28].

      தென்மலைத் தமிழ்ஆ ரூரர் தியாகர்என் பதுதான் வீணோ
      பொன்மலை போலும் கோயிற் பூவையர் எண்ணி யாருள்
      மின்மலை மருங்கு வாளோர் மெல்லியல் வீதி தோறும்
      நென்மலை கொள்வீர் என்ன நிறைமுரசு அறைவித் தாளே

    என்பது திருவாரூர்ப் பன்மணிமாலையில் ஒரு பாட்டு. பரவையார் வாழ்ந்த மனை திருவாரூர்ப் பூங்கோயில் தென் கோபுர வாயில் பக்கம் பரவையார் கோயில் என வழங்கப்பெறுகிறது.
    -------------

    37. சுரைக்குடையான்

      பாதிச் சுரைக்காய் கறிக்கும்ஒரு
              பாதிச் சுரைக்காய் விரைக்கும்என
      ஆதிக் கடவுள் பசிதீர
              அளித்தாள் ஆங்கே அறஅரித்த
      காதல் கணவன் மனைவியொடும்
              கயிலை காணும் கதைசூதன்
      ஆதி புகலும் சுரைக்குடையான்
              மரபோர் சோழ மண்டலமே.

    சோழியரில் சுரைக்குடையான் கோத்திரத்தில் தோன்றிய ஒருவர் கஞ்சனூரில் வாழ்ந்து வந்தார். அவர் வீட்டுச் சுரைக்கொடியில் காய்த்த காய்களைக் கஞ்சனூர் அக்கினிபுரீசுவரர்க்கு அர்ப்பணம் செய்து வந்தார்.

    காய்மாறும் பருவத்தில் விதைக்காக ஒரே ஒரு சுரைக்காயை மட்டும் விட்டிருந்தார். ஒரு நாள் சிவபெருமான் அடியார் வடிவில் வந்து அன்னம் வேண்டினார். இல்லத் தலைவி நீராடச் சென்ற கணவன் வரட்டும் என்றாள்.

    அடியார் தனக்குச் சுரைக்காயில் விருப்பம் இருப்பதாகத் தெரிவித்தார். ஒரே காய்தான் உள்ளது. அதுவும் விதைக்காக விடப்பட்டுள்ளது என்றாள் சுரைக்குடையான் மனைவியார்.

    அடியார் சுரைக்காயில் பாதி விதைக்கும் பாதி அடியாருக்கும் ஆகட்டும் என்றார். அடியார் வாக்கைத் தட்டமாட்டாது பாதிக்காயை அரிந்து பக்குவம் செய்தாள். நீராடச் சென்ற கணவன் வந்தவுடன் சுரைக்காய் அறுபட்டிருப்பது பற்றி வினவினான். மனைவி நடந்ததைக் கூறினாள். கணவன் மனைவி அளித்த பதிலை நம்பாது சுரைக்காயை அரிந்த அவள் கையை அரிய முற்பட்டான். அவள் கஞ்சனூர்க் கற்பகவல்லியை வேண்டினாள். இறைவி முத்திகொடுத்தார்.

    கஞ்சனூர்ப் புராணத்தில் இவ்வரலாறு உள்ளது. அவ்வூர்க் கோயிலில் இத்தம்பதியர் உருவச் சிலைகள் உள்ளன. கஞ்சனூரில் சிவபெருமானுக்கு இன்றும் சுரைக்காய் நிவேதனம் செய்யப்படுகிறது.

    சீர்க்குடி தன்னில் சுரைக்குடை யானென்று தேசம்எங்கும்
    பேர்க்கொளும் வாழ்வுடை வேளாண் குலத்துஒரு பெண்ணரசி
    பாற்கறி பாதி விதைக்குஒரு பாதி பகுந்தளித்த
    நீர்ச்சுரைக் காயுத வும்கஞ்ச னூர்வரு நிமலனுக்கே
            (கஞ்சனூர்ப் புராணம்)
    --------------

    38. திருவீழிமிழலை

      கன்னி பாகர் வீழியினில்
              கனிவாய் அப்பர் சம்பந்தர்க்கு
      அன்ன தானம் செயவேண்டி
              அளித்த படிக்காசு அதற்குவிலை
      செந்நெல் மாரி கொடுப்பதற்காச்
              செழுநீர் இறைத்துச் செய்துநலம்
      மன்னி வாழும் குடியிருப்பு
              வளம்சேர் சோழ மண்டலமே.

    திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சேர்ந்து சிலநாள் தல யாத்திரையை மேற்கொண்டனர். வேதாரணியம் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு திருவீழிமிழலையை அடைந்தனர்.

    அங்கு பஞ்சம் ஏற்படவே திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தனித்தனி மடங்களிலிருந்து கொண்டு சிவபெருமானால் படிக்காசு பெற்று அன்னதானம் செய்தனர். திருவீழிமிழலைக்கு திருஞானசம்பந்தர் 15 பதிகமும், திருநாவுக்கரசர் 8 பதிகமும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். வீழிச்செடிகள் உள்ளதால் வீழிமிழலை எனப்பட்டது. வீழி ஐநூற்றுவர் இங்கு இறைபணி செய்கின்றனர். இருவரும் தங்கிய மடங்கள் திருவீழிமிழலை வடக்கு வீதியில் உள்ளன. கோயிலில் மேற்கிலும் கிழக்கிலும் படிக்காசு பெற்ற பீடங்கள் உள்ளன. சித்திரைப் பெரு விழாவில் படிக்காசு பெற்ற வரலாறு விழாவாக நடத்தப்படுகிறது.
    -----

    39. சேந்தனார்

      ஆய்ந்த முறையின் அவிழ்ந்ததுணி
              அவிழ்ந்த அமுதை அவிழ்ந்துமனம்
      சார்ந்து செலுத்தி விடையேறும்
              சடையான் உரிமைத் திறம்பூண்ட
      சேந்தன் இடத்தில் குலோத்துங்கன்
              சென்று பணிந்த தெய்வீகம்
      வாய்ந்த மகிமை ஓங்கியது
              வளஞ்சேர் சோழ மண்டலமே.

    சேந்தனார் திருவெண்காடர் என்னும் பட்டினத்தடிகட்கு முதல் கணக்கராக விளங்கினார். ‘மந்திரத் தலைமை சான்ற பதிமுது சேந்தனார்’ என்பது பட்டினத்தார் புராணப் பகுதியாகும்.

    சிவபெருமானிடம் உயிர்ச்சிறை நீக்க வேண்டி சேந்தனாருக்கு இறைவன் நாள்தோறும் வனத்தில் விறகு ஒடித்திட்டு அவ்விறகு விற்றிடும் பொருளில் தினம் ஒரு அடியாருக்கு உணவிடுக என்றார். ஒரு நாள் களைப்பால் பொதிசோறு கட்டிய துணி அவிழ்ந்து இவர் வாயில் விழ சிவபெருமானுக்கே அர்ப்பணம் என்றார்.

    சோழ மன்னன் சிவபூசை செய்து இறுதியில் நாள்தோறும் சிலம்பின் நாதம் கேட்பான். ஒரு நாள் சிலம்பொலி கேட்கவில்லை. கவலையாய் சோழன் உறங்கச் சிவபெருமான் ‘சேந்தன் இட்ட உணவிற்காகச் சென்றிருந்தோம்’ என்றார். சேந்தனார் தில்லை திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக்கழி முதலாய தலங்களைப் பாடியுள்ளார். அவை ஒன்பதாம் திருமுறையில் உள்ளன.

    அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை
    அவிந்த மனத்தால் அவிழ்க்க - அவிழ்ந்தசடை
    வேந்தனாற்கு இன்னமுதும் ஆயிற்றே மெய்யன்பில்
    சேந்தனார் செய்த செயல்

    என்பது திருக்களிற்றுப்படியார் (53). இவர் பாடிய திருப்பல்லாண்டு ஒன்பதாம் திருமுறையில் உள்ளது. இப்பதிகம் தில்லை நடராசர் தேரை ஓடச் செய்தது என்பது வரலாறு.
    ----

    40. ஆனைப்பாக்கமுடையான்

      முட்டி லாத கடாக்களொடு
              முதிரும் கவளக் கடாக்களையும்
      கொட்டில் ஊடு கட்டிவிடும்
              கோமான் அதையும் கொடைகொடுத்தோன்
      பட்டம் ஏறும் புகழ்ஆனைப்
              பாக்கம் உடையான் பசுங்குடிகள்
      மட்டி லாமல் நீடியது
              வளம்சேர் சோழ மண்டலமே.

    சோழிய வேளாளருள் ஆனைப்பாக்கமுடையான் கோத்திரத்தில் ஒரு பெரிய கொடையாளி இருந்தான். அவன் எருமைக் கடாக்களோடு யானைகளையும் கொட்டிலில் கட்டும் செல்வந்தனாக விளங்கினான். அச் சீமானை ஒருவன் கடா யாசகம் கேட்க, வேண்டியவாறு அவற்றை அளித்தான்.
    -------------

    41. கரிகாலன்

      செல்லார் பணியும் செம்பியர்கோன்
              செழுங்கா விரியின் சிறந்தகரை
      கல்லால் அணைகட் டுதற்கேவு
              கருமம் முடித்த சோழியர்கள்
      பல்லார் மேழி நெடுங்கொடியைப்
              பாயும் புலியி னொடுபதித்த
      வல்லாண் மையினார் குடிவாழ்வு
              வளம்சேர் சோழ மண்டலமே.

    கரிகால் வளவன் காவேரிக்குக் கரை கட்டும்போது சோழியர் மிகவும் உதவினர். கரிகாலன் ஏவலால் கல்லணை கட்டியவர்கள். சோழிய வேளாளர்கள் தங்கள் மேழிக் கொடியைச் சோழர்தம் புலிக் கொடியுடன் இணையாக வைத்தவர்கள்.

    கரிகாலன் காவிரியில் கரையையே கல்லால் கட்டுவித்தான்; அணை கட்டவில்லை என்றும் கூறுவர். இப்பாடலிலும் கரை கட்டியதையே கல்லணை என்று கூறப்படுகிறது.

    தொக்க கலியின்மூ வாயிரத்துத் தொண்ணூற்றில்
    மிக்க கரிகால வேந்தனுந்தான் - பக்கம்
    அலைக்கும் புனல்பொன்னி ஆறுகரை இட்டான்
    மலைக்கும் புயத்தானும் வந்து

    என்பது பழம்பாடல். இதன்படி கி.மு. 11-இல் கரைகட்டிய செய்தி புலப்படுகிறது. முதல் அடிக்கு ‘தொக்க சகனில் தொளாயிரத்துத் தொண்ணூற்றில்’ என்ற பாடபேதமும் உண்டு (பெருந்தொகை - 778) அதன்படி காலம் கி.பி. 1068 ஆகிறது.

    அஞ்சின் முடிகவித்து ஐம்பத்து மூன்றளவில்
    கஞ்சி காவேரிக் கரைகண்டு - தஞ்சையிலே
    எண்பத்து மூன்றளவும் ஈண்ட இருந்தேதான்
    விண்புக்கான் தண்புகார் வேந்து

    என்பது ஒரு பழம்பாடல் (பெருந்தொகை 779).

    உச்சங்கோல் எண்கோல் உயரம் பதினாறுகோல்
    எச்சம் பிரிவாய் இருபதுகோல் - தச்சளவு
    மண்கொள்ளக் கொண்டகோல் எண்கோல் வளவர்கோன்
    கண்கொள்ளக் கண்ட கரை

    என்பது ஒரு பழம்பாடல் (பெருந்தொகை 2154).

    கரிகாலனைப்
    பொன்னிக் கரைகண்ட பூபதி
    என்று விக்கிரம சோழன் உலாவும் [13]

    மண்கொண்ட பொன்னிக் கரைகட்ட வாராதான்
    கண்கொண்ட சென்னிக் கரிகாலன்
    என்று குலோத்துங்க சோழன் உலாவும் [18]

    தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில்
    என்று கலிங்கத்துப் பரணியும் (இராசபாரம்பரியம் 20)

    ஈரருகும்
    எண்கரை செய்யாது எறிதிரைக் காவிரிக்குத்
    தண்கரை செய்த தராபதி
    என்று சங்கர ராசேந்திர சோழன் உலாவும் [13] கூறுகின்றன.

    கரைகட்ட ஈழத்திலிருந்து பிடித்து வந்த கைதிகளைப் பயன்படுத்தினான் என்பர்.
    ------------

    42. முனையதரையன்

      புனையும் குழலாள் பரிந்தளித்த
              பொங்கல் அமுதும் பொரிக்கறியும்
      அனைய சவுரி ராசருக்கே
              ஆம்என்று அருந்தும் ஆதரவின்
      முனைய தரையன் பொங்கல்என்று
              முகுந்தற்கு ஏறு முதுகீர்த்தி
      வனையும் பெருமை எப்போதும்
              வழங்கும் சோழ மண்டலமே.

    வீரசோழன் காலத்தில் முனையதரையன் என்னும் ஓர் அரசியல் அலுவலன் திருக்கண்ணபுரத்தில் வாழ்ந்து வந்தான். திருக்கண்ணபுரம் சௌரிராசப் பெருமான்பால் பேரன்பு பூண்டொழுகினன். கோயிற் கணிகை ஒருத்திபால் முனையதரையன் காதல் கொண்டொழுகினான். எனினும் ஆண்டவனிடத்தும், அரசரிடத்தும் தவறில்லானாய் வாழ்ந்தான். ஒருமுறை பஞ்சம் வரவே அரசனின் இறைப் பணத்தை அடியார்க்குச் செலவிட்டான். அதனால் அந்நாட்டு அமைச்சரால் சிறைப்படுத்தப்பட்டான். முனையதரையனின் காதற்கணிகை அவன் அளிக்க வேண்டிய பெரும்பொருளை அளித்தாள். அதை ஆட்கூலிக்கென்று எடுத்துக் கொண்டனர்.

    கணிகை சௌவுரிராசப் பெருமாள் சந்நிதி சென்று இன்றைக்கு ஐந்தாம் நாள் என் நாதன் வராவிடில் நான் இறைவன்முன் தீப்பாய்வேன் என்றாள். இறைவன் சோழன் கனவிற் சென்று கூற முனையதரையன் விடுதலை செய்யப்பட்டுச் சீரும் சிறப்பும் பெற்றான்.

    ஒருநாள் இருவரும்

    பாலும் அரியும் பசும்பயறும்
            பாக மாக வேவிரவி
    ஏலம் இழுதும் சருக்கரையும்
            இட்டட்டு உண்போ தில்அன்னான்
    சால மதுரம் என்னஅவை
            சவுரி ராசனுக்கே தகும்

    என்றனர். அர்ச்சகர் காலையில் கோயில் திறந்து பார்க்கப் பெருமாள் மேனியெங்கும் அன்னம் பரவியிருந்தது. முனையதரையன் அன்றுமுதல் அப் பாகமே செய்து இறைவனுக்கு அமுதுபடைத்தான். இன்றும் அது தொடர்கிறது. ‘முனியோதரன் பொங்கல்’ என்ற பெயரில் இரண்டாம் கால நைவேதனம் படைக்கப்படுகிறது. மக்கள் முனீசுரன் பொங்கல் என்றும் அழைப்பர்.
    -----

    43. அம்பர்த் தாசி

      தண்ணீர் விரவும் காவேரி
              தார்வேந் தனுமே தகும்சோழன்
      பெண்ணா வாள்அம் பற்சிலம்பி
              பிறங்கு மலையோ மேருவென்றே
      எண்ணார் ஒளவை உரைத்தமுறை
              ஏழு புவியில் எண்டிசையின்
      மண்ணா வதுதண் டலைவேலி
              வளம்சேர் சோழ மண்டலமே.

    ஒருமுறை யாத்திரையின்போது ஒளவையார் அம்பர் என்னும் ஊருக்கு வந்தார். பசியால் வருந்துவதாகக் கூறி ஒரு வீட்டில் உணவு பெற்றுக் களைப்புத் தீர அவ்வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தார்.

    அச் சுவரில்,

    தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
    மண்ணாவ தும்சோழ மண்டலமே

    என்னும் நேரிசை வெண்பாவின் முற்பாதி எழுதப்பட்டிருப்பதைக் கண்டார். அது பற்றி விசாரித்தார்.

    ஒளவையார் படுத்திருக்கும் வீடு ஒரு தாசி வீடு என அறிந்தார். தாசி பாடல் பெறவேண்டும் என்று விரும்பிக் கம்பரிடம் வேண்ட அவர் ஆயிரம் பொன் வேண்டினார். தாசி தன்னிடமிருந்த ஐநூறு பொன்னைக் கொடுத்தாள். கம்பர் அதற்குரிய பாதிப்பாட்டைப் பாடிப் போயினர் என்றனர். அதனால் தாசி உள்ளதும் கெட்டு ஏழை ஆயினள் என்றறிந்தார். அதனைக் கேட்ட ஒளவையார்

      பெண்ணாவாள்
      அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாள்மலரும்
      செம்பொற் சிலம்பே சிலம்பு

    என்று வெண்பாவைப் பாடி முடித்தார். தாசி வாழ்வும் வளமும் பெற்றாள்.
    -----

    44. கருங்கண்ணி வேள்

      மேழிக் கொடிசேர் கருங்கண்ணி
              வேளாண் முகப்பு மேனியமேல்
      கேழில் மயிலும் உத்திரத்தில்
              கிளராடு அரவக் கிண்கிணிக்கால்
      சூழப் பணிந்த தியாகருக்குச்
              சொல்லும் தியாகம் சொரிந்தோங்கும்
      வாழ்விற் பெரியோன் குடிவாழ்வு
              வளம்சேர் சோழ மண்டலமே.

    முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டின்மீது பிற மதத்தார் படையெடுத்து வந்தனர். பல கோயில்களின் தெய்வப் படிமங்கள் பாதுகாப்புக்காகப் பல இடங்களில் ஒளித்து வைக்கப்பட்டன. ஆரூர்த் தியாகேசரைக் கிழக்குப் பக்கம் உள்ள ஓரிடத்தில் மறைத்து வைத்துப் பின் கொண்டுவருங்கால் பங்குனித் திருவிழா வந்தது.

    கருங்கண்ணிவேள் என்ற வேளாண்குலச் செம்மல் அவ்விழாவைத் தன் இல்முன் சிறப்பாக நடத்தினான். அந்த இடம் இப்போது பெரிய திடலாக உள்ளது என்பர்.
    -----------

    45. கண்டிக்கு நெல்

      தேனார் தொடையார் பரராச
              சிங்கப் பெருமான் செந்தமிழ்க்குக்
      கானார் நெல்லின் மலைகோடி
              கண்டி நாடு கரைசேரக்
      கூனார் கப்பல் ஆயிரத்தில்
              கொடுபோய் அளித்த கொடைத்தடக்கை
      மானா கரன்சங் கரன்உடையான்
              வளம்சேர் சோழ மண்டலமே.

    இலங்கையில் கண்டிப் பகுதியைப் பரராச சிங்கன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவன் நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. அந்நாடு வாழக் கொடையளிக்குமாறு பரராச சிங்கன் சடையப்ப வள்ளலைக் கேட்டுக் கொண்டான். சங்கரன் என்பாரின் மகனாகிய சடையப்ப வள்ளல் ஆயிரம் கலங்களில் நெல் அனுப்பி இலங்கையில் ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்கினார்.

    பரராச சிங்கன் சடையப்ப வள்ளலை

      இரவுநண்பகல் ஆகில்என்பகல் இருள்அறாஇரவு ஆகில்என்
              இரவிஎண்திசை மாறில்என்கடல் ஏழும்ஏறில்என் வற்றில்என்
      மரபுதங்கிய முறைமைபேணிய மன்னர்போகில்என் ஆகில்என்
              வளமைஇன்புறு சோழமண்டல வாழ்க்கைகாரணம் ஆகவே
      கருதுசெம்பொனின் அம்பலத்திலோர் கடவுள்நின்று நடிக்குமே
              காவிரித்திரு நதியிலேஒரு கருணைமாமுகில் துயிலுமே
      தருஉயர்ந்திடு புதுவையம்பதி தங்குமானிய சேகரன்
              சங்கரன்தரு சடையன்என்றொரு தருமதேவதை வாழ்வதே

    என்று பாராட்டியுள்ளான்.
    ---------------

    46. காவிரி - வேளாளர் எச்சில்

      விருந்து நுகர்வோர் கைகழுவ
              விளங்கும் புனற்கா விரிஎன்றால்
      தரும்தாய் அனைய புகழ்ப்புதுவைச்
              சடையன் கொடைஆர் சாற்றவல்லார்
      பரிந்தார் எவர்க்கும் எப்போதும்
              பாலும் சோறும் பசிதீர
      வருந்தாது அளிக்க வல்லதன்றோ
              வளம்சேர் சோழ மண்டலமே.

    சடையப்ப வள்ளல் எப்போதும் விருந்தினர்க்கும், இரவலர்கட்கும் பாலும், சோறும் பசிதீர அளித்தார். அவர்கள் அனைவரும் விருந்துண்டு காவிரியில் கைகழுவினர். எனவே காவிரி வேளாளரது கைகழுவிய எச்சில் நீராயிற்று என்பர்.

    இதனைக் கம்பர் பாடல்

      மெய்கழுவி வந்து விருந்துண்டு மீளுமவர்
      கைகழுவ நீர்மோதும் காவிரியே - பொய்கழுவும்
      போர்வேல் சடையன் புதுவையான் இல்லறத்தை
      யார்போற்ற வல்லார் அறிந்து

    என விளக்குகிறது (இப்பாட்டு மூவலூரில் கல்வெட்டாக வெட்டப்பட்டுள்ளது). கொங்குமண்டல சதகம் இதைத் தன்னாட்டுக்கு ஏற்றிக்கூறும்.
    --------------

    47. பட்டினப்பாலை

      குணக்கின் மலைபோல் பதினாறு
              கோடி செம்பொன் கொடுத்தவிலை
      இணக்கும் ஒருபட் டினப்பாலை
              எவரும் புகழ்தற்கு எளிதாமோ
      பணக்குன்று அனந்த மேருஎனப்
              பயில்கா விரிப்பூம் பட்டினம்போல்
      மணக்கும் பதிகள் பலகாணும்
              வளம்சேர் சோழ மண்டலமே.

    கடியலூர் உருத்திரங் கண்ணனார் கரிகாலன் மீது பட்டினப்பாலை என்னும் ஒரு நூலைப் பாடினார். அதற்குக் கொடையாகப் பதினாறு கோடிப் பொன் கொடுக்கப்பட்டது. அந்நூலில் புகழப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் போல் புகழ்பெற்ற ஊர் வேறேதும் இல்லை.

    கடியலூர் உருத்திரங் கண்ணனார் பெற்ற பரிசை,

      தத்து நீர்வரால் குருமி வென்றதும்
      தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்
      பத்தொடு ஆறுநூறு ஆயி ரம்பெறும்
      பண்டு பட்டினப் பாலை கொண்டதும்

    என்று கலிங்கத்துப் பரணியும் (இராசபாரம்பரியம், 21),

    சேயதொரு-பாடிய பாக்கொண்டு பண்டு பதினாறு
            கோடி பசும்பொன் கொடுத்தோனும்

    என்று சங்கர ராசேந்திரசோழன் உலாவும் (10),

    பாடியதோர் வஞ்சி நெடும்பாட்டால் பதினாறு
    கோடிபொன் கொண்டதுநின் கொற்றமே

    என்று தமிழ்விடு தூதும் [193] புகழ்கின்றன.

    பட்டினப்பாலையை அரங்கேற்றியதன் நினைவாகச் சோழநாட்டில் பதினாறுகால் மண்டபம் ஒன்று இருந்தது. முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1216 - 1244) சோழநாட்டின்மீது படையெடுத்து சோழநாட்டில் அழிவு செய்யும்போது பட்டினப்பாலை பாடி அரங்கேற்றிய நினைவுக்காக அமைக்கப்பட்ட பதினாறுகால் மண்டபம் மட்டுமே எஞ்சியது என்று ஒரு கல்வெட்டுப் பாடல் கூறுகிறது.

      வெறியார் தளவத் தொடைச்செய மாறன் வெகுண்டதொன்றும்
      அறியாத செம்பியன் காவிரி நாட்டில் அரமியத்துப்
      பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று
      நெறியால் விடும்தூண் பதினாறு மேஅங்கு நின்றனவே

    என்பது திருவெள்ளறைக் கல்வெட்டுப் பாடலாகும் (சாசனச் செய்யுள் மஞ்சரி 71).
    ------

    48. நாகை வேளாளர்

      இசைக்கா தமிழுக்கு எல்லாரும்
              ஈந்தார் ஈந்தார் என்பதல்லால்
      திசைக்கா விருது கொடிகட்டிச்
              செலுத்தும் கீர்த்தி சகத்துளதோ
      நசைக்கா யிரம்பொன் கொடுத்ததலால்
              நாகைப் பதிவாழ் வேளாளர்
      வசைக்கா யிரம்பொன் கொடுத்ததன்றோ
              வளம்சேர் சோழ மண்டலமே.

    தமிழுக்குக் கொடை கொடுத்து எல்லோரும் புகழ் பெற்றனர். அவர்கள் திசையெங்கும் விருதுக் கொடிகட்டிப் புகழ் உற்றனர். தம்மை வசை பாடிய காளமேகப் புலவருக்கும் விரும்பி ஆயிரம் பொன் கொடுத்தது நாகை வேளாளர்தம் கொடைச் சிறப்பாகும். நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் மண்டிலமாக்களும் தண்டத் தலைவருமாக வேளாளர் வாழும் ஊர்களில் ‘நாவூர்’ என ஒன்றைச் சுட்டுகிறார். அது நாகூரே ஆகலாம்.

    நாகை வேளாளரைக் காளமேகம் இகழ்ந்து பாடிய பாடல்:

      உள்ளிநாறு வாயரும் உவட்டெடுத்த தலையரும்
              ஒருவரோடு ஒருவர்சற்றும் உறவிலாத நெஞ்சரும்
      கொள்ளிபோல் முகத்தரும் கொடுக்குவிட்ட உடையரும்
              கோளுநாளு மேபடைத்த குணமிலாத மடையரும்
      பள்ளிவாசல் தோறுநம்ப உக்கரைச் சவுக்கரைப்
              பதைத்திடப் புதைத்துவைத்து அகப்படப் படுத்தும்ஊர்
      நள்ளிரா அடங்கலும் நடுக்கமுற்று வாழும்ஊர்
              நாலுமூலை யும்கடந்து நாய்குலைக்கும் நாகையே!

    காளமேகத்தின் புகழ் அறிந்த வேளாளர் அவரை நன்கு உபசரித்துப் போற்றினார். அப்போது காளமேகம் பாடிய பாடல் :

      குடக்கினில் கலிங்கமும் வடக்கினில் துரங்கமும்
              குணக்கினில் பசும்பொனும் குளிர்ந்ததெற்கில் ஆரமும்
      அடைப்பரை உடைக்கவந்த அனேகவண்ண மாகவந்த
              அஞ்சுவண்ண மும்தழைத்து அறத்தின்வண்ணம் ஆனவூர்
      கடற்கரைக் குவித்தசந் தனத்தைஇந் தனத்துடன்
              கலந்திறைக்கும் மந்தியைக் கனன்றுமுற் கவிக்குலம்
      புடைப்பதற்கு எழுந்துகை முறுக்கினு முறுக்குவாய்
              புதைக்கும் முத்தை விட்டெறிந்து பூசுமேறு நாகையே!

    என்பதாகும். பள்ளிவாசல், அஞ்சுவண்ணம் என்ற குறிப்பு இசுலாமியர் குடியேற்றத்தைக் குறிக்கிறது.
    -----

    49. தமிழறியும் பெருமாள்

      பேசும் பெருமாள் தமிழறியும்
              பெருமாள் ஒருத்தி உறையூரில்
      வீசும் தமிழ்நக் கீரனையும்
              வென்றே விருதுக் கொடிகட்டித்
      தேச முழுதும் கீர்த்திகொண்ட
              தெளிந்த புலமைத் திறத்தோர்கள்
      வாச மலியும் தமிழ்எளிதோ
              வளம்சேர் சோழ மண்டலமே.

    உறையூரில் ‘தமிழறியும் பெருமாள்’ என்ற பெயரில் புலமைவாய்ந்த பெண்ணொருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் நக்கீரனை வென்று விருதுக் கொடிகட்டியவள். அவள் தேசமெங்கும் புகழ் கொண்டாள்.

    அளகாபுரி ஏலங்குழலி உறையூரில் கரிகாலனின் ஆலத்திப் பெண்களில் முதல்வியாகிய மரகத வடிவிக்கு மகளாகச் சண்பகவடிவியாகப் பிறந்தாள். அவளே உறையூர் தமிழறியும் பெருமாள் என அபிதான சிந்தாமணி ஆசிரியர் கூறுவர் [ப. 780]. இவள் வரலாற்றின் விரிவை விநோத ரச மஞ்சரி, புலவர் புராணம், தமிழ் நாவலர் சரிதை ஆகிய நூல்களிற் காண்க.
    -----------

    50. மறு இல்லாதோர்

      செறிவான் மதிக்கும் மறுஉண்டு
              செய்யாள் இடத்தும் மறுஉண்டு
      பெறுமால் இடத்தும் மறுஉண்டு
              பெம்மான் இடத்தும் மறுஉண்டு
      குறியால் உயர்ந்த சோழியர்தம்
              குலத்தில் கூற ஒருக்காலும்
      மறுவே இல்லை எனும்நாடு
              வளம்சேர் சோழ மண்டலமே.

    சந்திரனுக்கும், திருமகளுக்கும், திருமாலுக்கும், சிவபெருமானுக்கும் மறு (களங்கம்) உண்டு. ஆனால் சோழியருக்கு எவ்விதக் களங்கமும் இல்லை.

      அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்கும்
      திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
      மறுவாற்றும் சான்றோர்அஃது ஆற்றார் தெறுமந்து
      தேய்வர் ஒருமாசு உறின்.

    என்பது நாலடியார் பாடல் [151].
    ----

    51. சோழிய மகளிர்

      ஓதும் ஆண்சித் திரம்குறியார்
              உலக்கை தீண்டார் குலக்கொழுந்தாய்
      ஆதி காலம் கற்புடைமை
              அளகா புரியில் அறியநின்றார்
      காதலர் ஊரைக் கடந்துசெலார்
              கரைசேர் ஆறு கடவாத
      மாதர் வாழும் மும்மாரி
              வளம்சேர் சோழ மண்டலமே.

    சோழியர் வீட்டுப் பெண்கள் ஆண் சித்திரம் வரைய மாட்டார்கள். உலக்கை தீண்டுதல் முதலிய குற்றேவல் செய்ய மாட்டார்கள். இவர்கள் கற்புத்தன்மையைத் தேவரும் அறிவர். தன்கணவனின் ஊரைக் கடந்து செல்லார். கற்புநெறியிற் பிறழாத இவர்களின் சிறந்த வாழ்வால் சோழ நாட்டில் மாதம் மும்மாரி பெய்கிறது.
    ----------------

    52. தேவூர் வேள்

      தரிசித்து அறியும் கவுதமனார்
              தெய்வச் செயலாய்த் தேவூரில்
      அரிசிக் கதிரின் பொலிவிளைந்தே
              அன்ன தானம் அளிப்பதற்காய்ப்
      பரிசித் திடும்பொற் கலப்பையினால்
              பண்ணை உழுது பயன்படைத்தோன்
      வரிசைக் குடிவே ளாண்பெருமான்
              வளம்சேர் சோழ மண்டலமே.

    தேவர்கள் பாற்கடலைக் கடைந்த பொழுது தோன்றியவர்களில் அகலிகையும் ஒருத்தி. அவளைக் கவுதமரும் இந்திரனும் விரும்பினர். அகலிகை கவுதமரை மணந்தாள். அகலிகையை அடைய விரும்பிச் சென்ற இந்திரன் ஆயிரம் கண் பெற்றான். அகலிகை கல்லானாள்.

    இராமபெருமான் அடி தீண்ட அகலிகை முன்னுருப் பெற்றாள். அந் நிகழ்ச்சி தேவூரில் நடைபெற்றது என்பர். அங்கு வந்த கவுதமர் தேவூர் வேளாளர்களின் பொற்கலப்பையை வாங்கி உழுது நெல் விளைத்து அன்னதானம் செய்தார்.

      அரிசி விளைத்தன்று அமுதளிக்கும் தேவைப்
      புரிசிறக்கும் ஈசர்இரு பொற்றாள் - தரிசித்தோர்
      வேண்டும் வரம்அனைத்தும் மேவுவார் பார்மீதில்
      மீண்டுபிற வார்பெறுவார் வீடு

    என்பது தனிப்பாடல். ‘செம்பியன் தேவூர்’ என்று கல்வெட்டுக் கூறும் (தமிழகத் தொல்லியல் துறை 354 / 1978). தேவூர்உடையான் வேளான் என்பவன் ஒருவன் கல்வெட்டில் குறிக்கப்பெறுகிறான் (ஆண்டறிக்கை 97 / 28).
    -----------

    53. சோழியர் பெருமை

      நூறு தொண்ணூறு எனமேலோர்
              நுவலும் தலங்கள் எவற்றினுக்கும்
      வீறு சேர்ந்த தானிகமும்
              விளங்கு நிலைமைக் காணிகளும்
      ஆறில் ஒன்று பெறும்வேந்தன்
              அருகில் இருப்பும் வரிசையும்சேர்
      மாறி லாத சோழியரே
              வளம்சேர் சோழ மண்டலமே.

    சோழ நாட்டுத் திருத்தலங்கள் நூற்றுத்தொண்ணூற்றினுக்கும் தானிகராக விளங்கிக் கொடை பல அளித்தவர்கள் சோழியரேயாவர். ஆறில் ஒன்று பெறும் அரசரிடம் அருகில் வீற்றிருக்கும் பெருமை படைத்தவர்கள் அவர்களேயாவர்.
    -------

    54. பாக்கம் உடையான்

      ஆக்கம் மிகுந்த ஓர்புலவன்
              ஆர்ஓ லைக்கும் அடங்கான்என்று
      ஊக்கம் மிகுந்த தமிழ்ப்பாட
              உரிந்து கொடுத்தான் உள்ளதெல்லாம்
      பாக்கம் உடையான் எனும்வார்த்தை
              பலரும் அறிவார் அவன்வாழ்வு
      வாய்க்கும் செழும்கா விரிபாயும்
              வளம்சேர் சோழ மண்டலமே.

    பாக்கம் உடையான் என்னும் ஒரு வேளாளச் செம்மல் சேவப்பன் என்னும் ஒரு கவிஞனால் நிந்தாஸ்துதியாகப் பாடப்பட்டான். அவன் புலவர் வேண்டியதைக் கொடுத்தான். சோழ நாட்டு வேளாளருள் பாக்கமுடையான் கோத்திரம் என ஒன்றுளது.

      காரோலை சேவப்ப நாயக்கர் ஓலை கரிப்புக்கட்டி
      நீரோலை திம்மப்ப நாயக்கர் ஓலை நிலத்தின்மற்ற
      பேரோலை பாக்கம் உடையான் செவிக்குப் பிடிபடுமோ
      ஆரோலைக் கும்அடங் கான்காலன் ஓலைக்கும் அப்படியே

    என்பது ஒரு புலவர் பாக்கமுடையானைப் பாடிய பாடலாகும். சேவப்ப நாயக்கன் தஞ்சை நாயக்கரில் முதல் மன்னனுக்கும் பெயர்.
    -----------

    55. அநதாரி

      ஏட்டில் பொலிய ஆன்பசுஒன்று
              எழுதும் கன்றாப் புடைராயன்
      சீட்டுக் கவிதை அநதாரி
              செப்பும் தமிழின் திறன்அறிந்தோன்
      நாட்டில் புகழ்கன் னைக்குடையான்
              நாளும் தண்டா யுதன்பெருமை
      வாட்டுப் படுமோ அவன்காணி
              வளம்சேர் சோழ மண்டலமே.

    தொண்டை நாட்டு வாயல் என்னும் ஊரினரான அநதாரி கல்வி கற்கும் பொருட்டுச் சோழ நாட்டு உறத்தூரில் வாழ்ந்த அந்தணரிடம் வந்தார். அநதாரியின் கல்விப் பெருமையை அறிந்த கன்றாப்பூர் சிங்கராயன் என்பார் அநதாரியை விலைக்கு வாங்கினார்.

    சிங்கராயன் வேண்டுகோளுக்கு இணங்கக் கன்னை என்னும் ஊரில் வாழ்ந்த தண்டாயுதன் என்பவருக்கு அநதாரி சீட்டுக்கவி எழுதினார். அநதாரியின் புகழ் எங்கும் பரவச் செவ்வந்தி என்னும் அரசரின் அமைச்சர் கச்சி வீரப்பன் என்பார் வேண்டுகோளின்படி மதுரைச் சொக்கநாதப் பெருமான் மீது வடமொழியில் உள்ள சுந்தரபாண்டியம் என்னும் நூலைத் தமிழில் பாடினார்.

      மதுரை நாயகன் சுந்தர பாண்டிய வடநூல்
      கதிரு லாமணி ஆறுகால் பீடத்தில் கல்லூர்
      அதிப னாம்திரு விருந்தவன் அவையினில் வாயல்
      பதியில் வாழ்அன தாரிசெந் தமிழினில் பகர்ந்தான்

    (சுந்தரபாண்டியம் - பாயிரம்)

      கம்பனென்றும் தாதனென்றும் காளிஒட்டக் கூத்தன்என்றும்
      கும்பமுனி என்றும்பேர் கொள்வாரோ - அம்புவியில்
      மன்னா வலர்புகழும் வாயல்அன தாரியப்பன்
      அந்நாளி லேயிருந்தக் கால்

    என்ற பாடல் அநதாரியின் பெருமையை விளக்கும். தாதனென்றும் என்பதற்குக் கும்பனென்றும் எனவும் பாடம் உண்டு.
    --------------

    56. பொய்யாமொழியார்

      திறையின் முறையென்று உலகறியச்
              செப்பும் பொய்யா மொழிதமிழ்காத்
      துறையின் அளகை ராசேந்திர
              சோழன் வரிசை தொகுத்தளித்தே
      அறையும் பெருமைச் சீநக்கர்
              அரசூர் முதலா ஏழூரும்
      மறுவில் லாது விளங்கியது
              வளம்சேர் சோழ மண்டலமே.

    பொய்யாமொழியார் தொண்டை நாட்டில் செங்காட்டுக் கோட்டத்தில் உள்ள துறையூரைச் சேர்ந்தவர். திருச்சிராப்பள்ளி வழியாக மதுரை சென்றார். பாண்டியரின் அமைச்சர் தஞ்சைவாணன்மீது கோவை பாடினார். மதுரையில் சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்தார்.

    இறுதிக் காலத்தில் தஞ்சாவூரை அடுத்த அரசூரில் வாழ்ந்தார். அப்போது தஞ்சையை ஆட்சிபுரிந்த சோழ மன்னன் பொய்யாமொழியாருக்குப் பரிசளித்தான். அப்பகுதியில் பேரரசூர், சிற்றரசூர், கண்டியூர், தென்மாவை, கொத்தமல்லி, குருகாவூர் திருப்பூந்துருத்தி முதலான ஏழு ஊர்களுக்குத் தலைவராகச் சீநக்கர் என்பார் விளங்கினார்.

      திறையின் முறைகொணர்ந்து தென்வேந்தர் எல்லாம்
      மிறையும் உறைகழிக்க ஒண்ணார் - அறைகழற்கால்
      போர்வேந்தர் போய்மடியப் போர்வாள் உறைவிடுத்த
      தேர்வேந்தன் தஞ்சைத் தெரு

    என்பது பொய்யா மொழியார் பாடலாகும்.
    -----------

    57. சீநக்கர் புளியஞ்சோறு

      பொய்யா மொழியார் பசிதீரப்
              புளியஞ் சோறு புகழ்ந்தளித்த
      செய்யார் அரசூர் சீநக்கர்
              செய்தது எவரும் செய்தாரோ
      கையார் உதவி பொறையுடைமை
              காணி யாளர் கடன்அன்றோ
      மையார் புவியின் முதன்மைபெற்ற
              மரபோர் சோழ மண்டலமே.

    அரசூர்த் தலைவன் சீநக்கன் பொய்யாமொழியாருக்குப் புளியஞ்சோறு அளித்து உபசரித்தான். அதனைப் புகழ்ந்து பொய்யாமொழியார்,

      அளிகொ ளுந்தொடை யான்அர சைக்குமன்
      ஒளிகொள் சீநக்கன் இன்றுஉவந் திட்டசீர்ப்
      புளியஞ் சோறும்என் புந்தியில் செந்தமிழ்
      தெளியும் போதெலாம் தித்தியா நிற்குமே

    என்று பாடினார்.

    பொய்யாமொழியார் வேற்றிடம் சென்றிந்தபோது சீநக்கன் இறந்து விட்டான். செய்தி கேட்டு ஓடோடி வந்த பொய்யாமொழியார் சீநக்கனுடன் தானும் தீப்பாய்ந்து இறக்க முற்பட்டார். ஊரார் தடுத்து சீநக்கன் ஏற்றுக் கொண்டால் தீப்பாயலாம் என்றனர். பொய்யாமொழியார்.

      அன்றுநீ செல்லக் கிடஎன்றாய் ஆருயிர்விட்டு
      இன்றுநீ வானுலகம் ஏறினாய் - நன்றுநன்று
      வானக்க பூண்மடவார் மாரனே கண்டியூர்ச்
      சீநக்கா செல்லக் கிட

    என்று பாடினார். இறந்த சீநக்கன் உடல் இடம் கொடுக்க பொய்யா மொழியாரும் தீப்பாய்ந்தார் என்பர்.
    --------

    58. தீப்பாய்ந்த ஏழு ஊரார்

      புரைதீர் அரசைப் பதிபுகுந்
              பொய்யா மொழியார் புகழ்த்தமிழ்க்கா
      அரசூர் முதலா ஏழூரும்
              அழலில் புகுந்தது அரிதாமோ
      தரைசூழ் மதியம் மறுவாற்றும்
              சான்றோர் அஃதாற் றார்எனும்சொல்
      வரையாது உலகில் பெற்றோரும்
              வளம்சேர் சோழ மண்டலமே 58

    அரசூரில் சீநக்கன் ஆதரவில் பொய்யாமொழியார் வாழ்ந்தபோது சீநக்கன் கட்டிலில் பொய்யாமொழியார் உறங்கிவிட்டார். சீநக்கன் பத்தினி அறியாமல் அக் கட்டிலிலேயே படுத்து உறங்கினள். ஊரார் அது கண்டு இகழ்ந்தனர்.

    சீநக்கன் இறந்தபோது பொய்யாமொழியாரும் சிதையில் விழுந்து உயிர்விட்டார். ஏழு ஊராரும் பொய்யாமொழியைக் குறை கூறினோமே என்று தீப்பாய்ந்தனர். திருவாலங்காட்டில் தீப்பாய்ந்த எழுபது வேளாளர் வரலாறு இதனுடன் ஒப்பிடத்தக்கது.

      சிற்றரசூர் பேரரசூர் தென்மாவை பூந்துருத்தி
      கொற்றமலி கண்டி குருகாவூர் - இத்தனையும்
      வாய்ப்பாய் அமர்ந்தருளும் மன்னுகுடி அத்தனையும்
      தீப்பாய்ந்த நல்ல திறம்

    என்பது பழம்பாடல். கொற்றமல்லி இப்போது கொத்தமல்லி என வழங்கப் பெறுகிறது.
    -----------

    59. அம்பர் கிழான்

      நல்லம் பருமோ நல்லகுடி
              நாளும் உடைத்து சித்தன்வாழ்வு
      இல்லம் தொறுமூன்று எரியுடைத்துஎன்று
              இசைத்தாள் அவ்வை ஈதேயோ
      சொல்லும் பெரியோர் வாழ்வுடைத்து
              தொலையாது அளிக்கும் சோறுடைத்து
      வல்லம் பெரியோர் அவையுடைத்து
              வளம்சேர் சோழ மண்டலமே.

    நல்லம்பர் நல்ல குடியுடைத்து; சித்தன்வாழ்வு
    இல்லம் தொறும்மூன்று எரியுடைத்து; - நல்லரவப்
    பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின்
    நாட்டுடைத்து நல்ல தமிழ்

    என்று ஒளவையார் பாடினார். அம்பர் பெரியோர் பலர் வாழ்வது. குறையாமல் சோறு அளிப்பது. வல்லம் பெரியோர் அவையுடையது என்பது சோழநாட்டுச் சிறப்பாகும். ‘உய்யக்கொண்டான் வளநாட்டு அம்பர்நாட்டு அம்பர்’ என்பது கல்வெட்டுத் தொடர் (ஆண்டறிக்கை 73 ஆண்டு 1928)

    திவாகர நிகண்டில் இவன்

    ஒளவை பாடிய அம்பற் கிழவோன்

    என்று குறிக்கப் பெறுகிறான். இவனது இயற்பெயர் அருவந்தை என்பதாகும். புறநானூறு 385 ஆம் பாடலில் கல்லாடனாரால் பாடப்பட்ட அம்பர்கிழான் அருவந்தை இவனே என்பார். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற அம்பர் பெருந்திருக்கோயில், அம்பர் மாகாளம் இவ்வூராக இருக்கலாம்.
    -------------

    60. கடுவாய்க்கரைப் புத்தூர்

      வித்தூர் ஆவி விடுத்தாலும்
              மேலோர் கருமம் விடுப்பாரோ
      கத்தூர் தரங்கம் இரங்குபுனல்
              கறங்கூர் கடுவாய்க் கரைநீடு
      புத்தூர் அமர்ந்த வேளாளர்
              புரிகோ புரமும் பொன்மதிலும்
      வைத்தார் நந்தி காட்டியது
              வளம்சேர் சோழ மண்டலமே.

    சோழியர் எத்துன்பம் வந்தாலும் எடுத்த காரியத்தை முடித்தே தீருவர். புனல் அலைபாயும் ஊராகிய கடுவாய்க்கரைப் புத்தூரில் சிவாலயத்துக்குக் கோபுரத்தையும் மதிலையும் அவ்வூர் வேளாளர் அமைத்தனர். அது நந்தியெம் பெருமானால் விளக்கப்பட்டது. இறைவன் சொர்னபுரீசுவரர்; இறைவி சொர்னபுரிநாயகி. கடுவாய் என்னும் ஆறு இப்போது குடமுருட்டி என வழங்கப்படுகிறது. காசிப முனிவர் வழிபட்ட ஊர். திருநாவுக்கரசர் பாடல் பெற்ற தலம். இப்போது ஆண்டாள் கோயில் என வழங்கப்படுகிறது.

    வாய் என்பது ஆற்றின் பெயர். கடுவாய் என்பது குடமுருட்டி ஆற்றின் பழம்பெயர். வெட்டாறுக்கு முள்ளிவாய் என்று பெயர். இவ்வூர் குடவாயிலுக்கும் வலங்கைமானுக்கும் இடையில் உள்ளது. கொங்குநாட்டுப் பேரூர் காஞ்சிவாய்ப் பேரூர் எனப்பட்டது.
    -----

    61. இரட்டைப் புலவர்

      யோகாம் பெரிய சோழியர்வாழ்வு
              உடையார் ஈகை உடையாராய்ப்
      பாகாம் பழைய கல்வியினும்
              பயின்றோர் என்னும் பரிசறிந்தோம்
      ஏகாம் பரனார் கச்சியுலா
              இசைக்கும் புலவர் இரட்டையர்கள்
      வாகாம் பதியார் இலந்துறையாய்
              வழங்கும் சோழ மண்டலமே.

    சோழியர் ஈகையிலும், கல்வியிலும் சிறந்து விளங்கினர். அச் சோழ மண்டலத்தில் இலந்துறை என்னும் ஊரில் இளஞ்சூரியர், முதுசூரியர் என்னும் இருவர் வாழ்ந்தனர். ஒருவர் பிறவிக் குருடர். மற்றொருவர் கால் முடமானவர். இருவரும் தமிழ் கற்றுப் புலமையாளர்களாய் விளங்கினர். முடவர் குருடர் தோள் ஏறிச் செல்வர். இரட்டையர் கலம்பகம் பாடுவதில் சிறந்தவர்கள்

    இவர்கள் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மீது உலாப் பிரபந்தம் ஒன்று பாடினர்.
    --------------

    62. தேவாரத்தில் வேளாளர்

      ஏரின் உழவர் நெடும்பெருமை
              எமையாள் உமையாள் இளமுலைப்பாள்
      ஊரும் பவளக் கழுமலத்தார்
              உரைத்தார் இதன்மேல் உயர்ச்சியுண்டோ
      ஆரம் அணியும் திருமார்பன்
              அன்னார் அறம்செய் தரும்நாடு
      வார முகில்தாழ் மணிமாடம்
              வளம்சேர் சோழ மண்டலமே.

    திருஞானசம்பந்தர் தம் திரு ஆக்கூர்த் தான்தோன்றி மாடத்துத் திருப்பதிகத்தில் வேளாளரைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இதற்கு மேலும் வேறு உயர்வு இல்லை.

      வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் தன்மடந்தை
      தோளாகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில்
      வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும்
      தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே

    என்பது தேவாரப் பாடலாகும். மாடக்கோயில், சிறப்புலி நாயனார் வாழ்ந்த ஊர். இத்தலத்தை நாவுக்கரசரும் பாடியுள்ளார். இந்திரன் பூசித்த தலம் என்பர். ஆயிரம் அடியாருக்கு உணவிடுகையில் இறைவனும் வந்து உணவு உண்டான். ‘ஆயிரத்தில் ஒருவர்’ என்னும் படிமம் உள்ளது.
    ------------

    63. வேளூர் கிழான்

      தாளூர் மலரான் மனைப்படப்பைத்
              தணிக்கத் தரிமுள் தகைந்திழுப்பக்
      கேளூர் முந்தா னையைவிடுவாய்
              கெடுவாய் என்ற கிளிமொழியால்
      வேளூர்க் கிழவன் தன்மகளை
              வெந்தீப் புகுத விடுத்தகதை
      வாளூர் சாபம் ஓங்கியது
              வளம்சேர் சோழ மண்டலமே.

    வேளூரில் நாட்டுநாயனார் என்னும் காணியாளர் வகுப்பு வள்ளல் வாழ்ந்து வந்தார். இவருக்கு பெரும்காணி இருந்ததோடு கச்சினம் முதலிய கோயில் நிர்வாகமும் இருந்தது.

    இவர் மகள் கொல்லையில் ஒருநாள் கத்திரிக்காய் பறித்தவள் முந்தானையை கத்திரிச்செடியின் முள் மாட்டிக் கொண்டு இழுக்கப் பரிகாசமாகச் ‘சீ விடு’ என்று கூறினாள். கச்கினம்கோயில் சென்று வந்த தந்தையார் அவ்வார்த்தைகளைக் கேட்டுத் தன்மகள் ஓர் ஆணிடம் பேசியதாக எண்ணித் தீப்பாயச் சொன்னார். மகளும் சாபம் விடுத்துத் தீப்பாய்ந்தாள். தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டம் திருவாஞ்சியம் சிவன் கோயில் கல்வெட்டில் வேளூர் கிழவன் என்பவன் குறிக்கப் பெறுகிறான் (நன்னிலம் கல்வெட்டுக்கள் 1 - 29)
    -----

    64. காணியாளர்

      எல்லா விளக்கும் விளக்கல்ல
              இதுவே விளக்காய் முக்குளத்தின்
      நில்லார் அவியா விளக்குடனே
              நிரையாய் மூழ்கி நிலைநின்றார்
      பல்லார் அறுபான் நான்குகுடிப்
              பழையோர் கரிகால் பார்த்திபற்கே
      எல்லா மகுட முடிசூட்டும்
              வளம்சேர் சோழ மண்டலமே.

    இளஞ்சேட் சென்னியின் மகன் கரிகாலன் நாடிழந்து வாழ்ந்தான். பட்டத்து யானை கரிகாலனுக்கு மாலையிட்டு உறையூருக்கு அழைத்து வந்தது. தாயத்தார் முடிசூட வந்திருப்பது கரிகாலனோ எனச் சந்தேகித்தனர்.

    கரிகாலன் அரசுரிமை உடையவன் ஆயின் அவனுக்குப் பட்டங்கட்ட உரிமையுடையோர் தலையில் விளக்கை வைத்து ஆன்நெய் வார்த்துத் தாமரை நூலிட்டு ஏற்றிய விளக்குடனே திருவெண்காட்டில் உள்ள முக்குளத்தில் மூழ்கி விளக்கு அணையாது எழவேண்டும் என்று கூறினர். அவ்விதமே 64 காணியாளர்களும் மூழ்கி எழுந்தனர்.

    இன்றும் காணியாளர் வீட்டுத் தாலாட்டுப் பாடல்களில்,

      முன்னாள் முக்குளத்தில் மூழ்கிக் கரையேறி
      மண்ணாளும் சோழனுக்கு மகுட முடிசூட்டி

    என்று பாடுகின்றனர். 64 பெயர்களும 64 கோத்திரங்களாக விளங்குகின்றன.
    -------------

    65. நாங்கூர் அதிபன் சேந்தன்

      தேங்கூர் இதழிச் சடைக்காடர்
              திருவெண் காடர் திருவருளால்
      ஆங்கூர் மலர்க்கைத் தளைதனையும்
              ஆசைத் தளையும் அறவிடுத்த
      நாங்கூர் அதிபன் சேந்தபிரான்
              நலங்கூர் அவனி நாடாண்மை
      வாங்கூர் பெருமை நெடுந்தோற்றம்
              வளம்சேர் சோழ மண்டலமே.

    உரிய வரிசெலுத்தாததற்காகச் சோழ மன்னன் நாங்கூரைச் சேர்ந்த சேந்தன் என்பாருக்குக் கைவிலங்கிட்டான். இறையருளால் பட்டினத்தார் நாங்கூர்ச் சேந்தனின் கைத்தளையைப் போக்கினார்.

    மத்தளை தயிருண் டானும் மலர்மிசை அயனும் தேடி
    பித்தளை கின்ற போது பிரானடிக்கு அன்பு வைத்து
    செய்த்தளை வயலூர் நாங்கூர் சேந்தனை வேந்தன் இட்ட
    கைத்தளை நீக்கி இங்கே காட்டுவென் காட்டு ளானே

    என்பது பட்டினத்தார் பாட்டாகும். நாங்கூர்கிழான் என்று சோழிய வேளாளரில் ஒரு பிரிவினர் உள்ளனர். நாங்கூர் மிகத் தொன்மையான ஊர். கிழக்காசிய நாட்டுக் கல்வெட்டொன்றில் நாங்கூர் குறிக்கப்படுகிறது. நாங்கூர் நாடு என்பது சோழ மண்டலத்தின் ஒரு பகுதியாகும்.
    ---------------

    66. சத்திமுற்றப் புலவர்

      நினையும் கழற்கால் சிலம்பலம்ப
              நின்ற பெருமான் நிலைபாடிப்
      பனையின் கிழங்கு பிளந்ததெனப்
              பவளக் கூர்வாய் நாரையென்றே
      புனையும் முதல்நூல் சத்திமுற்றப்
              புலவன் அமுது புசித்தூற
      வனையு மதுரத் தமிழ்வாடை
              மணக்கும் சோழ மண்டலமே.

    தாராசுரத்திற்கு அருகில் உள்ள திருச்சத்திமுற்றத்தில் ஒரு புலவர் வாழ்ந்து வந்தார். வறுமையில் வாடிய அவர் பாண்டியன்பால் பரிசு பெற மதுரை சென்றார். வைகைக் கரையில் தங்கியவர் குளிரில் வாடிய நிலையில் அருகில் இருந்த நாரையைப் பார்த்துத் தன் மனைவிக்குத் தூது விடுவதாக ஓர் அகவலைப் பாடினார்.

    நாரையின் மூக்குக்குப் பிளந்த பனங்கிழங்கை உவமையாகக் கூறியிருந்தார் புலவர். நாரையின் மூக்குக்கு நெடுநாள் உவமை காணாது தவித்த பாண்டிய மன்னன் மாறு வேடத்தில் நகர்சோதனை வருகையில் இப்பாடலைக் கேட்டு மகிழ்ந்தான். தன் போர்வையைப் போர்த்துச் சென்றான். மறுநாட் காலை அழைத்துப் பரிசில் வழங்கினான்.

      நாராய் நாராய் செங்கால் நாராய்
      பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
      பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்
      நீயும்நின் மனைவியும் தென்திசைக் குமரியாடி
      வடதிசைக்கு ஏகுவீர் ஆயின் அப்போது
      எம்மூர்ச் சத்தி முற்றம் அவ்வூர்க்
      காவினுள் புகுந்து வாவியுள் தங்கி
      நனைசுவர்க் கூரை கனைகுரல் பல்லி
      வரவுபார்த் திருக்கும்எம் மனைவியை நோக்கி
      உன்கோ மாறன் வழுதி கூடலில்
      ஆடை யின்றி வாடையில் மெலிந்து
      கையது கொண்டு மெய்யது பொத்தி
      காலது கொண்டு மேலது தழீஇ
      அலகு சிறந்த பல்லனும் ஆகி
      பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
      ஏழை யாளனைக் கண்டனம் எனுமே

    என்பது சத்திமுற்றப் புலவர் பாடிய பாடலாகும்,
    -----------

    67. தக்கயாகப் பரணி

      ஒத்தது உணர்ந்த நாடனைத்தும்
              ஒருங்கே கூடி உயர்கூத்தன்
      கத்தி அலையத் துரத்துதலும்
              கசிந்து காழிக் கவுணியர்கோன்
      பத்தி யுடனே தக்கன்மகப்
              பரணி பாடப் பணிந்துமுத்தின்
      வைத்த சிவிகை மகிழ்ந்தேற
              வைத்தார் சோழ மண்டலமே.

    செங்குந்தர் மரபினர் ஒட்டக்கூத்தரிடம் தங்கள் மரபு பற்றிப் பாடுமாறு வேண்டினர். ஒட்டக்கூத்தர் காலந் தாழ்த்தவே செங்குந்தர்கள் ஒட்டக்கூத்தரைத் துரத்தினர்.

    சீகாழி இறைவன் அருளால் ‘தக்கயாகப் பரணி’ செய்திருப்பதைத் தெரிவித்தார். செங்குந்தர்கள் கோபம் தணிந்து ஒட்டக்கூத்தருக்கு முத்துச்சிவிகை அளித்தனர்.

    ஒட்டக்கூத்தர் மலரி என்ற ஊரைச் சேர்ந்தவர் என்றும் பூந்தோட்டம் அருகேயுள்ள கூத்தனூரில் உள்ள சரசுவதி தேவியை வணங்கினார் என்றும் அவ்வூரில் சரசுவதியை ஒட்டக்கூத்தர் பெயரன் ஓவாத கூத்தர் எழுந்தருளச் செய்தார் என்றும் மு.இராகவையங்கார் எழுதியுள்ளார். [சாசனத் தமிழ்க்கவி சரிதம், பக். 67-69]
    -------

    68. குடந்தை மருதன்

      தாழப் புதைக்கும் திருத்தங்கித்
              தடங்கா வாழை தனிபழுப்பப்
      பாழிப் புயமா மலைமருதன்
              பலர்க்கும் உதவும் பான்மையினால்
      காழில் பொலியும் இலையரிதாய்க்
              காயும் அரிதாய்க் கனியுமின்றி
      வாழைக் குருத்தும் கிடையாத
              வளம்சேர் சோழ மண்டலமே.

    கும்பகோணத்தில் திருத்தங்கி, மருதன் என இருவர் வாழ்ந்து வந்தனர். திருத்தங்கி கஞ்சன், மருதன் கொடையாளி, ஒளவையார் மருதனைப் புகழுமுகத்தான் ஒரு வெண்பாப் பாடினார்.

    செல்வத்தைப் புதைத்து வைக்கும் திருத்தங்கி வீட்டு வாழை மரத்திலேயே பழுத்துள்ளது. ஆனால் மருதன் வீட்டு வாழையிலோ குருத்து, பூ, காய், கனி எதுவும் இல்லை. ஏனென்றால் அவை பலர்க்கும் உதவின என்றார் ஒளவையார்.

    திருத்தங்கி தன்வாழை தேன்பழுத்து நிற்கும்
    மருத்தன் திருக்குடந்தை வாழை - குருத்தொன்று
    இலையுமி்லை பூவுமிலை காயுமிலை என்றும்
    உலகில்வரு விருந்தோடு உண்டு

    என்பது அப்பாடல்.
    ----

    69. எட்டில் ஒன்று

      உறும்தென் புலத்தார் தெய்வம்விருந்து
              ஒக்கல் தானென்று ஓரைந்தும்
      பெறும்தென் புவியில் எட்டிலொன்று
              பெற்றார் இதுவே பெற்றதன்றோ
      சிறந்த சோழன் பெருமையினும்
              சிறந்தோர் வேளாண் தருமரபோர்
      மறந்தும் பொய்யா தவர்வாழ்வு
              வளம்சேர் சோழ மண்டலமே.

    தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு
    ஐம்புலத்தார் ஓம்பல் தலை

    என்பது குறள் (43). ஆனால் வேளாளர்கள் உழுகுடியிடமிருந்து எட்டில் ஒன்றை மட்டுமே இறையாகப் பெற்றனர். ஆறில் ஒன்று திறை வாங்கும் அரசரினும் வேளாளர்கள் சிறந்தவர்கள். அவர்கள் மறந்தும் பொய் பேசாதவர்கள்.
    ------------

    70. புங்கனூர்க் கிழவன்

      அறங்கூர் பெரியோம் அரசுவரில்
              ஆற்றாது அஃதே அமைகஇனிக்
      கறங்கூர் கெண்டை புரட்டும்எனக்
              கலியா ணத்தில் கவிகேட்டுப்
      புறங்கூர் பவளக் கடாமுழுதும்
              பொன்னங் கலத்தில் புடைசொரிந்த
      மறங்கூர் புங்க னூர்க்கிழவன்
              வளம்சேர் சோழ மண்டலமே.

    புங்கனூர் என்னும் ஊரில் புங்கனூர்க் கிழவன் என்னும் வள்ளல் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டுத் திருமணத்திற்கு வந்த ஒரு புலவர் திண்ணையிலும் கெண்டை (சரிகை வேட்டி) புரளும் என்று பாட அவருக்குச் சரிகைச் சோமன் முதலிய பரிசுகளை அளித்தான்.

    புலவர் பாடிய பாடல் :

      வெண்ணையும் பார்த்தன்னை கண்ணையும்
              பார்த்துத்தம் மெய்யில்பட்ட
      புண்ணையும் பார்க்கும் திருநெடு
              மால்புங்க னூர்க்கிழவன்
      பண்ணையும் சேல்களும் வாவியும்
              ஓர்கயல் பாயும்அவன்
      திண்ணையும் கெண்டை புரட்டும்கல்
              யாணத்தில் சென்றவர்க்கே

    என்பதாகும்.
    ---------------

    71. இராமாயண அரங்கேற்றம்

      திண்மை ஏறும் கம்பனிடம்
              செய்யத் தகுமென் சிறப்பீந்து
      நன்மை ஏறும் இராமகதை
              நற்பேர் புவியில் தழைத்தேற
      உண்மை ஏறும் திருவரங்கத்து
              ஒருவன் சபையில் உத்தரநாள்
      வண்மை ஏற அரங்கேற்றி
              வைத்தார் சோழ மண்டலமே.

    சோழ நாட்டார் கவிவல்ல கம்பருக்குச் சிறப்புக்கள் பல தந்து இராமகாதையின் புகழ் உலகில் சிறக்கத் திருவரங்கத்தில் அரங்கநாதப் பெருமான் முன்னிலையில் பங்குனி உத்தர நாள் அன்று அரங்கேற்றம் செய்தனர்.

    எண்ணிய கோத்தம் எண்ணூற் றேழின்மேல் சடையன் வாழ்வு
    நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன்
    பண்ணிய ராம காதை பங்குனி உத்தர நாளில்
    கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்கு ஏற்றி னானே

    என்பது பழம்பாடல். இதில் குறிக்கப்பட்ட காலம் கி.பி. 885.
    -----------

    72. சடையன் புகழ்

      எட்டுத் திசையும் பரந்துநிலா
              எறிக்கும் கீர்த்தி ஏருழவர்
      சட்டப் படும்சீர் வெண்ணெய்நல்லூர்ச்
              சடையன் கெடிலன் சரிதமெலாம்
      ஒட்டிப் புகழ ஆயிரநா
              உடையாற்கு அன்றி ஒருநாவின்
      மட்டுப் படுமோ அவன்காணி
              வளம்சேர் சோழ மண்டலமே.

    உலகெங்கும் நிலவொளி பரந்துள்ளதுபோல் உழவர் புகழ் எங்கும் பரவியுள்ளது. அவருள் ஒருவரான வெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் புகழை ஆயிரநாவு படைத்த ஆதிசேடனாலும் உரைக்க முடியாது அதனை ஒரு நாவில் எவ்வாறு உரைக்க முடியும்?

      வண்ண மாலை கைபரப்பி
              உலகை வளைந்த இருள்எல்லாம்
      உண்ண எண்ணித் தண்மதியம்
              ஒத்து நிமிர்ந்த நெடுநிலா
      விண்ணும் மண்ணும் திசையனைத்தும்
              விழுங்கிக் கொண்ட விரிநன்னீர்ப்
      பண்ணை வெண்ணெய் சடையன்தன்
              புகழ்போல் எங்கும் பரந்துளதால்

    என்பது கம்பர் பாடல் (பால. மிதியைக் காட்சிப்படலம் - 73).
    ----------

    73. இணையார மார்பன்

      தீரம் பெரிய தென்னர்பிரான்
              சிங்கா தனத்தில் சேருமிவன்
      ஆரென்று உரைப்ப நம்பிஇணை
              யார மார்பன் அடியேற்கும்
      சாரும் சரரா மனுக்குமொரு
              தம்பி எனக்கம் பண்புகழும்
      வாரம் பெறுவெண் ணெயர்பெருமான்
              வளம்சேர் சோழ மண்டலமே.

    ஒருமுறை கம்பர் சோழனை வெறுத்துப் பாண்டியனிடம் இருந்தார். அவரை அழைத்துவரச் சோழன் அனுப்பிய இணையார மார்பன் மதுரை சென்றான். இணையார மார்பனைப் பார்த்துப் பாண்டியன் ‘இவன் யார்’ என்று கேட்கக் கம்பர் சடையப்ப வள்ளலுக்கு இளையானான இணையார மார்பனைத் தன் தம்பி என்று கூறினார்.

      என்னுடைய தம்பி சரராம னுக்குஇளையான்
      கன்னன் மதயானைக் கம்பன்மகன் - துன்னும்
      பணையார்நீர் வேலிப் பழனம்சூழ் சோணாட்டு
      இணையார் மார்பன் இவன்

    என்பது கம்பர் பாடிய பாடலாகும்.
    ------

    74. தாசி வல்லி

      தனதா னியத்தின் உயர்ந்தோர்கள்
              தாமே என்னும் தருக்கேயோ
      வினவாது இரவில் நெற்கதிரால்
              வேய்ந்தார் வல்லி வீடதல்லால்
      கனிசேர் தமிழ்க்குப் பன்னிரண்டு
              கடகம் யானைக் காடளித்த
      மனைவாழ்வு உடையான் வெண்ணெய்நல்லூர்
              வாழ்வான் சோழ மண்டலமே.

    ஒருமுறை கம்பர் தொண்டை நாட்டில் உள்ள திருவொற்றியூர் சென்றார். அங்கு சதுரானை பண்டிதர் மடத்தில் இருந்த வல்லி என்ற தாசியைக் கண்டு காதல் கொண்டார். சோழநாடு வந்தபோது வல்லியையும் உடன் அழைத்து வந்தார்.

    வல்லியின் வீடு மழையில் நனையாமல் இருக்கச் சடையப்ப வள்ளல் கம்பரிடம்கூடச் சொல்லாமல் ஓர் இரவில் நெல் கதிர்களைக் கொண்டு வேய்ந்தார்.

    சடையன் புலவர்க்கு யானைகள் அளித்ததும் கூறப்படுகிறது.

      பொதுமாதர் வீட்டைப் புகழ்பெற வேநெல்
      கதிராலே வேய்ந்தருளும் கங்கைப் - பதிநேர்
      வருவெண்ணெய் நாடன் வருநா வலர்க்குத்
      தருவான் அவன்சடையன் தான்

    என்பது கம்பர் பாடல்.
    --------------

    75. இராமகாதையில் சடையன்

      எண்ணத் தகும்பார் உள்ளளவும்
              இரவி மதியம் எழும்அளவும்
      கண்ணற்கு இனிய சயராம
              கதையில் ஒருபான் கவியமுதும்
      வெண்ணைச் சடையன் சடையன்என
              விறல்ஆர் கம்பன் விளங்கவைத்த
      வண்ணத் துரைவே ளாண்பெருமான்
              வளம்சேர் சோழ மண்டலமே.

    உலகு உள்ள அளவும், சூரிய சந்திரர்கள் உள்ள அளவும் இராமன் சரிதம் கூறும் கம்பராமாயணத்தில் சடையன் சடையன் எனக் கம்பர் விளங்கவைத்த பெருமை வேளாண் மரபினர்க்கு உரியது.

      மஞ்செனத் திகழ்தரு மலையை மாருதி
      அஞ்சலிற் கடிதுஎடுத்து எறிய வேநளன்
      விஞ்சையில் தாங்கினன் சடையன் வெண்ணையில்
      தஞ்சம்என் றோர்களைத் தாங்கும் தன்மையே

    என்பது கம்பர் பாடல்களில் ஒன்று (யுத்த. சேதுபந்தனப் படலம் - 9).
    ---

    76. வெண்ணெய்நல்லூர்

      விள்ளும் மதுரை அலங்கரித்த
              வீம்பு நோக்கி வெண்ணெய்நல்லூர்
      உள்ளும் இடுகாடு ஒக்கும்என
              உரைத்தார் கம்பர் உரைத்தமுறை
      அள்ளும் அணியாற் பசும்பொன்னால்
              அமரா பதிபோல் அலங்கரித்தே
      வள்ளல் வழுதி அதிசயிப்ப
              வாழ்ந்தோன் சோழ மண்டலமே.

    ஒருமுறை கம்பர் பாண்டிநாடு சென்றிருந்தார். மதுரை அலங்காரம் எவ்வாறு இருக்கிறது என்று கேட்கச் சடையனின் வெண்ணெய்நல்லூர் இடுகாடுபோல் இருக்கிறது என்றார். அப்படிப்பட்ட ஊரைப்பார்க்க வேண்டும் என்று பாண்டியன் வரவே வெண்ணெய்நல்லூரைத் தேவலோகம் போலச் சடையன் அலங்கரித்திருந்தான்.

    வெண்ணெய்நல்லூர் என்பது கும்பகோணத்தை அடுத்துள்ள கதிராமங்கலம் [கதிர்வேள் மங்கலம்] ஆகும் என்ற ஒரு கருத்தும் உண்டு. அதனால் வெண்ணெய்நல்லூர் சோழநாட்டுத் தலம் என்று கூறப்படுகிறது. சடையனின் வெண்ணெய்நல்லூர் நடுநாட்டு ஊர் எனப் பலர் கருதுவர்.
    ----------

    77. கன்றாப்புடையான்

      பொன்றாப் புகழோன் தில்லைவண்ணம்
              புகன்றோன் வெண்பா ஒன்பதுபொன்
      நன்றாற் றியபொன் நூறுவண்ணம்
              நாட்டி விருது நாட்டியகோன்
      கன்றாப் புடையான் பேருடையான்
              கல்வி யுடையான் கனவாழ்வு
      மன்றாப் பொலியும் திரள்வீதி
              வகித்தார் சோழ மண்டலமே.

    கன்றாப்பூர் உடையான் என்பவர் ஒரு சோழமண்டலப் புலவர். இவர் தில்லைக்கு ஒரு வண்ணம், வெண்பா ஆகியவை பாடியுள்ளார். இவர் கற்றறிந்த சான்றோர்.
    ---

    78. திருத்தொண்டத் தொகை

      தரைமேல் நாவ லூர்இறைவன்
              தடுத்தாட் கொண்ட தற்பரனைக்
      கரைசேர் பித்தா எனஓதிக்
              காட்டும் பவளக் கனிவாயான்
      உரைசூழ் திருத்தொண் டத்தொகையின்
              நெருங்கும் அடியார் உடன்நிகழ்த்த
      வரையாது அளித்த கொடைவேளாண்
              மரபோர் சோழ மண்டலமே.

    சுந்தரரைச் சிவபெருமான் தடுத்தாட் கொண்டார். சுந்தரர் ‘பித்தா’ என்று தொடங்கிச் சிவபெருமானைப் பாடி மகிழ்ந்தார். சுந்தரர் அடியார்கள் பெயர்களைத் தொகுத்துத் ‘திருத்தொண்டத் தொகை’ பாடினார். அவர் பாடிய அடியார் பலரின் பணிக்கு உடன் இருந்து உதவியவர்கள் சோழ நாட்டார்.

    சுந்தரரின் இத்திருத் தொண்டத் தொகையே நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதிக்கும், சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்திற்கும் அடிப்படையாகும். இதைப் பாடக்காரணமானவர் வேளாண்குல விறன்மிண்டர்.
    -------------

    79. சேக்கிழார்

      காக்கு நீதி இரவிகுலக்
              கழற்கால் வளவன் கனிந்தேவ
      சேக்கி ழார்தம் திருவாயில்
              தெளிந்த முதல்நூல் செழுக்கதையின்
      மேக்கு யாவும் திருவேட
              மெய்யே பொருளா வீடுபெற்றோர்
      வாய்க்கு யாவும் புகழ்வேளாண்
              மரபோர் சோழ மண்டலமே.

    தொண்டை நாட்டில் புலியூர்க்கோட்டத்தில் குன்றத்தூரில் சேக்கிழார் குடியில் அருண்மொழித் தேவர் என்பார் தோன்றினார். அநபாயன் என்னும் இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு [1133 - 1150] அமைச்சராகி அவரால் உத்தமசோழப் பல்லவராயன் என்னும் பட்டத்தைப் பெற்றார். குலப்பெயரால் சேக்கிழார் என அவரை அழைப்பர்.

    சீவகசிந்தாமணி என்னும் நூலைப் படித்துக் கொண்டிருந்த சோழ மன்னனுக்குச் சைவ அடியார் பெருமைகளை உணர்த்துவதற்காகச் சேக்கிழார் பாடிய முதல்நூல் பெரியபுராணம். இது ‘உலகெலாம்’ என்று சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நூல். சிவனைப் பணிவதையே மெய்ப்பொருளாகக் கொண்ட தொண்டர்களின் வரலாறு கூறுவதால் திருத்தொண்டர் புராணம் என வழங்குவதாயிற்று.
    --------------------

    80. கம்பர்க்கு உதவி

      பெற்று வளர்த்தும் வித்தைதனைப்
              பேணிக் கொடுத்தும் பெயர்கொடுத்தும்
      பற்ற அரும்பால் அமுதளித்தும்
              பகைத்த வறுமைப் பயந்தீர்த்தும்
      கற்ற முதல்நூல் திருவழுந்தூர்க்
              கம்பன் தழையக் கருணைசெய்தோர்
      மற்றும் புலவோ ரையும்வாழ
              வைத்தார் சோழ மண்டலமே.

    பெற்றோரால் வளர்க்க முடியாமல் விடப்பட்ட கம்பரைப் பேணி வளர்த்து, கல்வி கற்பித்து, கல்வியில் அவரைப் பெரியவராக்கிப் புகழ்பெறச் செய்து பாலுடன் நல்லுணவு அளித்து, அவர் வறுமையைப் போக்கி அத் திருவழுந்தூர்க் கம்பர் மூலம் கம்பராமாயணம் பாடுமாறு செய்தோர் சோழமண்டல வேளாளர்கள். அவர்கள் பல புலவர்களை ஆதரித்தவர்கள்.

    திருவழுந்தூரில் ‘கம்பர் மேடு’ என்ற பகுதி உள்ளது. தமிழக அரசு அங்கு கம்பர் மணிமண்டபம் கட்டியுள்ளது. கம்பர் மேட்டில் அகழாய்வு நடத்தி அதன் தொன்மை நிலைநாட்டப்பட்டுள்ளது.
    ---

    81. ஏர் எழுபது

      குணங்கொள் சடையன் புதுச்சேரிக்
              குடையான் சேதி ராயன்முதல்
      கணங்கொள் பெரியோர் பலர்கூடிக்
              கம்ப நாடன் களிகூர
      இணங்கும் பரிசில் ஈந்துபுவி
              ஏழும் புகழ்ஏர் எழுபதெனும்
      மணங்கொள் பெருங்காப் பியப்பனுவல்
              வகித்தார் சோழ மண்டலமே.

    வெண்ணெய்நல்லூர்ச் சடையப்ப வள்ளல், புதுச்சேரிக்கு உடையவனான சேதிராயன் என்னும் சோழநாட்டு வேளாளர்குலப் பெருமக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடிக் கம்பர் பெரிதும் மகிழப் பரிசுகள் பல ஈந்தனர். ஏழுலகும் வேளாளர் புகழ் பரவ ‘ஏர் எழுபது’ என்னும் பெருங்காப்பிய நூலைக் கம்பர் வேளாளர்கள் மீது பாடினார்.

    புதுச்சேரி (புதுவை) திருவாரூருக்கு அண்மையில் உள்ளதொரு ஊர். பாண்டிச்சேரியின் வேறானது என்பர்.

      மேடுவெட்டி வளப்படுத்தி மெய்வரம்பு நிலைநிறுத்திக்
      கோடுவெட்டிக் காராளர் குவலயத்தைக் காத்திலரேல்
      பாடுவெட்டிக் குறும்படக்கப் படைவேந்தர் அவர்விளைத்த
      காடுவெட்டிப் பகையறுத்துக் கலிகளைய மாட்டாரே
    (ஏர் எழுபது)
    --------------

    82. கம்பர் - இறுதிநாள்

      ஆன்பால் நறுந்தேன் முக்கனிநீடு
              அமுதின் சுவையா றுடன்அருந்தித்
      தான்பால் அணைய மறப்பதிலைச்
              சடையான் என்று தமிழ்ஓதும்
      தேன்பாய் அலங்கல் கம்பனுக்குச்
              செழும்பா ரிடத்தில் செய்தநன்றி
      வான்பா லிருக்கச் செய்துநலம்
              வைத்தார் சோழ மண்டலமே.

    சடையப்ப வள்ளலால் நன்கு பலகாலும் ஆதரிக்கப்பட்ட கம்பர் தன் இறுதிக் காலத்தில் வள்ளல் ஆதரித்த திறத்தையெல்லாம் ஒரு வெண்பாவாகப் பாடினார். அப்பாடல்

      ஆன்பாலும் தேனும் அரம்பைமுதல் முக்கனியும்
      தேன்பாய உண்டு தெவிட்டுமனம் - தீம்பாய்
      மறக்குமோ வெண்ணை வருசடையா கம்பன்
      இறக்கும்போ தேனும் இனி

    என்பதாகும்.
    -------------

    83. இராமாயண உத்தரகாண்டம்

      பூணி லாவும் கம்பன்நலம்
              பொலியும் தமிழால் பொலிவெய்திக்
      காணு மாறு காண்டம்உறும்
              கதையில் பெரிய காதையெனும்
      தாணி லாவும் கழல்அபயன்
              சபையில் பயில்உத் தரகாண்டம்
      வாணி தாசன் அரங்கேற்ற
              வைத்தார் சோழ மண்டலமே.

    சடையப்ப வள்ளல் அபயன் மூலம் கம்பரைக் கொண்டு இராமாயணம் பாடுமாறு ஏற்பாடு செய்த பொழுது ஒட்டக் கூத்தரையும் இராமாயணம் பாடச் சிலர் ஏற்பாடு செய்தனர்.

    கம்பர் தாம் பாடிய இராமாயணத்தை அரங்கேற்றிச் சொற்பொழிவாற்றிய போது ஒட்டக்கூத்தர் தாம் பாடியது வீண் என்று கருதி ஏடுகளைக் கிழித்தார். அதைக் கண்ட கம்பர் தாம் உத்தரகாண்டம் பாடவில்லை என்றும் உத்தரகாண்டத்திற்கு ஒட்டக்கூத்தர் பாடியதையே வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார். அபயன் அவையில் ஒட்டக்கூத்தர் தன் உத்தரராமாயணம் என்னும் உத்தரகாண்டத்தை அரங்கேற்றினார். கலைமகளின் அருள்பெற்றதால் ஒட்டக்கூத்தர் வாணிதாசன் எனப்பட்டார்.
    ----------

    84. அறுபத்துநான்கு குடி

      ஈழ நீத்தோன் அவளைத்திரை
              இரும்பால் பூட்டும் வரம்படிக்கும்
      காழில் வெறித்த கார்முழுதும்
              கரத்தின் மேலாம் கவிமுழுதும்
      சூழும் பொதுவில் சிறப்பாகத்
              தொடுக்கப் புனைந்த தொன்மையினோர்
      வாழும் அறுபால் நான்குகுடி
              வளம்சேர் சோழ மண்டலமே.

    இப்பாடலில் சோழநாட்டு வேளாளர் 64 குடியினரின் சிறப்புக்கள் பல கூறப்பட்டுள்ளன. உழுதொழிலின் பகுதியில் சில கூறப்பட்டுள்ளன. புலவர்களால் புனைந்துரைக்கப்படும் தொன்மைச் சிறப்புடையவர்கள் அவர்கள் என்பதும் கூறப்பட்டுள்ளது.
    ----------------

    85. குடிதாங்கி

      உலகில் இலம்என்று உரையாமே
              உதவல் குணத்தோர்க்கு உளதாமே
      இலகும் எறும்புக் கால்பதம்வேறு
              இல்லை எனயா வதும்ஈந்தான்
      புலவன் மகிழ்ந்து பிற்பாதி
              புகலக் கேட்ட புகழாளன்
      மலைகொள் புயத்துக் குடிதாங்கி
              வளம்சேர் சோழ மண்டலமே.

    சோழநாட்டில் மன்னார்குடி அருகே களந்தை என்னும் ஊரில் குடிதாங்கி என்னும் வள்ளல் ஒருவன் இருந்தான். அவரிடம் ஒரு புலவன் சென்று கவி பாடி யாசகம் கேட்டான். புலவம் வேண்டியபடி குடிதாங்கி உதவினான்.

    எறும்புக்குக் கூட ஒரு பருக்கை இல்லை என்ற பஞ்ச காலத்தில் யானையும் கவளம் கொள்ளாது தெவிட்டும்படி உதவினான். உலகில் இல்லை என்று கூறாமல் உதவுதல் நல்ல குணமுடையார்க்கு அழகாகும். வள்ளுவரும்,

    இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
    குலன்உடையான் கண்ணே உள
            (குறள். 223)
    என்றார்.

    இல்லைஎன வந்தவர்க்கு இல்லையெனக் கூறாமல்
    நாளும் உணவளிக்கும் நல்லதம்பிச் சர்க்கரைமன்

    என்று கொங்குநாட்டுப் பழைய கோட்டை மரபினரை ஒரு பாடல் புகழும்.

    களந்தைக்குத் தெற்கில் குடிதாங்கிச்சேரி என்ற ஊர் உள்ளது. இவனைக் களந்தைக் குடிதாங்கி என்றும் அழைப்பர்.

      வெறும்புற் கையும்அரி தாம்பிள்ளை சோறும்என் வீட்டில்வரும்
      எறும்புக்கும் ஆற்பதம் இல்லைமுன் னாள்என்னி ரும்கலியாம்
      குறும்பைத் தவிர்த்த குடிதாங்கி யைச்சென்று கூடியபின்
      தெறும்புற்கொள் யானை கவளம்கொள் ளாமல் தெவிட்டியதே

    என்பது தனிப்பாடல் (தமிழ் நாவலர் சரிதை 191). முதலில் பாதிப் பாடலைப் பாடிப் பரிசில் பெற்றபின் பிற்பாதியைப் பாடியது என்பர்.
    -----------------

    86. பெரியபுராண அரங்கேற்றம்

      குலத்தில் பெரியோர் பேர்படைத்த
              குணத்தில் பெரியோர் கொடைப்பெரியோர்
      தலத்தில் பெரிய அநபாயன்
              தழைத்த சமூகம் தனில்ஏறிப்
      பலத்தில் பெறுபஞ் சாக்கரநீள்
              படியில் பெரிய புராணத்தை
      வலத்தில் குலவ அரங்கேற்றி
              வைத்தார் சோழ மண்டலமே.

    குலத்தில் பெரியோர்களும், புகழ்பெற்ற குணத்தில் பெரியோர்களும், கொடையில் பெரியோர்களும் ஒன்றாகக் கூடிப் பெரியபுராணத்திற்குச் செய்ய வேண்டிய மரியாதைகளையெல்லாம் செய்து யானை மீதேற்றி வைத்து ஊர்வலமாகக் கொண்டு வந்து அநபாய சோழன் முன்னிலையில் தில்லைப் பொன்னம்பலத்தில் பஞ்சாக்கரப் படியில் வைத்து அரங்கேற்றம் செய்வித்தனர்.

    திருஞானசம்பந்தரின் திருநாளான சித்திரை ஆதிரையில் 4-4-1139 அன்று தொடங்கிய பெரியபுராண அரங்கேற்றம் 22-4-1140 அன்று நிறைவெய்தியதாகக் கல்வெட்டறிஞர் குடந்தை என்.சேதுராமன் அவர்கள் கருதுகிறார்.
    -----

    87. சிலம்பன் திருவேங்கடன்

      நாமே வியசொல் இலக்கணமாம்
              நன்னூ லகத்து நாட்டிவைத்த
      பூமேல் எனும்பா டலுக்குஅளித்த
              பொன்ஆ யிரமும் போதாதோ
      தேமே விடுமா லையும்கொடுத்த
              சிலம்பன் திருவேங் கடன்வாழ்வு
      மாமே வியபூம் பொழில்வாவி
              வளம்சேர் சோழ மண்டலமே.

    சொல் இலக்கணம் கூறும் நன்னூலின் உரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள

      பூமேலா ளாரென்பார் பூம்கோர் என்செய்யும்
      தீமேற் படின்கொடுத்தால் கொள்வதெவன் - ஆமே
      நலம்திகழும் செங்கை நயதீரன் எங்கோன்
      சிலம்பன் திருவேங் கடன்

    என்னும் வினாவுத்தரப் பாடலுக்கு ஆயிரம் பொன்னைச் சிலம்பன் திருவேங்கடன் பரிசிலாகக் கொடுத்தான். அத்துடன் மாலையும் கொடுத்தான் (நன்னூல், மயிலைநாதர் உரை 288).
    -----------

    88. புத்தூர் வேள்

      இடமண் டியயாப் பருங்கலநூல்
              எனும்கா ரிகையில் பதித்தமணித்
      தடமண் டியதா மரையின்எனும்
              தமிழ்போல் உலகம் தனில்உண்டோ
      திடமண் டியஅத் தமிழ்க்குதவும்
              சீமான் செழும்தென் மண்டலமும்
      வடமண் டலமும் பரவுபுத்தூர்
              வளம்சேர் சோழ மண்டலமே.

    புத்தூரில் வேளாண்குலச் செம்மல் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவனைப் புலவர் பலர் பாடிப் பரிசில் பெற்றனர். ஒரு புலவன் பாடிய பாடல் மிகவும் இனிமையாக இருந்தது. அப்பாடலை யாப்பருங்கலத்தில் அமிதசாகரர் இருகுறள் நேரிசை வெண்பாவுக்கு எடுத்துக்காட்டாகக் காட்டினார் (யாப்பருங்கலவிருத்தி 60).

      தடமண்டு தாமரையின் தாதாடு அலவன்
      இடமண்டிச் செல்வதனைக் கண்டு - பெடைஞெண்டு
      பூழிக் கதவடைக்கும் புத்தூரே பொய்கடிந்து
      ஊழி நடாயினான் ஊர்

    என்பது அப்பாடலாகும் (பெருந்தொகை 2140).
    ----------

    89. கருணாகரன்

      பூதம் பணியச் சீட்டெழுதிப்
              பொருளாய் லட்சம் பொன்கொடுத்த
      ஓதும் பூத மங்கலவாழ்வு
              உடையான் ஈதல் உடையானே
      காதல் சேரும் கடாரமெலாம்
              கண்ட கருணா கரப்பெருமான்
      மாது பாகன் திருப்பணிக்கே
              வைத்தார் சோழ மண்டலமே.

    திருவாரூரில் பூதமங்கலத்தான் என்னும் வறியவன் ஒருவன் வாழ்ந்தான். அவன் மகன் கருணாகரன். பூதமங்கலத்தான் இறந்துவிட்டான் சிறுவன் கருணாகரன் செல்வனாவான் என்பதைத் தன் மந்திர சக்தியால் அறிந்த ஒருவன் வந்து கருணாகரனிடம் ஒரு லட்சம் பொன் கேட்டான்.

    கருணாகரன் நகைத்து ஒரு காசுகூட இல்லாத என்னிடம் சீட்டெழுதி ஒரு லட்சம் பொன் கேட்கிறாயே என்றான். பின் கருணாகரனுக்காகச் செல்வத்தைக் காத்து நிற்கும் பூதத்திடம் சென்று பொன்பெற்றுச் சென்றான்.

    பின் பூதம் வேண்டக் கடாரங்கொண்டானிலிருந்து பொற்குவியல் பெற்றுக் கருணாகரன் செல்வன் ஆனான். பெரும் செல்வத்தை திருவாரூர்ச் சிவாலயத்திற்கு அளித்தான்.
    ---------------

    90. முட்டம் உடையான்

      கொட்டம் உடையான் கீழக்கோ
              புரமும் மதிலும் குறித்தமைத்தே
      முட்டம் உடையான் மகபூசை
              முழுதும் உடையான் மொய்ம்புடையான்
      பட்டம் உடையான் காவிரிப்பூம்
              பதியும் உடையான் பரிந்தகுடை
      வட்ட நிழலில் குளிர்ந்ததன்றோ
              வளம்சேர் சோழ மண்டலமே.

    முட்டம், காவிரிப்பூம்பட்டினம் ஆகிய ஊர்களின் தலைவனான முட்டம் உடையான் திருவாரூர்க் கோயிலில் கீழக் கோபுரத்தையும், மதிலையும் கட்டினான்.
    -----

    91. தியாகராசப் பள்ளு

      கருணா கரன்செய் திருப்பணியைக்
              கருதி நலமாய்க் கண்டுசெய்த
      பொருளீ நாலத் தொன்றுடையான்
              பூமி யானைப் போல்ஆரோ
      திருவா ரூரில் வன்மீகத்
              தியாக ராசப் பள்ளுதந்தும்
      மருவார் பணிய அரங்கேற்றி
              வைத்தார் சோழ மண்டலமே.

    கருணாகரன் செய்த திருப்பணியை முன்னின்று முடித்தவர் நாலத் தொண்ணு என்னும் ஊரைச் சேர்ந்த மல்லைய பூபன் என்பவன். அவன் திருவாரூரில் தியாகராசப்பள்ளு என்னும் நூலை அரங்கேற்றி வைத்தார்.

    முன்பு திருவாரூரில் ஆவணி மாதம் நடைபெற்ற பவித்ரோத்சவப் பத்துநாள் விழாவில் தியாகராசப் பள்ளு நடிக்கப்பட்டது. இப்பள்ளு நூலைப் பாடியவர் ஞானப்பிரகாச கோத்திரத்து ஞானப்பிரகாச பட்டாரகர் என்பவர். அவர் தருமை முதல்வர் குருஞானசம்பந்தரின் குரு கமலை ஞானப்பிரகாசரே ஆவார்.

    மங்கை பாடக் கமலைச் சடிலர் மருவும் அரவம் ஆடவே
    மார்பில் செங்கழு நீரும் பைந்தொடை மணிப்பொன் தோடும் ஆடவே
    கங்கை ஆடத் திங்கள் ஆடக் கனக தண்டினில் ஆடுவார்
    கமலை வாழும் அமரர் மேவும் கயலு லாவும் வயலுளே

    என்பது தியாகராசப் பள்ளுப் பாடலில் ஒன்றாகும் (58).
    --------------

    92. கணம்புல்லர்

      போற்றா மற்பெண் ணார்அழலில்
              புகுந்தாள் அதிலும் புதுமையிது
      முற்றா எழுந்த கணம்புல்லால்
              மூடிப் பாத முடியளவாய்
      பற்றா உடலை விளக்கேற்றிப்
              பரனுக்கு ஏற்பப் பதித்தபுரி
      வற்றா நிலைமைக் கணம்புல்லன்
              வாழ்வாம் சோழ மண்டலமே.

    இருக்குவேளூரில் வேளாளர்களில் தலைமை வாய்ந்த கணம்புல்லர் என்பவர் வாழ்ந்து வந்தார். செல்வம் கரைந்து ஏழையான பின் சிதம்பரம் சென்று புல்லறுத்து விற்றுத் திருத்தொண்டு செய்து வந்தார்.

    ஒருநாள் புல் விற்காமையால் அதனைக் கொண்டே விளக்கெரித்தார். புல் போதாமையால் தலைமயிரினை அரிந்து விளக்கெரித்து முக்தி பெற்றார்.

      முன்புதிரு விளக்கெரிக்கும் முறையாமம் குறையாமல்
      மென்புல்லும் விளக்கெரிக்கப் போதாமை மெய்யான
      அன்புபுரி வார்அடுத்த விபுளக்குத்தம் திருமுடியை
      என்புருக மடுத்தெரித்தார் இருவினையின் தொடக்கெரித்தார்

    (கணம்புல்ல நாயனார் புராணம் 7)

    தில்லைத் திருப்புலீசுவரர் கோயிலில் இவர் படிமம் உள்ளது.
    ------------

    93. விண்ணன் ஆறு

      கண்ணார் உலகில் பகீரதனும்
              கண்டு கொணர்ந்தான் கங்கையென்பார்
      விண்ணாறு எளிதோ ஆறுதந்த
              வேளாண் குரிசில் விண்ணன்அன்றோ
      தண்ணார் முள்ளி ஓடம்வரச்
              சம்பந் தனும்செந் தமிழ்பாட
      மண்ணாள் செல்வம் பெருங்கீர்த்தி
              வகித்தார் சோழ மண்டலமே.

    உலகில் பகீரதன் கங்கையைக் கொண்டு வந்ததுபோல் விண்ணன் என்ற சோழர் படைத்தலைவன் பழசை என்னும் பழயனூர்ச் சிவாலயப் பூசையின் பொருட்டுத் தன் பெயரால் ஓர் ஆறு வெட்டினான். அது விண்ணாறு எனப்பட்டது. அது இப்போது வெண்ணாறு என வழங்கப்பெறுகிறது.

    திருஞானசம்பந்தர் கொள்ளம்புதூர் சென்று பாடும்போது படகோட்டி இல்லாமல் ஓடம் சென்றது. அது இவ் ஆறு என்பர். சோழ மண்டலத்தில் பாண்டிய குலாசனி வளநாட்டு ஏரியூர் நாட்டில் இருந்த மும்முடிச்சோழநல்லூர் என்ற ஊர் அங்கிருந்த பெரிய ஏரியால் ‘விண்ணன் ஏரி’ என்றே அழைக்கப்பட்டது (தெ.இ.க. II 94, 95).

    முழங்கு கடல்தானை மூரிக் கடற்படை முறித்தார்மன்னர்
    வழங்கும் இடமெல்லாம் தன்புகழே போக்கிய வைவேல்விண்ணன்
    செழுந்தண்பூம் பழசையுள் சிறந்து நாளும்செய
    எழுந்தசே திகத்துளே இருந்தஅண்ணல் ஆரடி
    விழுந்தண்பூ மலர்களால் வியந்துநா ளும்தொழத்
    தொடர்ந்து நின்ற வெவ்வினை துறந்துபோ மால்அரோ

    என்பது பழம்பாடல் (யாப்பருங்கல விருத்தி 67). சேதிகம் - சமணப் பள்ளி.

    கூர்ந்த வறுமையிடைக் கோள்அரவம் ஈன்றமணி
    சார்ந்த புலவன் தனக்களித்தான் - வார்ந்ததரு
    மேலைவிண்ணின் மண்ணில் விளங்கும் புகழ்படைத்த
    சாலைவிண்ண னுக்குஇணையார் தாம்

    என்ற இப் பாடலில் விண்ணன் புலவர்க்கு நாகமணி அளித்தமை கூறப்படுகிறது.

      அருள்நெறி ஒருவநிற் பரவுதும் எம்கோன்
      திருமிகு சிறப்பில் பெருவகை அகலத்து
      எண்மிகு தானைப் பண்ணமை நெடுந்தேர்
      அண்ணல் யானைச் செங்கோல் விண்ணன்
      செருமுனை செருக்குஅறத் தொலைச்சி
      ஒருதனி வெண்குடை ஓங்குக எனவே

    என்பது ஒரு பழம்பாடல் (யாப். விருத்தி 83).
    ---------------

    94. திரிகர்த்தராயன்

      அளிக்கும் படைமூ வேந்தரும்கொண்
              டாடும் விருந்தால் அதிசயமாய்த்
      திளைக்கும் திரிகர்த்த ராயன்எனச்
              செப்பும் வரிசைத் திறம்சேர்ந்தோன்
      விளைக்கும் அரிசி மாற்றியநீர்
              வெள்ளம் கிழங்கு விளையும்என
      வளைக்கும் பெருமைப் புதுவையர்கோன்
              வளம்சேர் சோழ மண்டலமே.

    சடையப்ப வள்ளல் சேர சோழ பாண்டிய அரசர்கட்கு விருந்தளித்தார். விருந்தில் மகிழ்ந்த மூவேந்தர்கள் வள்ளலுக்குத் ‘திரிகர்த்தராயன்’ என்று சிறப்புப்பெயர் அளித்தனர். இல்லத்தில் அரிசி கழுவிய நீர் வெள்ளப் பெருக்கெடுத்து வயலில் விளைவிக்கும் புதுவைக்கு உடையவர் சடையப்ப வள்ளல்.

    சிங்கணர் கொங்கணர் சேதியர் திரிகர்த்தம்

    என மெய்க்கீர்த்தி கூறும்.

      யாமார் புகழ இயற்கம்ப நாடன் இராமனொடும்
      பாமாலை சூடும் குலமுடை யானைப் படிபுரக்கக்
      கோமாறன் இட்டபொற் சிங்கா தனம்பெற்ற கொற்றவனைத்
      தேமாலை அச்சம் தவிர்ப்பான்வெண் ணைத்திரி கர்த்தனையே

      தண்ணார் கமலச் சதுமுகத் தோனையும் தப்புவதோ
      பண்ணா மணித்தலைக் கட்செவி யானது பாரினுள்ளே
      கண்ணாக வாழும் வெண்ணைத் திரிகர்த்தன் கலைத்தமிழ்கேட்டு
      எண்ணா முடியசைத் தால்உலகு ஏழும் இறக்குமன்றே

    என்பன தனிப்பாடல்கள்.
    -------------

    95. பாண்டிநாட்டில் சோழியர்

      ஓதார் காரைக் காடர்குடி
              ஒன்று கொடுத்தே உயர்மாறன்
      கொத்தார் கொடைவே ளாளர்குடி
              கொண்டே மதுரை குடியேற்றிப்
      பத்தார் திசையில் இருங்கள்எனப்
              பாண்டி நாடன் பட்டமிட்டு
      வைத்தார் வேளூர்க் கிழவனது
              மரபோர் சோழ மண்டலமே.

    பாண்டிய மன்னன் தன் நாட்டுக்கு வேளாளர் வேண்டும் என்பதற்காகச் சோழ நாட்டுக்கு வந்து காரைக்காடர் குடியைச் சேர்ந்த வேளூர் கிழவன் என்ற வேளாளர் தலைவனையும் பிறரையும் அழைத்துக் கொண்டு சென்று மதுரையிலும் பாண்டி நாட்டின் பல இடங்களிலும் குடியமர்த்தினான். அவர்கள் பாண்டிய நாட்டில் வாழ்ந்தாலும் சோழிய வேளாளர் என்றே அழைக்கப்படுகின்றனர்.
    -----------

    96. காங்கேயன் நாலாயிரக்கோவை

      கோலா கமலன் னரில்அவன்போல்
              கொடுத்தே புகழும் கொண்டோர்ஆர்
      மேலார் கவுடப் புலவன்எனும்
              விழுப்பேர் கூத்தன் முழுப்பேராய்
      நாலா யிரக்கோ வையும்புனைய
              நவில்கென்று இசைத்து நாட்டுபுகழ்
      மாலாம் எனும்காங் கயன்வாழ்வு
              வளம்சேர் சோழ மண்டலமே.

    காங்கேயன் எனும் வளள்ல் ஒட்டக்கூத்தரைப் படிக்கவைத்து கவுடப் புலவன் என்று புகழ்பெறுமாறு செய்தான். நன்றி மறவாத ஒட்டக்கூத்தர் அக் காங்கேயன்மேல் நாலாயிரக் கோவை என்னும் நூலைப் பாடினார்.

      பதிநோக்கி அன்னையைத் தண்டனிட் டேன்எனும் பாங்கியரை
      எதிர்நோக்கி நின்று தழுவுகின் றேன்எனும் என்றுபொன்னி
      நதிநோக்கி வாழும் நவபுதுச் சேரிநன் னாட்டில்என்றன்
      விதிநோக்கிக் காளைபின் மேவுகின் றேன்எனும் வேதியரே

      (நாலாயிரக்கோவை - சுரம்போக்குத் துறை)

      புதுவைச் சடையன் பொருந்துசங் கரனுக்கு
      உதவித் தொழில்புரி ஒட்டக் கூத்தனைக்
      கவிக்களிறு உகைக்கும் கவிராட் சதன்எனப்
      புவிக்குயர் கவுடப் புலவனும் ஆக்கி
      வேறுமங் கலநாள் வியந்துகாங் கயன்மேல்
      கூறுநா லாயிரக் கோவைகொண் டுயர்ந்தோன்

    என்பது பழம் பாடல்.
    -------------

    97. பெருமங்கலமுடையான்

      களத்தில் பொலிகா டவன்பணியக்
              கண்டான் கொண்டான் களவகுப்புத்
      தளத்தில் பெரிய வடஅரசர்
              தாமேல் இடும்பொய்த் தலைகொண்டான்
      உளத்தில் பரவு காளியருள்
              உடையான் சோழன் உறுப்புடையான்
      வளத்தில் பெரும்மங் கலமுடையான்
              வளம்சேர் சோழ மண்டலமே.

    காடவர்கோன் என்னும் பல்லவன் சோழர்க்குப் பணியாமல் இருந்தான். பெருமங்கலமுடையான் என்னும் சோழர் படைத்தலைவன் வடநாட்டின் மேல் படையெடுத்து வடவரசர்களைக் கொன்று அவர்கள் தலைபோல் பொய்த்தலைகளைக் கொணர்ந்தான். பெருமங்கலமுடையான் வீரத்தைப் புலவர்கள் புகழ்ந்து களவகுப்புப் பாடினர். காடவன் பயந்து சோழனைப் பணிந்து வாழ்ந்தான். பெருமங்கலமுடையான் காளி அருள்மிக்கவன்.

      கோட்டை வாசலில் கூளிதன் பலத்தால்
      வாட்டமில் வளவனை மலைவறப் பொருதிடும்
      வடவர சரைப்பெரு மங்கலம் உடையீர்
      படைபொருது அவசயப் படுத்தும்என்று ஏவலும்
      காத்தெழு பத்திர காளியால் அந்தப்
      பேய்த்தலை கொண்டு பெரும்படை சயித்தோம்

    என்பது பழம்பாடல். பெருமங்கலமுடையான் என்ற பெயர் தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டம் உத்தராபதீசுவரர் கோயில் கல்வெட்டில் குறிக்கப்படுகிறது. ஆண்டறிக்கை [66, 72 ஆண்டு 1913]
    ----

    98. வீரசோழியம்

      ஆர வார இலக்கண நூல்
              ஐந்தும் முழங்க அதிற்குஎதிர்நூல்
      பாரின் மீது தமிழ்க்கூத்தன்
              பாடி அமைத்தான் பயன்ஓர்ந்தே
      வீர சோழன் உடன்இருந்து
              வியந்தே வீர சோழியநூல்
      வாரம் ஏற அரங்கேற்றி
              வைத்தார் சோழ மண்டலமே.

    எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கண நூல் வழங்கும் போது அதற்கு எதிர்நூல் ஒன்றை ஒட்டக்கூத்தர் பாடினார். வீரசோழன் என்னும் சிறப்புப் பெயருடைய வீர ராசேந்திரன் [1063 - 1070] காலத்தில் பொன்பற்றிப் புத்தமித்திரன் என்பவர் வீரசோழியம் என்னும் ஐந்திலக்கண நூலை இயற்றினார்.

    பொன்பற்றி சோழநாட்டில் அறந்தாங்கி வட்டத்தில் பழைய மிழலைக் கூற்றத்தில் உள்ளது. காரைக்காலுக்குப் பக்கத்திலும் பொன்பற்றி என்னும் ஊர் ஒன்று உள்ளது.

      ஈண்டுநூல் கண்டான் எழில்மிழலைக் கூற்றத்துப்
      பூண்டபுகழ்ப் பொன்பற்றி காவலனே - மூண்டவரை
      வெல்லும் படைத்தடக்கை வெற்றிபுனை வீரன்தன்
      சொல்லின் படியே தொகுத்து

    என்பது பழம்பாடல். பெருந்தேவனார் வீரசோழியத்திற்கு உரையெழுதியுள்ளார்.

      தடமார் தருபொழில் பொன்பற்றி காவலன் தான்மொழிந்த
      படிவீர சோழியக் காரிகை தூற்றெண் பஃதோடொன்றின்
      திடமார் பொழிப்புரை யைப்பெருந் தேவன் செகம்பழிச்சக்
      கடனாக வேமொழிந் தான்தமிழ்க் காதலில் கற்பவர்க்கே

    என்பது பழம்பாடல்.

    வீரசோழியத்தைப் பற்றிய அரிய செய்திகளுக்குத் தமிழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சு.இராசாராம் அவர்கள் எழுதிய ‘வீரசோழிய இலக்கணக் கோட்பாடு’ என்னும் நூலைக் காண்க.
    ---------

    99. இந்திரன்

      எந்த நாடு தளர்ந்தாலும்
              இதுவே தாங்கும் இன்னம்இன்னம்
      புந்தி நாடிப் பொன்னாடு
              புரந்தார் குடியும் புறப்பட்டார்
      சொந்த நாடாய் வந்திருந்து
              சூரன் ஒடுங்கச் சுகமாகி
      வந்து வானும் குடியேற
              வைத்தார் சோழ மண்டலமே.

    உலகில் எந்த நாடு தளர்ந்தாலும் சோழநாடே அதைத் தாங்கும் இயல்புடையது. ஒருமுறை காசிபரது மகன் சூரபன்மன் தேவர்களை விரட்டித் தேவலோகத்தைக் கைப்பற்றிக் கொண்டான். தேவேந்திரன் சீகாழிக்கு வந்து நந்தவனம் ஏற்படுத்திச் சிவபெருமானை வணங்கி வந்தான். அந்நந்தவனம் நீரின்றிக் காய விநாயகன் அருளால் காவிரி பெருகியது (பாடல் எண் 4 காண்க).

    சோழநாட்டில் இந்திரனுக்குப் பல கோயில்கள் இருந்தன. புகாரில் இந்திரவிழா 28 நாட்கள் நடைபெற்றது. கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத்தில் இவ் வரலாறு கூறப்படுகிறது.
    -----------------

    100. நெம்மேலித் தச்சன்

      நிச்சம் உறவே நெல்பயிராய்
              நீளும் தமிழ்க்கு நெம்மேலித்
      தச்சன் பொலிஆ யிரக்கலநெல்
              தந்தான் உலகிற்கு ஆதரவாய்
      மெச்சும் அவனது ஆண்மையினால்
              வென்றே கொடியின் விருதுகட்டி
      வைச்ச கொடையின் திறம்எளிதோ
              வளம்சேர் சோழ மண்டலமே.

    கம்பர் சோழனுடன் கருத்து மாறுபாடு கொண்டு வேற்று நாட்டுக்குப் புறப்படும்போது நெம்மேலித் தச்சனைப் பாடினார். நெம்மேலித் தச்சன் கம்பருக்கு ஆயிரம் கலம் நெல் அளித்தான். கம்பர் அந்நெல்லைத் தன் உறவினர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு வெளிநாடு சென்றார்.

    ஆட்டூர் நெம்மேலி என்னும் பெயரில் இவ்வூர் மங்கநல்லூர் புகைவண்டி நிலையம் அருகில் உள்ளது. இவ்வூர் நென்மலி என்றும் வழங்கப்பெறும்

      வரிசை பெரிதுடையார் கட்கலமும் தூயர்
      புரிசை யொருசாரார் அம்பலமும் தண்ணீரும்
      தன்னிலத்த அல்ல புரிசைக்குத்
      தெற்கொற்றித் தோன்றும் திருநென் மலியேநம்
      பொற்கொற்றி புக்கிருக்கும் ஊர்

    என்பது பொய்கையாரின் ஆரிடச் செய்யுள் (யாப். விருத்தி 93).

      நெற்பயிர் விளைகழனி நெம்மேலி வாழ்தச்சன்
      கற்படு திண்டோளன் கங்கண கணகணவன்
      விற்புரை விழிநுதலாள் மின்மினி மினுமினுவை
      சொற்படி வேலைசெய்வான் துந்துமி துருதுருவை

    என்பது கம்பர் வாக்கு.
    --------------

    101. கன்றாப்பூர் நடுதறி

      தோளார் தொடையான் அரும்புடையான்
              தோன்றல் திருமால் தொண்டனுமாய்
      வேளாண் மகளை மணம்புணர்ந்து
              விழைந்தான் அவளும் விடையூர்திக்கு
      ஆளாய் அன்பின் நடுதறியை
              அருச்சித்து இலிங்க மாகவைத்து
      மாளா நிலைமைக் கற்புடையாள்
              மரபோர் சோழ மண்டலமே.

    திருநாட்டியத்தான்குடியில் பரம வேளாளர் என்பாருக்கு ஒரு பெண் பிறந்தாள். அவளைக் கன்றாப்பூர் அரும்புடையான் மகன் ஆதிவராகனுக்குத் திருமணம் செய்வித்தனர். பரம வேளாளர் மகள் சைவ சமயம் சார்ந்தவள். அவளது கணவன் வைணவன்.

    அப்பெண் நாள்தோறும் கணவனுக்குத் தெரியாமல் மாட்டுக் கொட்டிலில் உள்ள நடுதறியைச் சிவலிங்கமாகக் கொண்டு வணங்கி வந்தாள். மனைவியின் செயலை அறிந்த கணவன் அந் நடுதறியைக் கோடரியால் வெட்ட அந் நடுதறியில் சிவபெருமான் தோன்றினார். வியந்த கணவனும் சிவனடியாராகி வீடு பெற்றான். தம் தேவாரத்தில்

    கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே

    என்று அப்பர் பாடினார். சிவலிங்கத்தில் கோடாரிக் காயம் இன்றும் உள்ளது.

      நாளார் பெரும்புகழ் நாட்டியத் தான்குடி நம்பரம
      வேளார் மகளை அரும்புடை யான்மகன் வெண்ணைகள்வற்கு
      ஆளாம் பனசையில் ஆதி வராகன்கொண்டு அம்புவியில்
      நீளாத வீடு குடிபுகுந் தான்அவள் மேன்மைகொண்டே

    என்பது பழம்பாடல்.

    கன்று + ஆப்பு + ஊர் கன்று கட்டிய ஆப்பினை இறைவனாக எண்ணி வழிபட்ட ஊர். மொக்கணி என்னும் குதிரைக் கொள்ளுப் பையைச் சிவலிங்கமாக வழிபட்ட மொக்கணீச்சுரம் கொங்கு நாட்டில் உள்ளது [திருவாசகம் - கீர்த்தித் திரு அகவல் 33 - 34].
    --------------

    102. அம்பலப்புளி

      தெளிவந்து அயன்மால் அறியாத
              தில்லைப் பதிஅம் பலவாணர்
      புளியம் பொந்தின் இடம்வாழும்
              புதுமை காட்டிப் பொருள்காட்டி
      எளிதில் புளியங் குடியானென்று
              இசைக்கும் பெருமை ஏருழவர்
      வளரும் குடியில் பெருவாழ்வு
              வளம்சேர் சோழ மண்டலமே.

    அன்னிய மதத்தார் ஆட்சிக் கலகக் காலத்தில் தில்லை நடராசப் பெருமானை எடுத்துக் கொண்டுபோய் ஓரூரில் பெரிதாய் இருந்த ஒரு புளியமரப் பொந்தில் வைத்து மூடிவிட்டனர்.

    கலகம் ஓய்ந்து பெருமானை எடுத்துவர முயற்சிக்கையில் வைத்த இடம் தெரியாது தவித்தனர். அங்கு ஏர் உழுத உழவர் உழுதபின் காளைகளை அவிழ்த்து விடுபவர்கள் அம்பலப் புளியில் விடுவதெனப் பேசினர். அம்பலத்தானின் இடமறிந்து நடராசப் பெருமானைத் தில்லைக்குக் கொண்டு சென்றனர்.

    நடராசப் பெருமான் திருவாரூரில் சிலகாலம் இருந்தார். இன்றும் சிதம்பரச் செப்பேடுகள் திருவாரூர்க் கோயிலில் உள்ளன. குடிமியா மலை வழியாக மதுரை சென்ற நடராசர் பல ஆண்டுகள் கழித்து செஞ்சி மராட்டியர் காலத்தில் மீட்கப்பட்டுச் சிதம்பரம் வந்ததைச் செப்பேடுகள் கூறுகின்றன.
    ------

    103. நூல் அரங்கேற்றம்

      சுத்த குலசோ ழியருமுடி
              சூட்டும் காணி யாளர்களும்
      கத்தர் எனவே வரவழைத்துக்
              கவிக்கும் கனக மழைபொழிந்தே
      சித்தர் எனும்பொன் வைத்தவர்சந்
              நிதியில் சதகம் அரங்கேற
      வைத்த அருணா சலராயன்
              வாழ்வாம் சோழ மண்டலமே.

    சோழிய வேளாளர் குலத்தில் தோன்றியவரும், சோழ மன்னர்க்கு முடிசூட்டும் உரிமையுடையவரும் ஆகிய சித்தாமூர் நள்ளாறு வைத்தியலிங்கம் அவர்கள் மகனான அருணாசலம் என்பவர் ஆத்மநாத தேசிகரிடம் வேண்டிக்கொள்ள தேசிகர் சோழமண்டல சதகம் பாடினார். சோழமண்டல சதகம் சித்தாமூர் பொன்வைத்தநாதர் சந்நிதியில் அரங்கேறியது.
    --------------

    104. வாழி

      அளகை ராசன் வாழிபொன்னி
              ஆறு வாழி முகில்வாழி
      புளகம் மிகுசோ ழியர்வாழி
              பொன்வைத் தவர்சந் நிதிவாழி
      தழையும் சதகம் வாழிகொழு
              மீதிவாழி சோணாட்டில்
      வளரும் குடிகள் மிகவாழி
              வாழி சோழ மண்டலமே.

    தஞ்சை அரசன், பொன்னி ஆறு, மேகம், சோழியர், சித்தாமூர் பொன்வைத்த ஈசுவரன் சந்நிதி, சதகநூல், கொழுமுனை, சோழநாட்டுக் குடிகள் ஆகியவைகட்கு வாழ்த்துக் கூறப்படுகிறது.
    -----

    105. வாழி

      சத்திரிபதியாம் சகசிமக ராசன் வாழி
              தஞ்சைநகர் வாழிசமஸ் தானம் வாழி
      அத்தர்பொன்வைத் தவரும்அகி லாண்டம் வாழி
              அருள்வாழி இசைந்தரா மப்பர் வாழி
      உத்தமவே ளாளர்குல உயர்சித் தாமூர்
              ஊரிலுள்ளோர் அனைவர்களும் உவந்து வாழி
      வைத்தசோ ழியர்குடிகள் அனைத்தும் வாழி
              வையகமெல் லாம்தழைத்து வாழி தானே.

    சகசி அரசர் (1684 - 1711), தஞ்சை நகரம், சமஸ்தானம் சித்தாமூர் பொன்வைத்த நாதர், அகிலாண்டவல்லி, இராமப்பர் சித்தாமூர் வேளாளர்கள், சோழியக் குடிகள் ஆகியோருக்கு வாழ்த்துக் கூறப்படுகிறது.
    ---------------

    106. நூல் இயற்றிய காலம்

      சீர்கொள் பிரபவ வருடம்
              திகழும் இடபத் திங்கள்
      நார்கொள் இருபான் தேதி
              நவிலும் பானு வாரம்
      கார்கொள் அமர பக்கம்
              கருதும் தசமி திதியே
      ஏர்கொண்டு இலங்கும் இருபத்து
              ஏழாம் நட்சத் திரமே.

    107.
      இன்னண ஆய நாளே
              எழுதினான் கன்னல் வேளூர்
      மன்னிடும் ஆன்ம நாத
              மாப்பெரும் குரவன் ஆவான்
      மன்னிய வளம்சூழ் சோழ
              மண்டல சதகம் தன்னைச்
      சொன்னநூற் றைந்து பாவாய்
              சொல்லினில் துலங்க மாதோ!

    19.5.1723 அன்று வேளூர் ஆத்மநாத தேசிகர் ‘சோழமண்டல சதகம்’ என்னும் இந்நூலை 105 பாக்களில் எழுதி முடித்தார்.

    முதல் பாடலில் காணும் பஞ்சாங்கக் குறிப்புக்கள் அனைத்தும் சோபன (1723-24) ஆண்டிற்குப் பொருந்தி வருகிறது. பிரபவ (1726 - 27) ஆண்டுக்கு பொருந்தி வரவில்லை. எனவே சோபன ஆண்டே கொள்ளப்பட்டது.
    ------

    பாடல் முதல் குறிப்பு

      அங்கார் - 12 உரைசெய் - 23
      அஞ்சாது 18 உலகில் 85
      அண்டம் 35 உறும்தென் 69
      அந்நாள் 7 எட்டுத்திசை 72
      அளகை 105 எண்ணத் தகும்பார் 75
      அளிக்கும் 94 எந்தக் குலத்தில் 17
      அறங்கூர் 70எந்த நதியை 11
      ஆக்கம் - 54 எந்த நாடு 99
      ஆயநீதி - 21 எல்லா உயிர் 6
      ஆய்ந்த - 39 எல்லா விளக்கு 64
      ஆரவார - 98ஏட்டில் 55
      ஆன்பால் - 82ஏரின் 62
      இசைக்கார்- 48ஒத்தது 67
      இடமண்டி - 88ஒத்தார் 95
      இளையான் - 19ஒருவாமிழு 29
      ஈழநீத்தோன்-84ஓதுமாண் 51
      உடையார் -30ஓரூரை 3

      கண்டன் 32செறிமான் 50
      கண்ணார் 93 சேணார் 16
      கரங்கள் 8 தஞ்சை 25
      கருணாகரன் 91 தண்ணீர் 43
      களத்தில் 97 தரிசித்து 52
      கன்னிபாகர் 38 தரும்போர் 34
      காக்கும் 79 தரைமேல் 78
      குணக்கின் 47 தனதானி 74
      குணங்கொள் 81 தாழப்புதை 68
      குலத்தில் 86 தாளூர் 63
      கூலிக்கு 20 திண்மை 71
      கொட்டமுடை 90 திருவளர் 2
      கொண்டலங் 1 திறையின் 56
      கோலாகல 96 தீரம் 73
      சுத்தகுல 103 துதிக்கும் 22
      செல்லார் 41 தெளிவந்து 102
      செல்லும் 13 தேங்கூர் 65

      தேனார் 45 பூணிலா 83
      தொண்டை 14 பூதம் 89
      தோளார் 101 பூமாது 9
      நல்லம் 59 பெற்று 80
      நாமேவிய 87 பேசும் 49
      நிச்சமுற 100 பொய்யா 57
      நிதிசேர் 104 பொறையார் 15
      நினையும் 66 பொற்ற 92
      நீதி 10 பொன்பூத்த 4
      நூறு 53 பொன்றா 77
      பகர்ந்த 27 முட்டிலாத 40
      பயந்த 33 மேழிக்கொடி 44
      பரிஞ்ச 26 யோகாம் 61
      பள்ளமலியார் 28 வித்தூர் 60
      பாதி 37 விருந்து 46
      புரைதீர் 58 விள்ளும் 76
      புனையும் 42 வீடார் 24
      வீடு 36 வேழம் 31
      வெள்ளி 5


      -----

    பிற்சேர்க்கை

    சங்ககாலச் சோழர்கள்

    இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
    இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி
    இளம்பெரும் சென்னி
    உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி
    கரிகால் பெருவளத்தான்
    காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி
    குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவன்
    குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
    கோச்செங்கணான்
    கோப்பெருஞ் சோழன்
    சேட்சென்னி நலங்கிள்ளி
    செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி
    தித்தன்
    நல்லுருத்திரன்
    நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்
    நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி
    போர்வைக்கோப் பெருநற்கிள்ளி
    மணக்கிள்ளி
    முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி
    வேல்பல் தடக்கைப் பெருவிறல் கிள்ளி

    இளஞ்சேட்சென்னி எனப் பெயர்கொண்ட மூவரையும் ஒருவராகவும் கொள்வர். அடைமொழியின்றி நெடுங்கிள்ளி, நலங்கிள்ளி, கிள்ளிவளவன் என்று சிலர் குறிக்கப்பெறுகின்றனர். பெருஞ்சோழன், பெருங்கோக்கிள்ளி, தேர்வண்கிள்ளி, பெரும்பூட் சென்னி, பொலம்பூட்சென்னி என்று சிலர் குறிக்கப்பெறுகின்றனர். சங்ககாலச் சோழ மரபில் கிள்ளி, சென்னி என இரு மரபு இருந்துள்ளமை பெறப்படும். கிள்ளி மரபினர் உறையூரிலும், சென்னி மரபினர் புகாரிலும் ஆண்டிருக்கலாம்.

    முத்தரையர்
    பெரும்பிடுகு முத்தரையன் (குவாவன் மாறன்) 655 - 680
    இளங்கோவதி அரையன் (மாறன் பரமேசுவரன்) 680 - 705
    பெரும்பிடுகு முத்தரையன் (சுவரன் மாறன்) 705 - 745
    விடேல் விடுகு விழுப்பேரதி அரையன் (சாத்தன் மாறன்) 745 - 770
    மாற் பிடுகு (பேரதியரையன்) 770 - 791
    விடேல் விடுகு முத்தரையன் (குவாவன் சாத்தன்) 791 - 826
    சாத்தன் பழியிலி 826 - 851

    இவர்களது தலைநகர் நியமம். சிலர் செந்தலை (சந்திரலேகைச் சதுர்வேதமங்கலம்), தஞ்சை என்றும் கூறுவர்.

    பிற்காலச் சோழர்கள்

    விசயாலய சோழன் (846 - 881)
    முதல் ஆதித்த சோழன் (871 - 907)
    முதல் பராந்தக சோழன் (907 - 953)
    கண்டராதித்த சோழன் (950 - 957)
    அரிஞ்சய சோழன் (956 - 957)
    இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் (957 - 970)
    உத்தம சோழன் (970 - 985)
    முதல் இராசராச சோழன் (985 - 1014)
    முதல் இராசேந்திர சோழன் (1012 - 1044)
    முதல் இராசாதி ராச சோழன் (1018 - 1054)
    இரண்டாம் இராசேந்திர சோழன் (1051 - 1063)
    வீரராசேந்திர சோழன் (1063 - 1070)
    அதிராசேந்திர சோழன் (1070)
    முதல் குலோத்துங்க சோழன் (1070 - 1120)
    விக்கிரம சோழன் (1118 - 1136)
    இரண்டாம் குலோத்துங்க சோழன் (1133 - 1150)
    இரண்டாம் ராசராச சோழன் (1146 - 1163)
    இரண்டாம் ராசாதிராச சோழன் (1163 - 1178)
    மூன்றாம் குலோத்துங்க சோழன் (1178 - 1218)
    மூன்றாம் ராசராச சோழன் (1216 - 1256)
    மூன்றாம் ராசேந்திர சோழன் (1246 - 1279)

    சோழர் செப்பேடுகள்
    பேரையூர்ச் செப்பேடு I - கரிகால் சோழன்
    பேரையூர்ச் செப்பேடு II - கரிகால் சோழன்
    வேளஞ்சேரிச் செப்பேடு - முதல் பராந்தக சோழன்
    உதயேந்திரம் செப்பேடு - முதல் பராந்தக சோழன்
    அன்பில் செப்பேடு - சுந்தரசோழன்
    திருச்செங்கோட்டுச் செப்பேடு I - சுந்தரசோழன்
    திருச்செங்கோட்டுச் செப்பேடு II - சுந்தரசோழன்
    பள்ளன் கோயில் செப்பேடு - சுந்தரசோழன்
    சென்னை அருங்காட்சியச் செப்பேடு - உத்தமசோழன்
    லெய்டன் பெரிய செப்பேடு - முதல் இராசராச சோழன்
    கரந்தைச் செப்பேடு - முதல் இராசசேந்திர சோழன்
    கரந்தை உதிரிச் செப்பேடு - முதல் இராசசேந்திர சோழன்
    திருவாலங்காட்டுச் செப்பேடு - முதல் இராசசேந்திர சோழன்
    திருக்களர்ச் செப்பேடு I - முதல் இராசசேந்திர சோழன்
    எசாலம் செப்பேடு - முதல் இராசசேந்திர சோழன்
    திருக்களர்ச் செப்பேடு II - முதல் இராசாதிராச சோழன்
    கல்கத்தா அருங்காட்சியகச் செப்பேடு - வீரராசேந்திர சோழன்
    திருக்களர்ச் செப்பேடு III - முதல் குலோத்துங்க சோழன்
    லெய்டன் சிறிய செப்பேடு - முதல் குலோத்துங்க சோழன்
    பம்பாய் பிரின்ஸ் ஆப் வேல்ஸ்
    அருங்காட்சியகச் செப்பேடு I - முதல் குலோத்துங்க சோழன்
    பம்பாய் பிரின்ஸ் ஆப் வேல்ஸ்
    அருங்காட்சியகச் செப்பேடு II - இரண்டாம் குலோத்துங்க சோழன்
    திருக்களர்ச் செப்பேடு IV - இரண்டாம் இராசாதிராச சோழன்
    திருக்களர்ச் செப்பேடு V - மூன்றாம் குலோத்துங்க சோழன்
    வேதாரணியம் செப்பேடு - இராசராசேந்திர சோழ ராசர்கள்
    பாண்டவர்மங்கலம் செப்பேடு - சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன்

    இவை அனைத்தும் ஒன்றாகத் தொகுக்கப்பெறல் வேண்டும்.

    தஞ்சை நாயக்கர்

    செவ்வப்ப நாயக்கன் 1532 - 1580
    அச்சுதப்ப நாயக்கன் 1580 - 1600
    இரகுநாத நாயக்கன் 1600 - 1633
    விசயராகவ நாயக்கர் 1633 - 1673
    மன்னார்தாசு 1674

    தஞ்சை மராட்டியர்

    முதலாம் ஏகோசி 1676 - 1684
    சகசி 1684 - 1711
    முதலாம் சரபோசி 1711 - 1729
    துக்கோசி 1729 - 1735
    இரண்டாம் ஏகோசி 1735 - 1737
    சுசான்பாய் 1737 - 1738
    காட்டுராசா 1738
    சையாசி 1738
    பிரதாபசிங் 1739 - 1763
    துளசா 1763 - 1787
    அமர்சிங் 1787 - 1798
    இரண்டாம் சரபோசி 1798 - 1832
    சிவாசி 1832 - 1855
    ----------

    இராசராசன் காலத்தில் சோழ மண்டலத்தில் இருந்த வளநாடுகள்

    அருமொழிதேவ வளநாடு
    க்ஷத்திரிய சிகாமணி வளநாடு
    உய்யக்கொண்டான் வளநாடு
    நித்தவினோத வளநாடு
    பாண்டிய குலாசனி வளநாடு
    கேரளாந்தக வளநாடு
    இராசாசிரய வளநாடு
    இராசராச வளநாடு
    இராசேந்திர சிங்க வளநாடு

    வளநாடுகள் அனைத்தும் இராசராசன் பெயரிலேயே அமைந்திருந்தன. பிற்காலத்தில் வளநாடுகள் பெருகின. அவைகளைப் பின்வரும் பட்டியலில் காண்க.

    வளநாடும் நாடுகளும் /

    [பிறைக்குறிக்குள் வட்டங்கள்]
    அபீமானஜீவ வளநாடு, கேரளாந்தக வளநாடு
    ஆதனூர் நாடு [குழித்தலை]
    அதிராசராச வளநாடு, க்ஷத்திரிய சிகாமணி வளநாடு
    தேவூர் நாடு [நாகபட்டினம்]
    திருவாரூர்க் கூற்றம் [திருவாரூர்]
    அருமொழிதேவ வளநாடு
    அளநாடு [நாகபட்டினம்]
    ஆர்வலக் கூற்றம் [மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி]
    சேற்றூர்க் கூற்றம் [குடந்தை, நன்னிலம்]
    சோவூர்க் கூற்றம்
    இடை அள நாடு [நாகபட்டினம்]
    இங்கள் நாடு, இங்கநாடு [நன்னிலம்]
    மங்கல நாடு [நன்னிலம்]
    முழைக்காட்டு நாடு
    நென்மலி நாடு [மன்னார்குடி]
    பிராங்காழிடை நாடு
    புலியூர் நாடு [நாகபட்டினம்]
    புறங்கரம்பை நாடு [மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி]
    தக்களூர் நாடு
    தேவூர் நாடு [நாகபட்டினம்]
    திருநறையூர் நாடு [கும்பகோணம்]
    வலிவலக் கூற்றம் [நாகபட்டினம்]

    வண்டாழை வேளூர்க் கூற்றம் [நாகபட்டினம், திருத்துறைப்பூண்டி]
    பூபால குலவல்லி வளநாடு, உய்யக்கொண்டார் வளநாடு
    அம்பர் நாடு, அம்பர் வட்டம் [நன்னிலம், மயிலாடுதுறை]
    திரைமூர் நாடு [குடந்தை, மயிலாடுதுறை]
    திருநறையூர் நாடு [கும்பகோணம்]
    புவனமுழுதுடை வளநாடு, இராசாச்சிரய வளநாடு
    பொய்கை நாடு [தஞ்சை]
    நித்தவிநோத வளநாடு
    ஆவூர்க் கூற்றம் [குடந்தை, பாபநாசம்]
    கரந்தார நாடு [ராசராச வளநாடு]

    கரம்பை நாடு
    கிழார்க் கூற்றம் [தஞ்சை, பாபநாசம்]
    முடிச்சோழநாடு [பாபநாசம்]
    நல்லூர் நாடு [பாபநாசம்]
    பாம்புணிக் கூற்றம் [மன்னார்குடி]
    தஞ்சாவூர்க் கூற்றம் [தஞ்சை]
    வெண்ணிக் கூற்றம் [மன்னார்குடி]

    வீரசோழ வளநாடு

    பாண்டிய குலபதி வளநாடு

    ஆர்க்காட்டுக் கூற்றம் [தஞ்சை]
    எயில்நாடு / எயிநாடு [தஞ்சை]
    கிளியூர் நாடு / அக, புற [சிதம்பரம்]
    தஞ்சாவூர்க் கூற்றம் [தஞ்சை]
    விளா நாடு / விளாத்தூர் நாடு [திருச்சி]
    பாண்டிய குலாசனி வளநாடு
    ஆர்க்காட்டுக் கூற்றம் [தஞ்சை]
    கீழ் செங்கிளி நாடு, மீசெங்கிளி நாடு [குளத்தூர்]
    வட சிறுவாயில் நாடு [குளத்தூர்]
    சுண்டை மூலை நாட
    ஏரியூர் நாடு / ஏரி நாடு [தஞ்சை]
    எயில் நாடு [தஞ்சை]
    இடையாற்று நாடு [தஞ்சை]
    வட கவிர நாடு [திருச்சி, ஆலங்குடி]
    கீழ் சூடி நாடு, சூரி [ஆலங்குடி]
    கிளியூர் நாடு [திருச்சி]
    அகக்கிளியூர் நாடு [திருச்சி]
    புறக்கிளியூர் நாடு [திருச்சி]
    மீ பொழில் நாடு
    பனட்காட்டு நாடு [ஆலங்குடி]பனங்கிய நாடு
    பெருவாயில் நாடு [குளத்தூர்]
    பூதலூர் வட்டம் [தஞ்சை]

    புன்றில் கூற்றம் புன்று [பட்டுக்கோட்டை]
    தஞ்சாவூர்க் கூற்றம் [தஞ்சை]
    விளாநாடு [திருச்சி]
    இராசாதிராசவளநாடு [இராசேந்திரசிம்ம வளநாட்டில் பிரிந்தது]

    அதியமங்கை நாடு [சீர்காழி]
    குறுக்கை நாடு [மயிலாடுதுறை]

    குறுஞ்சி அள நாடு
    நல்லாற்றூர் நாடு [குடந்தை, மயிலாடுதுறை]
    நாங்கூர் நாடு [சீர்காழி]
    திருக்கழுமல நாடு [மயிலாடுதுறை, சீர்காழி]
    திருவாலி நாடு / ஆலி [சீர்காழி]
    திருவிந்தளூர் நாடு [மயிலாடுதுறை]
    வெண்ணையூர் நாடு [சீர்காழி]
    இராசகம்பீர வளநாடு [கேரளாந்தக வளநாட்டில் பிரிந்தது]
    சூரலூர் நாடு
    குறுநாகன் நாடு [குறுநாகை / குளித்தலை]
    உறையூர்க் கூற்றம் [திருச்சி, குளித்தலை]
    விளா நாடு [திருச்சி]


    இராசமகேந்திர வளநாடு [கேரளாந்தக வளநாட்டில் பிரிந்தது]
    குறுநாகன் நாடு [குளித்தலை]
    மீகோட்டு நாடு [குளித்தலை]
    உறையூர் நாடு [திருச்சி, குளித்தலை]
    விளா நாடு [திருச்சி]

    இராச நாராயண வளநாடு [உய்யக் கொண்டார் வளநாடு]
    ஆக்கூர் நாடு [மயிலாடுதுறை]
    அம்பர் நாடு [மயிலாடுதுறை, நன்னிலம்]
    திருவழுந்தூர் நாடு [மயிலாடுதுறை]
    விளை நாடு [மயிலாடுதுறை]

    தென்கரை இராசராச வளநாடு
    காந்தார நாடு
    தென்கவிர நாடு [திருச்சி, ஆலங்குடி]

    கீழ்வேங்கை நாடு
    குன்றில் கூற்றம்
    பாலையூர் நாடு
    பேராவூர் நாடு [மயிலாடுதுறை]
    திறைமூர் நாடு [குடந்தை, மயிலாடுதுறை]
    திருநறையூர் நாடு [குடந்தை]
    திருவழுந்தூர் நாடு [மயிலாடுதுறை]
    வெண்ணாடு [மயிலாடுதுறை, நன்னிலம்]
    விளை நாடு [மயிலாடுதுறை]
    விக்கிரம சோழ வளநாடு [விருதராச பயங்கர வளநாடு]
    அண்டாட்டுக் கூற்றம் [குடந்தை, பாபநாசம்]
    இன்னம்பர் நாடு [குடந்தை, பாபநாசம்]
    மிறைக் கூற்றம் [தஞ்சை]
    விசயராசேந்திர வளநாடு [அருமொழி தேவ வளநாடு]
    இடை அள நாடு [நாகை]
    பனங்குடி நாடு
    புலியூர் நாடு [நாகை]
    தேவூர் நாடு [நாகை]
    வீரராசேந்திர வளநாடு [இராசாச்சிரய வளநாடு]
    மீமலை [முசிறி]
    வீரராசேந்திர வளநாடு [உய்யக் கொண்டார் வளநாடு]
    திருவழுந்தூர் வளநாடு [மயிலாடுதுறை]
    விருதராசபயங்கர வளநாடு [இராசேந்திரசிம்ம வளநாட்டில் பிரிந்தது]
    இன்னம்பர் நாடு [குடந்தை, பாபநாசம்]
    கீழ்க் கானாடு [சிதம்பரம்]
    கூடல் நாடு
    குறுக்கை நாடு [மயிலாடுதுறை]
    மண்ணி நாடு [குடந்தை]
    மேற்கா நாடு [சிதம்பரம்]
    மிழலை நாடு [கும்பகோணம்]
    நல்லாற்றூர் நாடு [குடந்தை, மயிலாடுதுறை]
    பருவூர் நாடு
    விளந்தையில் கூற்றம் [சிதம்பரம் வட்டம்]
    விளத்தூர் நாடு [குடந்தை]
    பன்றியூர் நாடு
    பரண்டையூர் நாடு
    பரவை நாடு
    பொய்யில் கூற்றம்

    புலிவலக் கூற்றம்
    புன்றில் கூற்றம் [பட்டுக்கோட்டை]
    வல்ல நாடு [ஆலங்குடி]
    வரகூர் நாடு
    வடகரை இராசராச வளநாடு [இராசாச்சிரய வளநாடு]
    அழகரை நாடு [முசிறி]
    கலாரக் கூற்றம் [திருச்சி, லால்குடி]
    மீமலை நாடு [முசிறி]
    பாச்சில் கூற்றம் [லால்குடி]
    பிடவூர் நாடு [லால்குடி]
    பொய்கை நாடு [தஞ்சை]
    ஊற்றத்தூர் நாடு [பெரம்பலூர்]
    வடவழி நாடு [லால்குடி]
    கீழ்வள்ளுவப்பாடி நாடு [முசிறி]
    இராசாச்சிரய வளநாடு [மழநாடு]
    செம்புறைக் கண்டம் [லால்குடி]
    கலாரக் கூற்றம் [திருச்சி, லால்குடி]
    மீமலை நாடு [முசிறி]
    பாச்சில் கூற்றம் [லால்குடி]
    திருப்பிடவூர் நாடு [லால்குடி]
    வடவழி நாடு [லால்குடி]
    வெள்ளையூர்க் கண்டம் [லால்குடி]
    வெண்கோன்குடிக் காண்டம் [லால்குடி]
    --------

    இராசசுந்தரி வளநாடு [உய்யக் கொண்டார் வளநாடு]
    பேராவூர் நாடு [மயிலாடுதுறை]
    இராசேந்திர சோழவளநாடு [அருமொழிதேவ வளநாடு]
    அளநாடு [நாகை]
    ஆர்வலக் கூற்றம் [மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி]
    இடை அளநாடு [நாகை]
    தென்மலி நாடு [மன்னார்குடி]
    திரிபுவன முழுதுடை வளநாடு [இராசாச்சிரய வளநாடு]
    கலாரக் கூற்றம் [திருச்சி, லால்குடி]
    பிடவூர் நாடு [லால்குடி]
    பொய்கை நாடு [தஞ்சை]
    --------

    தியாகவல்லி வளநாடு [இராசாச்சிரய வளநாடு]
    மீமலை [முசிறி]
    பொய்கை நாடு [தஞ்சை]
    -----

    உலக முழுதுடை வளநாடு [இராசாச்சிரய வளநாடு]
    கலாரக் கூற்றம் [திருச்சி, லால்குடி]
    வடவழி நாடு [லால்குடி]
    --------

    உலகுடை முக்கோக்கிழானடி வளநாடு [இராசாச்சிரிய வளநாடு]
    கலாரக் கூற்றம் [திருச்சி, லால்குடி]
    பொய்கை நாடு [தஞ்சை]
    ------

    உலகுய்யக்கொண்ட சோழ வளநாடு [உய்யக்கொண்டார் வளநாடு]
    வென்னாடு [மயிலாடுதுறை, நன்னிலம்]
    உலகுய்யக்கொண்ட சோழ வளநாடு [விருதராச பயங்கர வளநாடு]
    அண்டாட்டுக் கூற்றம் [குடந்தை, பாபநாசம்]
    -----

    உய்யக்கொண்டார் வளநாடு
    ஆக்கூர் நாடு [மயிலாடுதுறை]
    அம்பர் நாடு [மயிலாடுதுறை, நன்னிலம்
    குறும்பூர் நாடு [மயிலாடுதுறை, காரைக்கால்]
    மருகல் நாடு [நன்னிலம்]
    மாத்தூர் நாடு
    முழையூர் நாடு [நன்னிலம்]
    பாம்பூர் நாடு [குடந்தை]
    பாம்புர நாடு [நன்னிலம்]
    ------

    சுத்தமலி வளநாடு [நித்தவிநோத வளநாடு பிரிந்தது]
    முடிச்சோழ நாடு [பாபநாசம்]
    பாம்புணிக் கூற்றம் [மன்னார்குடி]
    வெண்ணிக் கூற்றம் [மன்னார்குடி]
    -----

    தீன சிந்தாமணி வளநாடு, உம்பளநாடு
    குன்றூர் நாடு [திருத்துறைப்பூண்டி]
    தீன சிந்தாமணி வளநாடு, பாண்டிகுலாசனி வளநாடு
    ஆர்க்காட்டுக் கூற்றம் [தஞ்சை]
    மீ செங்கிளி நாடு [குளத்தூர்]
    கலார்க் கூற்றம் [திருச்சி, லால்குடி]
    -------

    விளாநாடு விளாத்தூர் நாடு [திருச்சி]
    கேயமாணிக்க வளநாடு க்ஷத்திரிய சிகாமணி வளநாடு
    அளநாடு [நாகபட்டினம்]
    மருகல் நாடு [நன்னிலம்]
    முழையூர் நாடு [நன்னிலம்]
    பட்டனக் கூற்றம் [நாகை]
    திருவாரூர்க் கூற்றம் [திருவாரூர்]
    --------

    கேய விநோத வளநாடு, ராசாச்சிரய வளநாடு
    மிறைக்கூற்றம், விறைக்கூற்றம் [தஞ்சை]
    பொய்கை நாடு [தஞ்சை]
    -----

    இரட்டபாடி கொண்ட சோழவளநாடு [கேரளாந்தக வளநாட்டில் பிரிந்தது]
    அன்னவாயில் கூற்றம் [குளத்தூர்]
    குன்றியூர் நாடு, குன்றுசூழ் நாடு [குளத்தூர்]
    ஒல்லையூர்க் கூற்றம் [குளத்தூர்]
    உறத்தூர்க் கூற்றம் [குளித்தலை, திருச்சி, குளத்தூர்]
    -------

    ஐயங்கொண்ட சோழ வளநாடு, உய்யக்கொண்டர் வளநாடு
    ஆக்கூர் நாடு [மயிலாடுதுறை]
    குறும்பூர் நாடு [மயிலாடுதுறை, காரைக்கால்]
    பேராவூர் நாடு [மயிலாடுதுறை]
    திருவழுந்தூர் நாடு [மயிலாடுதுறை]
    விளை நாடு [மயிலாடுதுறை]
    --------

    ஐயசிங்ககுலகாலவளநாடு [பாண்டி குலாசனி வளநாட்டில் பிரிந்தது]
    மீ செங்கிளி நாடு [குளத்தூர்]
    சிறுவாயில் நாடு [குளத்தூர்]
    தென் சிறுவாயில் நாடு [குளத்தூர்]
    வட சிறுவாயில் நாடு [குளத்தூர்]
    தென் கவிர நாடு
    குளமங்கல நாடு [ஆலங்குடி, குளத்தூர்]
    தென் பனங்காடு நாடு [ஆலங்குடி, குளத்தூர்]
    வடபனங்காடு நாடு [ஆலங்குடி, குளத்தூர்]
    பெருவாயில் நாடு [குளத்தூர்]

    தென் மீ பொழில் நாடு

    கடலடையாது இலங்கைகொண்ட சோழ வளநாடு, இரட்டபாடி கொண்ட சோழ வளநாடு

    அன்னவாயில் கூற்றம் [குளத்தூர்]

    கூடலூர் நாடு

    குன்றியூர் நாடு, குன்றுசூழ் நாடு [குளத்தூர்]
    ஒல்லையூர்க் கூற்றம் [குளத்தூர்]
    உறத்தூர்க் கூற்றம் [குளித்தலை, திருச்சி, குளத்தூர்]
    வயலக நாடு [குளத்தூர்]
    கல்யாணபுரங்கொண்ட சோழ வளநாடு
    முடிச்சோழ நாடு [பாபநாசம்]
    பாம்புணிக் கூற்றம் [மன்னார்குடி]

    கரிகாலக்கன்ன வளநாடு

    வள்ளுவப்பாடி நாடு [முசிறி]
    மேல் வள்ளுவப்பாடி நாடு [முசிறி]
    வன்னாடு [பெரம்பலூர்]

    கேரளாந்தக வளநாடு
    ஆதனூர் நாடு [குளித்தலை]
    அன்னவாயில் கூற்றம் [குளித்தலை]

    சூரலூர்க் கூற்றம்

    கூடலூர் நாடு

    குன்றியூர் நாடு [குளத்தூர்]
    மீகோட்டு நாடு [குளித்தலை வட்டம்]
    ஒல்லையூர்க் கூற்றம் [குளத்தூர் வட்டம்]
    உறையூர்க் கூற்றம் [திருச்சி, குளித்தலை வட்டம்]
    உறத்தூர்க் கூற்றம் [குளித்தலை, திருச்சி, குளத்தூர் வட்டம்]
    விளா நாடு விளத்தூர் நாடு [திருச்சி வட்டம்]

    க்ஷத்திரிய சிகாமணி வளநாடு

    அளநாடு [நாகை]
    சேற்றூர் நாடு [குடந்தை, நன்னிலம்
    இங்கள் நாடு [நன்னிலம்]
    மருகல் நாடு [நன்னிலம்]
    முழையூர் நாடு [நன்னிலம்]
    பனையூர் நாடு [நன்னிலம்]
    பட்டனக் கூற்றம் [நாகை]
    தேவூர் நாடு [நாகை]
    திருநறையூர் நாடு [குடந்தை]
    திருவாரூர்க் கூற்றம் [திருவாரூர்]
    வேளாநாடு, வேளார் [நன்னிலம்]
    குலதீபசிகாமணி வளநாடு [க்ஷத்திரிய சிகாமணி வளநாடு]
    பனையூர் நாடு [நன்னிலம்]
    குலோத்துங்க சோழ வளநாடு [இராசாச்சிரய வளநாடு]
    பாச்சில் கூற்றம் [லால்குடி]
    பொய்கை நாடு [தஞ்சை]
    குலோத்துங்க சோழ வளநாடு [க்ஷத்திரிய சிகாமணி வளநாடு]
    அம்பர் நாடு (வட்டம்) [மயிலாடுதுறை, நன்னிலம்]
    சேற்றூர் நாடு [குடந்தை, நன்னிலம்]
    இங்கள் நாடு [நன்னிலம்]
    பனையூர் நாடு [நன்னிலம்]
    புலியூர் நாடு [நாகை]
    திருநறையூர் நாடு [குடந்தை]
    வேளா நாடு [நன்னிலம்]
    மும்முடிசோழ வளநாடு [க்ஷத்திரிய சிகாமணி வளநாடு]
    பனையூர் நாடு [நன்னிலம்]
    புறங்கரம்பை நாடு [மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி]
    வலிவலக் கூற்றம் [நாகை]
    வண்டாழை வேளூர்க் கூற்றம் [நாகை, திருத்துறைப்பூண்டி]

    இராசேந்திர சிம்ம வளநாடு

    அதிகமங்கை நாடு [சீர்காழி]

    அண்டாட்டுக் கூற்றம் [குடந்தை, பாபநாசம்]

    ஏமப்பேரூர் நாடு

    இன்னம்பர் நாடு [குடந்தை, பாபநாசம்]
    கார் நாடு [சிதம்பரம்]

    கொண்ட நாடு

    குன்றக் கூற்றம் [உடையார் பாளையம்]
    குறுக்கை நாடு [மயிலாடுதுறை]
    மண்ணி நாடு [குடந்தை]
    மிழலைக் கூற்றம் [குடந்தை]
    மிறைக் கூற்றம் [தஞ்சை]
    நல்லாற்றூர் நாடு [குடந்தை, மயிலாடுதுறை]

    நல்வயலூர்க் கூற்றம்

    நாங்கூர் நாடு [சீர்காழி]

    நெலுவூர் நாடு

    பருவூர்க் கூற்றம்

    பிடவூர் நாடு [லால்குடி]
    பொய்கை நாடு [தஞ்சை]
    திருக்கழுமல நாடு [சீர்காழி, மயிலாடுதுறை]
    திருவாலி நாடு [சீர்காழி]
    திருவிந்தளூர் நாடு [மயிலாடுதுறை]
    வெண்ணையூர் நாடு [சீர்காழி]
    விளத்தூர் நாடு [குடந்தை]
    தரணி முழுதுடைய வளநாடு [உம்பள நாடு]
    குன்றூர் நாடு [திருத்துறைப்பூண்டி]
    ---------

    சோழநாட்டில் ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்ற தலங்கள்

    காவிரி வடகரை

    திருச்சித்ர கூடம் [சிதம்பரம்],
    காழிச் சீராம விண்ணகரம் [சீர்காழி],
    திருமணி மாடக்கோயில், திருவைகுந்த விண்ணகரம்,
    திருஅரிமேய விண்ணகரம்,
    திரு அன்பில்,திருச்செம்பொன் செய்கோயில்,
    திரவண் புருடோத்தமம்,
    திரு நந்திபுர விண்ணகரம்,
    திருத்தெற்றியம்பலம்,
    திருமணிக்கூடம்,
    திருத்தேவனார்தொகை,
    திருக்காவளம்பாடி,
    திருப்பார்த்தன் பள்ளி, திருவாலித் திருநகரி,
    திருவெள்ளக்குளம், திருவிந்தளூர், திருவெள்ளியங்குடி
    திருப்புள்ளம் பூதங்குடி, திருஆதனூர், திருக்கூடலூர்,
    திருக்கவித்தலம், திருப்பேர் நகர், திருவரங்கம்,
    திருக்கரம்பனூர், திருவெள்ளறை.
    ---

    காவிரித் தென்கரை
    திருஉறையூர், திருத்தஞ்சை மாமணிக் கோயில்,
    திருக்கண்டியூர், திருக்குடந்தை, திருவழுந்தூர்,
    திருச்சிறு புலியூர், திருத் தலைச்சங்க நாண்மதியம்,
    திருநறையூர், திருவிண்ணகரம் (உப்பிலியப்பன் கோயில்),
    திருக்கண்ணபுரம், திருநாகை, திருக்கண்ணங்குடி,
    திருக்கண்ணமங்கை, திருச்சேறை.
    தேவாரப் பாடல் பெற்ற சோ நாட்டுத் தலங்கள் 190
    காவிரி வடகரைத் தலங்கள் 6
    சிதம்பரம் [தில்லை, திருக்கோயில்], திருவேட்களம்,
    திருநெல் வாயில் [சிவபுரி], திருக்கழிப்பாலை [காரைமேடு],
    திருநல்லூர்ப் பெருமணம் [ஆச்சாபுரம்],
    திரு மயேந்திரப்பள்ளி [கோயிலடிப் பாளையம்],
    திருமுல்லை வாயில் [தென்],
    திருக்கலிக்காமூர் [அன்னப்பன்பேட்டை],
    திருச்சாய்க் காடு [சாயாவனம்],
    திருப்பல்லவனீச்சரம் [காவிரிப்பூம்பட்டினம்],
    திருவெண்காடு [சுவேதாரண்யம்], திருக்காட்டுப்பள்ளி [கீழை],
    திருக்குருகாவூர் [திருமேனி வெள்ளடை],
    சீர்காழி, திருக்கோலக்கா [திருத்தாளமுடையார் கோயில்],
    திருப்புள்ளிருக்கு வேளூர் [வைத்தீசுவரன் கோயில்],
    திருக்கண்ணார் கோயில் [குறுமாணக்குடி],
    திருக்கடைமுடி [கீழுர், கீழையூர்], திருநின்றியூர், திருப்புன்கூர்,
    திருநீடூர், திரு அன்னியூர் [பொன்னூர்], திருவேள்விக்குடி,
    திருஎதிர் கொள்பாடி [மேலைத் திருமணஞ்சேரி],
    திருமணஞ்சேரி [கீழை], திருகுறுக்கை வீரட்டம்,
    திருக்கருப்பறியலூர் [தலைஞாயிறு - மேலைக்காழி],
    திருக்குரக்குக்கா, திருவாளொளிபுற்றூர் [திருவாழ்கொளிபுத்தூர்],
    திருமண்ணிப் படிக்கரை [இலுப்பைப்பட்டு], திரு ஓமாம் புலியூர்,
    திருக்கானாட்டு முள்ளூர், திரு நாரையூர்,
    திருக்கடம்பூர் [மேலைக்கடம்பூர்], திருப்பந்தணை நல்லூர்,
    திருக்கஞ்சனூர், திருக்கோடிக்கா, திருமங்கலக்குடி,
    திருப்பனந்தாள், திருஆய்ப்பாடி, திருச்சேய்ஞலூர்,
    திருந்துதேவன்குடி, திருவியலூர், திருக்கொட்டையூர்,
    திருஇன்னம்பர், திருப்புறம்பயம், திருவிசயமங்கை,
    திருவைகாவூர் [வில்வவனம்], திருவடகுரங்காடுதுறை,
    திருப்பழனம், திருவையாறு,
    திருநெய்த்தானம் [தில்லைத்தானம்], திருப்பெரும்புலியூர்,
    திருமழபாடி, திருப்பழுவூர் [கீழை], திருக்கானூர்,
    திருஅன்பில் ஆலந்துறை, திருமாந்துறை,
    திருப்பாற்றுறை, திருஆனைக்கா, திருப்பைஞ்ஞீலி [லால்குடி],
    திருப்பாச்சிலாச்சிரமம் [திருவாசி], திருஈங்கோய்மலை,

    காவிரித் தென்கரைத் தலங்கள்
    திருவாட்போக்கி [இரத்தனகிரி, மாணிக்கமலை],
    திருக்கடம்பந்துறை [கடம்பர் கோயில், குழித்தலை],
    திருப்பராய்த்துறை
    திருக்கற்குடி மலை [உய்யக்கொண்டான் பெருமலை],
    திருமூக்கீச்சாம் [உறையூர்], திருச்சிராப்பள்ளி,
    திரு எறும்பியூர் [திருவெறும்பூர்], திருநெடுங்களம்,
    மேலைத் திருக்காட்டுப்பள்ளி, திருவாலம்பொழில்,
    திருப்பூந்துருத்தி, திருக்கண்டியூர், வீரட்டானம்,
    திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருத்தென்குடி [திட்டை],
    திருப்புள்ளமங்கை [பசுபதி கோயில்]
    திருச்சக்கரப்பள்ளி, அய்யம்பேட்டை,
    திருக்கருகாவூர் [திருக்களாவூர்], திருப்பாலைத்துறை [பாபநாசம்],
    திருநல்லூர், திருஆவூர் [பசுபதீசுரம்], திருச்சத்திமுற்றம்,
    திருப்பட்டீச்சுரம், திருப்பழையறை [வடதளி], திருவலஞ்சுழி,
    திருக்குடந்தைக் காரோணம் [கும்பகோணம் சோமேசுவரர்],
    திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் [கும்பகோணம் நாகேசுவரர்],
    திருக்குடமூக்கு, திரு நாகேச்சுரம்,
    திருவிடைமருதூர் [மத்தியார்ச்சுனம்],
    திருத்தென்குரங்காடுதுறை, ஆடுதுறை,
    திருநீலக்குடி [தென்னல்குடி], திருவைகல் மாடக்கோயில்,
    திருநல்லம் [கோனேரி ராசபுரம்], திருக்கோழம்பம்,
    திருவாவடுதுறை, திருத்துருத்தி [குற்றாலம்],
    திருவழுந்தூர் [தேரழுந்தூர்], திருமயிலாடுதுறை [மாயூரம்],
    திருவிளநகர், திருப்பறியலூர்,
    திருச்செம்பொன்பள்ளி [செம்பனார் கோயில்], திருஞனிபள்ளி,
    திருவலம்புரம் [பெரும்பள்ளம்], திருத்தலைச்சங்காடு,
    திரு ஆக்கூர் [தான்தோன்றி மாடம்], திருக்கடவூர் [வீரட்டானம்],
    திருக்கடவூர் மயானம், திருவேட்ட குடி,
    திருத்தெளிச்சேரி [கோயிற்பத்து], திருத்தருமபுரம்,
    திருநள்ளாறு, திருக்கோட்டாறு,
    திருஅம்பர் [பெருந்திருக்கோயில்],
    திருஅம்பர் மாகாளம் [கோயில் திருமாகாளம், அம்பல்],
    திரு மீயச்சூர், திரு மீயச்சூர் இளங்கோயில், திருத்திலதைப்பதி,
    திருப்பாம்புரம், திருச்சிறுகுடி, திரு வீழிமிழலை,
    திரு வன்னியூர், திருக்கருவிலி,
    திருப்பேணுபெருந்துறை [திருப்பந்துறை],
    திரு நறையூர்ச் சித்தீச்சுரம்,
    திருஅரிசிற்கரைப் புத்தூர் [அழகார் புத்தூர்]
    திருச்சிவபுரம், திருக்கலயநல்லூர் [சாக்கோட்டை]
    திருக்கருக்குடி [மருதாந்தநல்லூர்], திருவாஞ்சியம்,
    திருநன்னிலத்துப் பெருங்கோயில், திருக்கொண்டீச்சரம்
    திருப்பனையூர், திருவிற்குடி, திருப்புகலூர்,
    திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம், திருஇராமனதீச்சுரம்,
    திருப்பயற்றூர் [திருப்பயற்றங்குடி]
    திருச்செங்காட்டங்குடி [கணபதீச்சரம்], திருமருகல்,
    திருச்சாத்தமங்கை அயவந்தி,
    திருநாகைக் காரோணம் [நாகபட்டினம்]
    திருச்சிக்கல், திருக்கீழ்வேளூர், திருத்தேவூர்,
    திருப்பள்ளியின் முக்கூடல், திருவாரூர் அராநெறி,
    திருவாரூர்ப் பூங்கோயில் [மூலட்டானம்]
    திருவாரூர்ப் பரவையுண்மண்டளி,
    திருவிளமர், திருக்கரவீரம் [கரையபுரம்]
    திருப்பெருவேளூர் [காட்டூர் ஐயன்பேட்டை]
    திருத்தலையாலங்காடு, திருக்குடவாயில்,
    திருச்சேறை [உடையார் கோயில்], திருநாலூர் மயானம் [நாத்தூர்]
    திருக்கடுவாய்க்கரைப் புத்தூர் [ஆண்டாள் கோயில்]
    திருஇரும்பூளை [ஆலங்குடி]
    திருஅரதைப் பெரும்பாழி [அரித்துவார மங்கலம்]
    திருஅவளிவல்லூர், திருப்பரிசி நியமம் [பரிதியப்பர் கோயில்]
    திருவெண்ணியூர், திருப்பூவனூர்,
    திருப்பாதாளேச்சுரம் [பாம்பணி, பாமணி], திருக்களர்,
    திருச்சிற்றேமம் [சித்தாமூர்], திருவுசாத்தானம் [கோயிலூர்]
    திரு இடும்பாவனம், திருக்கடிக்குளம்,
    திருத்தண்டலை நீள்நெறி [தண்டலைச்சேரி], திருக்கோட்டூர்,
    திருவெண்டுறை, திருக்கொள்ளம்புதூர் [திருக்களம்பூர்]
    திருப்பேரெயில் [ஓகைப்பேரெயில்], திருக்கொள்ளிக் காடு,
    திருத்தெங்கூர் [திருத்தங்கூர்], திருநெல்லிக்கா,
    திருநாட்டியத்தான்குடி, திருக்காறாயில் [திருக்காறைவாசல்]
    திருக்கன்றாப்பூர், திருவலிவலம், திருக்கைச்சினம்,
    திருக்கோளிலி [திருக்குவளை], திருத்தென் திருவாய்மூர்,
    திருமறைக்காடு [வேதாரணியம்], திருஅகத்தியான்பள்ளி,
    திருக்கோடி குழகர் [குழகர் கோயில்]


This file was last updated on 28 Oct 2017.
,